Friday, April 7, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -9

 கிழிஞ்சதோட  முடிஞ்ச கேரக்டர் 

                        மேடை நாடகம் நடத்துவது மாதிரி  சிரமமான  செயல் வேறு இருக்க முடியாது என்பது எனது பட்டறிவில் உணர்ந்த உண்மை.. அதிலும் தொழில்முறையல்லாதவர்களை வைத்து, எழுதிய உரையாடல்களுக்கு உயிரூட்டி மேடையில் வெற்றி காண்பது என்பது மிக மிகக் கடினம்.

            ஆர்வக்கோளாறுல நடிக்கிறேன்னு  பாடத்தை வாங்கிப்புட்டு , ஒரு மாதகாலம் பயிற்சியும் பெற்று,  மேடை ஏறும்போது  படபடப்பாலும், பயத்தாலும் வசனங்களை மறந்து வேர்க்க விறுவிறுக்க நிக்கிறவங்க  ஒரு பக்கமுன்னா , மேடையில் எதிர்பாராமல் ஏற்படும் இடையூறுகளால் நாடகத்தின் போக்கையே மாற்றிவிடும் நண்பர்கள் இன்னொரு பக்கம்.

              ஒளிப்பதிவு செய்து தொகுத்து வெளியிடும் காணொளி நிகழ்ச்சிகளிலோ, சின்னத்திரை வண்ணத்திரை நிகழ்ச்சிகளிலோ , ஏன் வானொலி நிகழ்ச்சிகளாக இருந்தால்கூட ஒரு தவறு நடந்துவிட்டால் அதைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் ஒலி, ஒளிப் பதிவுகள் செய்து வெட்டி ஒட்டி சீர்செய்துவிட முடியும் இன்றைய மின்னணு தொழில் நுட்பத்தாலே.  தெருக்கூத்துகளில்கூட  தவறாப் பேசிட்டாச்  சப்பைக்கட்டு கட்டி சமாளிச்சுட முடியும். ஆனால் சமூக நாடகங்களில் ஒரு வசனமோ, ஒரு காட்சியோ பிறழ்ந்து போய்ட்டா  அதை எந்த நிலையிலும் ஈடு செய்ய முடியாது.

            அதுபோலத்தான் பாசத்தின் முடிவு நாடகத்தில் விறைப்பாகவும், கடுமையாகவும் நடிக்க வேண்டிய காவல் துறை அதிகாரியாக நடிச்சவர்  முதல் அரங்கேற்றம் என்பதால் , எதிரே இருந்த கூட்டத்தைப் பார்த்துப் பயந்து வேர்த்து விறுவிறுத்து, படிச்சதில பாதியை மறந்துட்டு   “பளார்“ வாங்கி ஒப்பனை அறையில் உதறிப்போய் நின்றதும்.

               அவர்தான் அப்படின்னா    காவலராய் நடித்தவர், ஒரு  காட்சியில் வில்லனின் கையாளைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வருவதாகவும், வழியில்  களைத்துப் போன காவலர், சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் எனக் கூறி, ஒரு தச்சுப் பட்டறையின் முகப்பில் கிடந்த ஒரு ஸ்டூலில்    உட்கார்வதாகவும், அந்த ஸ்டூலில் டிசைன் ஃப்ளை ஒட்டுவதற்காக பெவிபிக்ஸ் பசையைத் தடவி கடைக்கார தச்சர் காய வச்சிருந்தது தெரியாமல், காவலர் அதில் உட்கார்வதாகவும், எழ முயற்சிக்கும் போது ஸ்டூலோடு அவரது கால் சட்டை ஒட்டிக் கொள்வதாகவும்,  தச்சர் வந்து ஸ்டூலை இழுக்க, போக்கிலி போலீசை இழுக்க, தச்சர் இழுத்ததுல போலீசு தச்சர்மேலே விழுவதாகவும் , அந்த நேரத்தைப் பயன்படுத்திப்  போக்கிலி தப்பித்து ஓடிவிடுவதாகவும் அந்தக் காட்சிய அமைச்சிருந்தேன். 

