Sunday, June 11, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-29


கனக மணிகளினும் 
                மேலாய்க் கண்ணீர்த் துளிகள்

                     ஆடிப்பூரம் பொருட்காட்சிக் கலைமேடையில்  புதுக்கோட்டை கல்வித்துறை சார்பாக, பள்ளி மாணவர்களைக் கொண்டு  “ தலைக்கு ஒரு விலை”  என்ற  நாடகத்தினை அரங்கேற்றி, பாதி நாடகம் நடந்து கொண்டிருந்த வேளையில் “ நாடகத்தை நிறுத்து” என்ற குரல்  இரண்டாவது முறையாகக் கேட்டதும்  குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

                 அங்கே பொருட்காட்சி மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளரான உதவி மக்கள்தொடர்பு அலுவலர் ஆவேசத்துடன் மேடையினுள் நுழைந்தார்.


             “ஏன் சார் நாடகத்தை நிறுத்தணும்?” ன்னு கேட்டேன்


            “ சிறப்பு  நடன    நிகழ்ச்சி நடத்தும் அரசு நர்த்தகி சுவர்ணமுகி வந்துட்டாங்க. அவங்க நிகழ்ச்சி தொடங்கணும்” ன்னார்


“சார் இன்னும் ஐந்து நிமிடத்தில் நாடகம் முடிந்து விடும். முக்கியமான உச்சகட்ட காட்சி அடுத்துதான்” என்றேன்.


                  பரிசில் பெற வந்த ஆவூர்    புலவர் பெருந்தலைச் சாத்தனார்  காட்டில் இருக்கும் குமணனைச் சந்திக்கிறார். அவருக்கு பரிசளிக்க பொருளேதும் இல்லாத நிலையில், தனது தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக தன் தம்பி இளங்குமணன் அறிவித்திருப்பதால், தனது தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்து ஆயிரம் பொன்னை பரிசாகப் பெற்றுக் கொள்ள தனது வாளை புலவரிடம் கொடுக்கிறார். 


                அடுத்த காட்சியில் இரத்தம் வழியும் ஒரு மூட்டையுடன் புலவர் இளங்குமணன் முன் நிற்கிறார். தனது அண்ணனைக் கொல்ல,  தானே காரணமாக இருந்ததை எண்ணிய இளங்குமணன் , மனம் திருந்தி கதறுகிறான்.


              அவனது மனமாற்றத்தைக் கண்ட புலவர், தான் கொண்டு வந்திருப்பது குமணனின் தலையல்ல வாழையின் அடிக்கிழங்கு எனக்காட்டி அண்ணன் தம்பியை சேர்த்து வைக்கிறார்.


இந்த இரு காட்சிகளும் நடந்தால்தான் நாடகக் கரு முற்றாக பார்வையாளர்களுக்கு விளங்கும்.


              ஆனால்  அந்த அலுவலர் எனது கோரிக்கையை  ஏற்காமல் 

“ ஒரு பள்ளி மாணவர் நாடகத்திற்காக அரசு நர்த்தகியைக் காக்க வைக்க முடியாது” எனப் பிடிவாதமாக நாடகத்தை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தினார்.

              எங்கள் விவாதத்தைக் கண்ணுற்று அங்கு வந்த கல்வித்துறை அலுவலரிடமும் ஒரு ஐந்து நிமிடம்  அனுமதி பெற்றுத் தாருங்கள் நாடகத்தை முடித்து விடுகிறேன் என்று மன்றாடினேன்.


              அவரின்  வேண்டுகோளையும் மறுத்து, முன் திரையை மூடச் செய்தார் அன்றைய உதவி மக்கள் தொடர்பு அலுவலர். கல்வி அலுவலரும் செய்வதறியாது மேடையை விட்டுக் கீழே இறங்கிச் சென்றுவிட்டார்.


             “ அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்” என்ற பழமொழியின் பொருளை  அப்போதுதான் உணர்ந்தேன்.


              வேறு வழியின்றி    ஒலி வாங்கியில் ”  மேடை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்  நெருக்கடியால் நாடகம் இத்தோடு நிறுத்தப்படுகிறது” என அறிவித்துவிட்டு,  ஏக்கத்தோடு நின்ற மாணவ நடிகர்களை அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினேன்.  


