Monday, March 26, 2018

தாய்... தாய்...தாய்

நெஞ்சிருக்கும் வரை......

தாயிற் சிறந்த கோயிலுமில்லை...

தாயில்லாமல் நானில்லை...

அன்னை ஓர் ஆலயம் ...

அன்னையைப் போல்ஒரு தெய்வமில்லை...

என்றெல்லாம்  காலம் காலமாகப் பல்வேறு கவிஞர்கள் 
தாயின் பெருமையைப் போற்றிப் பாடி வந்துள்ளனர்.

எனது நெஞ்சிருக்கும் வரை நீங்காது நினைவில் வாழும் என் தாயின் 12 ஆவது நினைவு நாளில் என்னுள் எழுந்த எண்ண வரிகள் இதோ...


கருவாய்    நான்   உருவான  முதலே
கருத்தாக எனைக்  காத்த     தாயே
இணையாக உனக் கென்றும் நீயே
இன்னமுது  ஊற்றாய் இருந்  தாயே


உதிரத்தை உருக்கிப் பாலூட்டி  வளர்த்தாய்
உறங்கிட  எனக்குத் தாலாட்டு   இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்நீ புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்?

அம்மாஎனும் சொல்லால் அதரத்தை  அசைத்தாய்
அப்பாஎனும்  உறவை        அறிமுகம்      அளித்தாய்
அறிவினை    ஊட்டும்நல் ஆசானாய்த் திகழ்ந்தாய்
அல்லலெனை   நெருங்கிடாத   அணையாக  இருந்தாய்


நன்னெறியில் நான்ஒழுக நாளும்நீ உழைத்தாய்
நலங்கெட்டு நலிந்தாலும் மடிதந்து மகிழ்ந்தாய்
நானிலத்தும் நான்தேடும் தெய்வமாக இருந்தாய்
நாளுமுனை மறந்திடாது நனிநெஞ்சில் நிறைந்தாய்


-- பாவலர் பொன்.க.,

Sunday, March 25, 2018

வீட்டுக்கொரு கழிப்பறை

வீட்டுக்கொரு கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத் தையும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஊர்ப்புற மக்களிடம்   ஊரக வளர்ச்சி முகமை மூலம் பரப்புரை செய்ய  உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல்.

இசைப்பாடல்   - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை


வீட்டுக்கொரு கழிப்பறைதான்
                  ஏ அய்யா அம்மாமாரே
வேணுமுங்க அவசியமா
                  கட்டிடுவோம் வாங்க நீங்க
திறந்தவெளிப் பொட்டலத்தான்
                தேடிப்போயி மலம் கழிச்சா
 தீராத தொற்றுநோயும்
                தேடிவரும் நம்மலைத்தான்  --- வீட்டுக்கொரு

வாய்க்குள்ளே போறதெல்லாம்
                 ஏ அய்யா அம்மாமாரே
வயித்துக்குள்ளே தேங்கிடாமே
                 வெளியேவந்து ஆகவேணும்
காலைமாலை ரெண்டுவேளை
                 கழிவைவெளி யேற்றவேணும்
கலகலன்னு ஒடம்பிருக்கும்
                கண்டபிணி ஓடிவிடும்              - -- வீட்டுக்கொரு

பொழுதெல்லாம் அடக்கிவச்சு
                ஏ அக்கா தங்கைமாரே
பொழுதுபட்டும் விடியுமுன்னும்
               புதரைத்தேடிப் போறீகளே
தேக்கிவைக்கும் மலஜலத்தால்
               தீங்குரொம்ப வெளையும்தானே
தீரும்ஒங்க துயரமெல்லாம்
              கழிப்பறையைக் கட்டுனாலே   --- வீட்டுக்கொரு

கூரைவீடோ ஓட்டுவீடோ
              ஏ அய்யா அம்மாமாரே
குடியிருப்பின் வெளியேகொஞ்சம்
               எடமிருந்தாப் போதுந்தானே
பஞ்சாயத்து ஆபீசுக்கு
              கழிப்பறைன்னு கேட்டுப்போனா
பன்னெண்டாயிர ஊக்கநிதியில்
              கழிப்பறையும் வருமேதானா      --- வீட்டுக்கொரு

