Tuesday, October 7, 2014

இந்தி ஆட்சி மொழியா?

             இந்தி, இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி.எனவே இந்தியை நடுவணரசின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற பிதற்றல்களோடு,  “தொடர்வண்டித் துறை, பொதுக் காப்பீட்டுத் துறை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் கண்டிப்பாக இந்தி கற்றாக வேண்டும். இத்துறைகளின் சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் இந்தி மொழியில்  மட்டுமே வெளியிடப்பட வேண்டும்” என்ற அரசாணைகளும் பிறப்பிக்கப் பட்டுள்ளன. 

             இந்நிலையில் இந்தியின் தொன்மை,மேன்மை பற்றிய செய்தியினை மக்களறியச் செய்வது நமது கடமையாகும்.

          “இந்தி என்ற சொல்லே பாரசீகச் சொல். இந்தியாவுக்கு முகலாயர்கள் வந்த பிறகே இந்தியின் வரலாறு தொடங்குகிறது.. அதாவது நவீன இந்தி மொழியின் வயது வெறும் ஐநூறு ஆண்டுகள் மட்டுமே. முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியபோது வட இந்தியாவில் கரிபோலி, பிரஜ்பாசா, பண்டேலி, கனொவுஜி, அவாதி, மகதி, மைதிலி, போஜ்புரி, பாகேலி, சட்டீஷ்காரி மற்றும் பல வட்டார மொழிகள் வழங்கி வந்தன.

          வட்டார மொழியாக் இருந்த கரிபோலியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி இந்தியாகும். அதே கரிபோலி மொழியுடன் பாரசீக கலப்பு ஏற்பட்டபோது பிறந்த மொழி உருதுவாகும்..

         1800 ஆம் ஆண்டு வாக்கிலதான் இந்தி மொழியில் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. இந்த உண்மையை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

          1959ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தி்ல் பேசும்போது    “ இந்தியாவின் மற்ற் மொழிகளைவிட இந்தி சிறந்தது என நான் ஒருபோதும் கூறமாட்டேன். இந்தி மொழியில் இருப்பதைவிட சிறந்த இலக்கிய வளம் நிறைந்த இந்திய மொழிகள் பல உண்டு. தமிழ், வங்காளி, மராட்டி போன்ற மொழிகளைவிட இந்தி உயர்ந்தது என்ற நிலையி்ல் நாம் இந்தியை அணுகவில்லை” எனக் கூறினார். -- ஆதாரம் -தென்செய்தி அக்.1-15,2014.

         இப்போது சொல்லுங்கள் “இந்தி, தொன்மையான, பெரும் பான்மையான, இலக்கிய வளம் செறிந்த மொழி , எனவே நடுவண் அரசின் ஆட்சிமொழி”  என்னும் கூற்று மெய்தானா? 

மூன்று நூல்கள் வெளியீட்டு விழா.

தி.பி.2045 கன்னித்திங்கள் பத்தொன்பதாம் நாள் (05.10.2014) ஞாயிறு மாலையும் முன்னிரவும் ஒரு மகத்தான பொழுதுகளாயின.... ஆம் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” “புதிய மரபுகள்“., ” கம்பன் தமிழும் கணினித் தமிழும்” ஆகிய மூன்று முத்தான நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்வுதான் காரணம்.

ஒரு படைப்பாளி ஒரே நேரத்தில் இப்படி சமூக அக்கறை கொண்ட மூன்று நூல்களை வெளியிட எத்தனை முயற்சிகள் எடுத்திருக்க வேண்டும் என்பது  எனது முதல் வியப்பு. 

அடுத்து ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கிய வாதிகள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் இயக்க வாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள். படைப்பாளியின் ஆசிரியர்கள், அவரின் மாணவர்கள். கிராமங்களிலிருந்தும், அயல் மாவட்டம், மாநிலங்களிலிருந்தும் திரளாக வந்திருந்தது மேலும் வியப்பு.

அரங்கில் அமர இடமின்றி இறுதிவரை நின்றவாறே விழாவைச் சுவைத்த காட்சியும் இந்த நிகழ்வில்தான் கண்டேன்.

இப்படிப் பல வியப்புகள் இருந்தாலும் எனக்குள் எழுந்த பெருவியப்பு  அரசுப்பள்ளிகளின் மேன்மை, தமிழ்வழிக் கல்வி,  வணிகமயமாகும் கல்விக்கு எதிரான கருத்துகள் அடங்கிய நூல்களை சில  மெட்ரிக் கல்வி வள்ளல்கள்! கட்டுக் கட்டாய் வாங்கியதுதான்.

ஒருவேளை இந்த நூல்களைப் படித்தபின்னர் சமச்சீர் கல்விக்கும்,தமிழ் வழிக் கல்விக்கும்  அவர்களின் ஆதரவுகள் பெருகினாலும் நல்லதுதானே.