             பக்கத்திலிருந்த ஒரு ஆசிரியர் வீட்டில் அவர்களது ஒப்பனையைக் கலைத்து, அவர்களின் ஆதங்கத்திற்கு ஆறுதல் சொல்லி, ஒரு தானியில் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்  அவரவர் இல்லங்களில் சேர்ப்பித்தேன்.


              அரசு நர்த்தகியின் நடன நிகழ்ச்சி முடிந்தபின்,  அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்க என்னையும் நாடகத்தில் நடித்த மாணவர்களையும் ஒலி பெருக்கியில்  அழைத்திருக்கிறார்கள் . நாங்கள் அந்த அழைப்பிற்கு மதிப்பளிக்கவில்லை.

                மறுநாள் பள்ளிக்கு வந்த கல்வி அலுவலர் நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தப்பட்டு , மாணவர்களை அழைத்து பரிசுகளை வழங்கிச் சென்றார்.


    ஒரு  படைப்பு அரங்கேற்றத்தின் பாதியிலேயே நிறுத்தப்பட்டு கொச்சைப் படுத்தப் படும்போது அந்தப்  படைப்பாளன் படும் மன வேதனையை பட்டவரே உணர்வர். அதைவிட இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்துத் தங்கள் திறமைகளை மேடையில்  காட்டி, பாராட்டுப் பெற நினைத்திருந்த மாணவர்களின் மனநிலை, அவர்களின் பெற்றோரின் மனநிலையும்  எப்படி இருந்திருக்கும்?


 நீறு  பூத்த நெருப்பாக நெடுநாளாக என்னுள் கனன்று கொண்டிருந்த அந்த ஆதங்கம் ஆற்றுப்படும் நாள் ஒன்று வந்தது.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனமும் இணைந்து புதுக்கோட்டையில் 21,22,23-01-2011 ஆகிய மூன்று நாள்கள் நடத்திய “இயல், இசை, நாடகத்திற்குத் தமிழின் கொடை” என்னும் கருத்தரங்கின் ஐந்து நெறியாளர்களில் ஒருவனாக நானும் செயலாற்றும் வாய்ப்பு வந்தது.

    அக்கருத்தரங்கின் நிறைவு நாளில் நாடகத்திற்குத் தமிழின் கொடை என்னும் பொருளுக்கான  சங்க இலக்கியம் தந்த நாடகம் ஒன்றினை நடத்தித்தர  திலகவதியார் திருவருள் ஆதீன ப் பொறுப்பாளர்  தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.


    நெடுநாளாய்  நிறைவேறாதிருந்த கனவினை நனவாக்க  முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆடிப்பூரம் பொருட்காட்சியில் முழுமை பெறாது தடைப்பட்ட குமணன் வரலாற்றை இன்னும் சற்று விரிவுபடுத்தி “பழிதவிர்த்த பாவலர்” என்னும் பெயரில் ஒரு மணி நேர நாடகமாக அரங்கேற்றினேன். 

 மணிச்சுடர் கலைக்குழுவினரால் நடிக்கப்பெற்ற அந்நாடகம்  கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றது.
















அந்நாடகத்திற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

             கருத்தரங்கிற்குத் தலைமை யேற்றிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன எண்பேராயக் குழு உறுப்பினர் முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் உதிர்த்த ஆனந்தக் கண்ணீர்தான் .

          ஆம் நாடகத்தில் குமணன் நாடிழந்து காட்டுக்குள் படும் துயரம் முதல் பெருந்தலைச் சாத்தனாரால் மனம் திருந்திய இளங்குமணன் தன் அண்ணனைத் தேடி ஓடி அண்ணனைக்  கட்டித் தழுவி அவனிடம்   தன் தவறுக்கு  மண்ணிப்புக் கோரி  மணிமுடியை ஒப்படைக்கும் காட்சி வரையிலான  நாடகத்தை முன்னிருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த   சிலம்பொலி செல்லப்பனார் நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து  அகம் மகிழப்  பாராட்டினார். 