அஞ்சுக்கு மூனடியில்
              ஏ அய்யா அம்மாமாரே
அழகாஒரு கழிப்பறையை
             அமைச்சுவச்சு நீயும்பாரு
உருளைவடிவ உறைகளாலே
              உலர்கழிவுத் தொட்டிபோதும்
ஒருதுளியும் நாத்தமின்றி
               உரமாஅந்தக் கழிவும்மாறும்       --- வீட்டுக்கொரு

குளக்கரையில் மலம்கழிச்சா
              ஏ அண்ணந் தம்பிமாரே
கொசு கிருமி உருவாகி
             கொல்லைநோயைப் பரப்பிடுமே
குடிநீரும் காத்தும்கெட்டு
             கணக்கில்லாம தொல்லைதரும்
கவலைநீங்கி சுகமாவாழக்
             கழிப்பறைதான் அடித்தளமே      --- வீட்டுக்கொரு

சுத்தியுள்ள எடத்தையெல்லாம்
             ஏ அய்யா அம்மாமாரே
சுத்தமாக வச்சிக்குவோம்
            சுகவாழ்வு தானேவரும்
தூய்மைபாரத் திட்டத்தாலே
             திறந்தவெளியில் மலம்கழிக்கா
மாவட்டமா புதுக்கோட்டையை
            மாத்திடுவோம் வாங்கநீங்க          -- வீட்டுக்கொரு

தன்னனன்ன தானே னன்னே
தானானே தானே னன்னா
தனனானே தானே னன்னன்னா
ஏஅம்மாமாரே தானானே 
தானே தன்னன்னா

Wednesday, March 21, 2018

கட்டட்டும் கட்டிக்கிறேன்

 கட்டட்டும் கட்டிக்கிறேன்.

ஏய்  பொன்னி, பாத்துட்டுப் போன மாப்பிள்ளைக்கு ஒன்னைப் பிடிச்சிருக்காம். சம்மதம் சொல்லிடலாமா?” 

“ வேண்டாம்மா”

“ஏன்டி, அந்தக் கிராமத்திலேயே அந்தப் பையன்தான் நெறையப் படிச்சிருக்காம்”

“ படிப்பைப் பத்திக் கவலையில்லை”

” படிச்சிருந்தாலும்    அரசாங்க வேலையை எதிர்பாக்காம சொந்த நெலத்துல விவசாயம் பண்ணி வெளைச்சல் பாக்கிற பையன்டி. ”

“ வேலையைப் பத்தியோ விவசாயத்தைப் பத்தியோ எனக்குப் பிரச்சனையில்லை”

“ வேற என்ன? ஓன் நெறத்துக்கு கொஞ்சம் கம்மின்னு பாக்குறியா?”

“நெறத்தைப் பத்தியோ, அழகைப் பத்தியோ நா ஒன்னும் பெருசா நெனைக்கிறவ இல்லே”

“ பீடி சிகரெட்  புகையிலை மதுன்னு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன்னு விசாரிச்சதுல தெரியுது”

“ நானும் கேள்விப் பட்டேன்”

“ அவங்க அப்பா அம்மால்லாம் நல்ல குணமானவங்க.ஒன்னைய தங்கங்தங்கமா பாத்துக்குவாங்களாம்  கொழுந்தன் நாத்துனா பிச்சுப்புடுங்கல் இல்லை”

“ மாமியார்  நாத்தனார் கொடுமையைப் பத்தி நா கவலைப்படலே”

“ ரெண்டு எடத்துல ஒங்க அப்பாவும் மாமாவும்  சாதகம்    பாத்ததுல பத்துப் பொருத்தமும் நல்லா இருக்காம்டி”

“ இந்த சாதகம், சகுணத்தையெல்லாம் பத்திக் கவலைப் படுறவ இல்லே நா”