              ஸ்டூல் கனமா இருந்ததால அதில எவ்வளவு பசை தடவினாலும் காக்கி கால்சட்டையோட  ஸ்டூலை ஒட்ட வைக்க முடியலேங்கிறதை  முதல்நாள் ஒத்திகையிலேயே  தெரிஞ்சுபோச்சு. அதுக்காக மர ஸ்டூலின் இரு விளிம்பிலும் பக்கவாட்டில் தலா ஒரு ஆணியை அடிச்சு ஊக்குபோல வளைச்சு விட்டிருந்தோம். உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே போலீசாக நடிப்பவர் தனது கால்சட்டையை அந்த ஆணி ஊக்கில் மாட்டி வைக்கப் பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது.

                  திட்டமிட்டபடிதான்  காவலர் உட்கார்ந்து எழுந்திரிக்கும் வரை நடந்தது. தச்சர் வந்து ஸ்டூலை 2,3 முறை இழுக்கும்போது காவலர் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் தானே ட்ரவுசரில் மாட்டியிருந்த ஊக்குகளைக் கழட்டிவிட வேண்டும் என்பது ஏற்பாடு .    போலீசா நடிச்சவர் மாட்டியிருந்த ஊக்கைக் கழட்டிவிட மறந்துவிட,  மூன்றாம் முறை இழுத்தும் ஸடூல் வராததால், தச்சராக நடித்தவர் பலமாக ஸ்டூலை இழுக்க..காவலரின் ட்ரவுசர்  கிழிஞ்சு  ஸ்டூலோடு போயிடுச்சு. பாவம் உள்ளாடை ( ஜட்டி ) போடாமல் இருந்த காவலர் பின்பக்கம் ஆடையில்லாமல அரைநிர்வாணமாய் நிற்க, போக்கிலி ஓடிப்போக,  பார்வையாளர் பக்கத்திலிருந்து வந்த  ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று. தனது நடிப்பினை ரசித்து வந்த சிரிப்பொலி என நெனச்சு  காவலராய் நடிச்சவன்  திரும்பிப் பார்த்து, வெட்கம் தாளாமல் மேடையைவிட்டு இறங்கி ஓடியே போயிட்டான். 

             அதையடுத்து, காவல் நிலையத்தில் போலீசு 255  ஆஜராக வேண்டிய காட்சிக்கு அந்த காவலரைத் தேடினால் ஆளையேக் காணோம். ஒரு 5 நிமிடங்கள் தேடியும் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பார்வையாளர் பக்கமிருந்து “நாடகத்தை லேட் பண்ணாம நடத்துங்கடா”  என்ற குரல்கள் பெருக்கெடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உள்ளே ஒப்பனை அறைக்குள் கிடந்த அவருடைய சிவப்புத் தொப்பியை வச்சு  உடனடி காட்சி ஒன்னை  உருவாக்க வேண்டியதாயிடுச்சு.

                  தச்சராக நடிச்சவரிடம், இன்ஸ்பெக்டர்  “யோவ்  255”ன்னு கூப்பிடும்போது  அந்த சிவப்புத் தொப்பியுடன் போய் ” சார் அவர் புடிச்சிக்கிட்டு வந்த போக்கிலி  என் கடைக்கிட்ட வந்தப்பத் தப்பிச்சு ஓடிப்போயிட்டான்.”  டிபார்ட்மெண்ட் அவரை சஸ்பெண்ட் பண்ணிருமுன்னு பயந்துக்கிட்டு , தானே வேலையை ரிசைன் பண்ணிட்டதா இந்தத் தொப்பியை உங்கக்கிட்ட ஒப்படைக்கச் சொன்னார் சார்” ன்னு சொல்ல வச்சு அந்த கேரக்டரை அத்தோட முடிச்சு வைக்க  வேண்டியதாச்சு.  எப்படியெல்லாம்  சமாளிச்சிருக்கோம் பாருங்க.
( நாடகம் முடிஞ்சு மூனுநாள் வரைக்கும் அவன் என் கண்ணுலபடாம தலைமறைவு வாழ்க்கைதான் நடத்துனான் )  

                                              --- அடுத்த தொடரில் மிச்ச சொச்சம்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
எப்பேர்ப்பட்ட அனுபவங்கள்
தொடருங்கள் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காவலரின் உள்ளாடை...அடடா...மிகவும் சிரமம்தான்.

Post a Comment