            அப்போது பாராட்டுரைத்த கவிச்சுடர் கவிதைப் பித்தன் “அய்யா சிலம்பொலியார்  விழிகள் சிந்திய   ஆனந்தக்      கண்ணீரே”   இந்நாடகத்திற்கான சிறப்புப் பரிசென அறிவித்தார். 


அந்தத் தமிழ்ச் சான்றோரின் கண்ணீர்த் துளிகளே கனகமணிகளினும் மேலாய் இன்றும் என்னுள்ளத்தில்  .





                     அம்மேடை நாடகத்தின் உரையாடல்கள் திருச்சி வானொலி    நிலையத்தாரால் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டு,  திருச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது .

                  இது போன்ற இலக்கிய வரலாற்று நாடகங்களை உரிய பின்புலங்களோடு நடத்த வேண்டுமென என்னுள் அரும்பிய எண்ணங்களை ஈடேற்ற,  மணிமன்றத்தின் முப்பதாம் ஆண்டு விழா மேடையில் ,    குறுந்தொகையில்  பெண்கொலை புரிந்த நன்னன் என வரும் வரியினை மையப்புள்ளியாகக் கொண்டு  “ துணை தேடும் கணையாழி”  என்னும்  வரலாற்று நாடகத்தை ஆக்கி  பொது வெளி மேடையில்    அரங்கேற்ற முனைந்தேன்.  

அந்த நாடக அரங்கேற்றத்தில்   இதுவரை பட்டிராத  பட்டறிவு எங்களுக்கு.

              என்னவென அறிய ஆவலா? 
       -----பொறுத்திருங்கள்  அடுத்த தொடரில் வரும்.  

Wednesday, June 7, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் . தொடர்ச்சி-28

புகழ்ச்சியில்   பணிவும்,  
இகழ்ச்சியில்  துணிவும்

                 வரலாற்று நாடகப் பயணத்தில், பொதுவெளி மேடை நாடக அரங்கேற்ற அனுபவங்களுக்கு முன், பள்ளி மேடைகளில் அரங்கேறிய வரலாற்று நாடக அனுபவங்களில் ஒன்றிரண்டைப் பதிவிடலாமென நினைக்கிறேன்.


                 நான்  நகராட்சிப் பள்ளியில்   ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆண்டில் (1969) நாடெங்கும் காந்தியடிகள் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

                பள்ளிகளில் காந்தியடிகளின் வாழ்வியல் சிறப்புகளை, பாட்டு. நடனம், முதலான கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்று அரசின் சுற்றறிக்கை.

               பலபள்ளிகளில்  காந்தியின் புகழ்பற்றிய பாடல்கள், நடனங்கள் தயாரிக்கப்பட்டன. நான் பணிபுரிந்த மாலையீடு நகராட்சிப் பள்ளி,  நகராட்சி ஆணையரின் நிருவாகத்தின் கீழ் இருந்தது.  பள்ளிச் செயல்முறைகளைப் பார்வையிட வந்த பள்ளித்துணை ஆய்வாளர்  திரு பரமசிவம் அவர்கள்   என்னை அழைத்து  “எல்லாப் பள்ளிகளிலும் பாட்டும் ஆட்டமுமா இருக்கு . நீங்க காந்தி பற்றி ஒரு சின்ன  நாடகத்தைத் தயாரிங்க” ன்னார்.

            அவர் அப்படி என்னைப் பணித்தமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று நான் புதுக்கோட்டையில்  ஆதார ஆசிரியர் பயிற்சி படித்த காலத்து  அவர் எனக்கு ஆசிரியர் பயிற்றுநராக இருந்தவர்.   பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்து  விடுதி விழாவில்  நான் நடத்திய  “வழிகாட்டி” என்ற நாடகத்தைப் பார்த்துப் பாராட்டியவர்.

               இன்னொன்று  1964ல் இருந்து நான் மணி மன்றம் 
தொடங்கி,  பிச்சத்தான்பட்டியில்     பொது மேடையில் நடத்திய நாடகங்களை நகர வாசியாய் இருந்து  பார்த்தவர். 

             அந்த நம்பிக்கையில்தான்  என்னிடம்  நாடகப் பொறுப்பு  ஒப்படைக்கப்பட்டது.