“ அடியே, அவ்வளவு  நகை போடு, இவ்வளவு சீர் செய்யுங்கன்னு எதுவுமே கேக்காம  பொண்ணை மட்டும் குடுத்தாப் போதுமுங்குறாங்கடி மாப்பிளை வீட்ல”

“ அப்படி எதுவும் கேட்டிருந்தா என்னைப்  பொண்ணுப் பாக்க வந்தப்பவே வெளியே போங்கன்னு சொல்லிருப்பேன்“

“ அதுக்காக, ஒரே பொண்ணு ஒன்னை ஒன்னும்  சும்மா அனுப்பப் போறதில்லே. நகை, பண்டம் பாத்திரம், கட்டில் மெத்தை, மிக்சி கிரைண்டர், டிவி, பிரிட்ஜ்,  மாப்பிள்ளைக்கு கழுத்துக்குச் செயினு, கைக்கு பிரேஸ்லெட், விரலுக்கு மோதிரம்,  பல்சார் பைக் அப்டி இப்டின்னு ஒரு பத்து லெட்சத்துக்கு சீர் செய்ய நானும் ஒங்கப்பாவும் திட்டம் போட்டு வச்சிருக்கோம்”

“ என்னதான்  ஆசைகாட்டினாலும்  எனக்கு சம்மதமில்லேம்மா”

” ஏன்டி, வேற யாரையும் மனசுக்குள்ளே விரும்புறியா?

” விரும்பியிருந்தா ஒங்கக்கிட்டச் சொல்றதுக்கு எனக்கு என்ன பயம்?”

“அப்பறம் எதுக்குடி இந்தக் கல்யாணத்தை வேணாங்குறே?“

” ஏம்மா, பத்துப் பொருத்தம் சரியா இருக்கு, பத்து லெட்சம் செலவு செஞ்சு கட்டிக் குடுக்குறேன்னு சொல்ற நீங்க, ஒரு பொண்ணு சங்கடமில்லாம வாழத் தேவையான ஒன்னு அந்த  மாப்பிள்ளை வீட்டுல இருக்காங்குறதைக் கவனிச்சீங்களா?”

“ என்னடி இல்லை? கப்பல்மாதிரி வீடு . அந்தக் கிராமத்துலேயே அவுக வீடுதான் பெருசு”

“  வீடுதான் பெருசு. ஆனா கழிப்பறை- அதான் கக்கூஸ் அந்த வீட்ல இல்லையாம். என் தோழிய விட்டு விசாரிச்சேன் ”

“ப்பூ.. இந்த சின்ன விசயத்துக்கா இம்புட்டு பிடிவாதமா வேண்டாங்குறே?  கிராமத்துல, வீட்டுக்குள்ளேயோ, வெளியிலேயோ கக்கூஸ் வச்சுக் கட்டமாட்டாங்க. அப்படியே காலாறக் குளத்துப் பக்கமோ, காட்டுப் பக்கமோ  காத்தாட  வெளியே போறதத்தான் விரும்புவாக “

“ அம்மா, அப்படி திறந்த வெளியில மலம் கழிக்கிறது எவ்வளவு சுகாதாரக் கேடு தெரியுமா? இயற்கையா ஏற்படுற உடல்கழிவை  அப்பப்ப வெளியேத்தனும். அடக்குறதுதான் ஒடம்புல  பல நோய் உருவாகக் காரணம்.    அவசர ஆத்திரமுன்னா பொண்ணுங்க  கழிப்பிடம் தேடி வெளிய போறது எவ்வளவு ஆபத்துன்னு தினம் தினம் செய்தியில பாக்குறியல்ல.   அதனால கழிப்பறையை முதல்ல  கட்டச் சொல்லு  அப்பறம் நா   கட்டிக்கிறேன்”
.
( அப்போது வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த அப்பா)

“ நீ கேக்குறதுக்கு முன்னாலே மாப்பிளை  தூய்மை பாரத் திட்டத்திலே  கழிப்பறை கட்ட  பஞ்சாயத்து ஆபீசுல  மனு கொடுத்து, அவங்களும் வந்து எடத்தைப்  பாத்துட்டு, பன்னெண்டாயிரம்  ஊக்கநிதியில கழிப்பறை கட்ட ஏற்பாடு பண்ணிட்டாங்கலாம்.”

