Thursday, August 14, 2014

புதுக்கோட்டை மணிமன்றப் பொன்விழா.

 10.08.2014 அன்று புதுக்கோட்டை எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கி்ல் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, மணிமன்றத்தின் பொன்விழாவினைச் சிறப்பாக நடத்தியது.

முற்பகல் விழாவிற்கு மன்றத்தின் தலைவர் திரு.பொ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார். மன்றத்தின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா வரவேற்புரையாற்றினார்.

பொன்விழா கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை ஆ.குமார் அவர்கள் அறிமுகம் செய்ய, மேனாள் தக்கார் இராம.வைரவன் அவர்கள் விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
பொன்விழா மலரினை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் வெளியிட முதல் பிரதியினை எஸ்.வி.எஸ். குழுமத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் 10,12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற 34 அரசுப் பள்ளிகளை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அறிமுகம் செய்ய, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்ததாக 10,12 அரசுப் பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவச் செல்வங்களையும், கல்வி மாவட்டப் பள்ளி முதல் மாணவர்களையும் மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் மதிவாணன் அறிமுகம் செய்ய “முதல் மாணவர் விருது” களை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள்  வழங்கினார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதனையடுத்து கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் நடுவராக அமர்ந்த “இன்றைய மாணவர், இளைஞர்களிடையே தமிழுணர்வு குறைந்து வரக்காரணம் வீட்டுச் சூழலா? நாட்டுச்சூழலா? ”என்னும் மின்னல் பட்டிமன்றம் நடைபெற்றது.
வீட்டுச் சூழலே என புலவர் மகா.சுந்தர் அவர்களும், நாட்டுச்சூழலே என முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்களும் வாதிட்டனர். முற்பகல் நிகழ்வுகளை கவிஞர் மு.கீதா அவர்கள் தொகுத்து வழங்கினார்.




முற்பகல் நிகழ்வுகளில் கலந்து கொண்டோர்க்கு மன்றத்தின் துணைத்தலைவர் நா.செந்தில்பாண்டியன் அவர்கள் நன்றி கூறினார்.
விழாவிற்கு வருகை தந்தோர்க்கு சண்முக பழனியப்பன் அவர்கள் பகலுணவு வழங்கினார்.

மாலை முதல் நிகழ்வு சிதம்பர ஈசுவரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. அதனையடுத்து  பாவலர் பொன்.க வின் நல்லிசைப்பாடல்கள் குறுவட்டினை சண்முக பழனியப்பன் அவர்கள் வெளியிட,  அதன் முதல் வட்டினை கவிஞர் இராம.வெ.கதிரேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 அடுத்ததாக “கலைவளர்க்கும் புதுக்கோட்டை” என்னும் தலைப்பில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களும், “நாடகக்கலையின் வலிவும் நலிவும்“ என்னும் தலைப்பில் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், குரு.தனசேகரன் அவர்கள் முன்னிலையிலும்  மணிச்சுடர் கலைக்கூடம் வழங்கிய பாவலர் பொன்.க வின் இயக்கத்தில் உருவான “மண்ணுக்கஞ்சி” என்னும் சமூகவியல் நாடகம் சிறப்பாக நடைபெற்றது.  மாலை நிகழ்வுகளை கவிஞர் செ.சுவாதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நாடகத்தில் பங்கேற்றக் கலைஞர்களை முனைவர் சு.மாதவன் அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். நிறைவாக நிறுவனர் நன்றி கூறினார். மாலை விழாப் பார்வையாளர்களுக்கு அறமனச்செம்மல் சீனு .சின்னப்பா அவர்களால் இனிப்பும் காரமும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையின் இலக்கிய அமைப்பினர், சமூக சேவை அமைப்பினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நாடகக்கலைச் சுவைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டப் பொன்விழா சிறப்பாக இனிதே நிறைவுற்றது.