“பாத்தீங்களா நம்ப பொண்ணு நெனைச்சதையே மாப்பிளையும் நெனைச்சிருக்காரு.” 

“ அதுதான்டி பதினோராவது பொருத்தம்”

” அப்பறம் என்னடி?“

“ கட்டட்டும் கட்டிக்கிறேன்”
------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, March 19, 2018

தமிழ்ப் பண்பாடு


   “தமிழ்ப் பண்பாடு“    --கவிதை-


தமிழரின் பண்பாடு தரணியில் 
                      அமைந்தது  தனிப்பெருஞ்  சிறப்போடு
தலைமணி முடியெனத் தகதகத்
                       திருந்தது  தகைமைச்       சான்றோடு
தனக்கென வாழாது பிறர்க்கென
                      வாழ்ந்தவர் தழைத்திட்ட ப்  பூக்காடு
தன்மானம் காத்தலில் தமிழினம்
                      முதலெனச் சாற்றுவம்      தெம்போடு

அன்பின் வழியினில் அகம்புற
                      வாழ்க்கையும் அமைந்தங்கு நடந்ததுவே
பண்பின் வெளிப்பாடு பட்டின்
                       ஒளியென  பதிந்தெங்கும்   கிடந்ததுவே
மன்புகழ் காத்திட மறத்தமிழ்
                       வீரரும் மார்தந்து   மாண்டனரே
பண்வழிப்   பாவலர் காட்டிய 
                      நெறியினில் புவனத்தை  ஆண்டனரே

கற்றவரைப் புகழ் பெற்றவரின்
                      மேலாய்ப் போற்றிப் புகழ்ந்தனரே
கொற்றவனைப்  பாடிப் பெற்றபொருள்
                       கொண்டு சுற்றம்  தழுவினரே
அற்றநிலை  யெனில் அறம்தழு 
                      வாதவரை  அதட்டி இகழ்ந்தனரே
உற்றதுய    ரினில்உடை  இழந்தார்
                        கைபோல்   உதவியே  மகிழ்ந்தனரே

ஏறுதழுவிய வீரரையேப் பெண்டிர்
                     இணைய   ராய்  ஏற்றனரே
ஊறுளங் கொண்டவர் உற்றா 
                     ராயினும்  ஒதுக்கியே தூற்றினரே.
காதல் கணவரைக் கைபற்றி 
                   நங்கையர் கற்புநெறிக் காத்தனரே
காணும்  மக்கட்செல்வம் களிப்புற
                  வாழ்நெறி கடிதே யாத்தனரே

வந்தவிருந்தினர்  வன்பசி போக்கியே
                     வாழ்ந்தது தமிழ்க் குடியே
நொந்தொன்றை விலக்காது நோற்பவர் 
                      கருத்தையும்  ஏற்றனர் முறைப்படியே
எந்நிலை  மாந்தரும்  எங்களது 
                      உறவென்று ஏற்றசீர் மனத்தினரே
சிந்தையிலும் மாற்றார்  சீர்கெட
                       நினையாத செந்தமிழ் இனத்தினரே

ஈட்டும் பொருளுக்கு ஏற்றநல்
                      உழைப்பினை ஈந்திட்ட தரப்பினரே
பாட்டும் இசையுமாய் பல்கலை 
                       வளர்த்திட்ட பண்பமை மரபினரே
பிறர்க்கென வாழ்தலை பெற்றியாய்க்
                       கொண்ட பெருமக்கள் வாழ்ந்தனரே
எவர்க்கெப் புகழ்வரின் எமக்கென 
                       மகிழ்ந்திட்ட இனிமனக்  குணத்தவரே.
-------------------------------------------------------------------------------------------------