             அவர் பணித்ததைத் தட்ட முடியாமல்  “காந்தியின் அகிம்சை” என்ற பெயரில்    ஒரு  பத்து நிமிட நாடகத்தைத் தயாரித்திருந்தேன்.

             மாவட்ட விழாக்குழு அந்த நாடகத்தைத் , காந்தி நூற்றாண்டு நிறைவு விழாவில் நடத்தத் தேர்வு செய்து விட்டனர்.

             இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு திறந்த ட்ரக்கில்  அந்த நாடகக் குழு  நகரின் முக்கிய இடங்களில்   நாடகத்தை  நடித்துக் கொண்டே விழா மேடைக்குச் செல்ல வேண்டும். அதாவது நகரும் நாடகக்குழுவாக.

              மூன்றாம் வகுப்பில் ஒரு மாணவனை மொட்டை யடிக்கச் செய்து உடன்  நடிக்கும்     நான்கு மாணவர்களையும்  ட்ரக்கில் ஏற்றி அவர்களுடன் ஊர்வலத்தின் முன்னே எங்கள் பள்ளியின் நகரும் நாடகக்குழு நகர்ந்தது.  நான்கு இடங்களில் நடித்துக் காட்டி நிறைவாக திருவப்புரில் நடந்த நிறைவு விழாவில் அரங்கேற்றியது.

              அது முதலாக நான் பணிபுரிந்த 13 நகராட்சிப் பள்ளிகளிலும்  பள்ளி ஆண்டுவிழா என்றால் கலை நிகழ்ச்சிப் பொறுப்பு என் தலையிலேயே சுமத்தப்பட்டது.

             அப்படிப் பள்ளி ஆண்டுவிழாக்களில் நடத்திய வரலாற்று நாடகங்களில்   சிறப்பாகக்   குறிப்பிடத் தக்கவை     மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் சிறு துளியான “மலைநாட்டு மன்னன்”, 

          சிலப்பதிகாரத்தில் ”கண்ணகி” வழக்குரைத்த காதை, 

        பிரான்சு வீரமங்கை ஜோன் ஆப் ஆர்க்கின் “ நெருப்பில் வீழ்ந்த மலர்”  

 “ சாணக்கிய சபதம்”   “ தலைக்கு ஒரு விலை”

  ஜான்சி ராணி இலக்குமிபாய் வீரம் பற்றிய
“விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” முதலியன.

              பள்ளி மேடைகளில் வரலாற்று நாடகங்களை நடத்துவதில்  இரண்டு நெருக்கடிகளைச் சந்தித்தாக வேண்டும். ஒன்று பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் நாடகம் முடிய வேண்டும். ஏனென்றால் நடனம், பாடல், முதலான பல நிகழ்ச்சிகளுக்கு  பல வகுப்புப் பிள்ளைகளுக்கு  வாய்ப்பளிக்க வேண்டும்.

             இன்னொன்று குறைந்த பொருட்செலவில்தான் நாடகம் அமைய வேண்டும். 

           சிறிய அரங்கினுள் பெரிதாக எந்த காட்சி அமைப்பையும் செய்ய முடியாது. ஒன்று அல்லது இரண்டு திரைச் சீலைகள்தான்.  சிம்மாசனம், அரச உடைகள், கிரீடம் வாள் முதலிய அரங்கப் பொருள்களை   நாடகம் தயாரிப்பவரே  செய்து கொள்ள வேண்டும்.

               இந்த வரம்புக்குள் நடத்திய நாடகங்களிலும் வெற்றி பெற்றது  ஒரு வரலாற்று நாடகம்.  

              திருச்சி வானொலி நிலையத்தார்  புதுக்கோட்டை  வந்து  மாவட்ட ஆட்சித் தலைவர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முதலான    சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில்  மக்கள் மன்றத்தில் நடந்த  “ விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை” மிகச் சிறந்த பாராட்டைப் பெற்றது.  அதுவே மறுமுறை நகர் மன்றத்திலும் நடத்தப்பட்டது.


                அந்நாடகம் இங்கு ஒலிப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி வானொலியில் பலமுறை ஒலிபரப்பப் பட்டது.  நாட்டுப் பற்றை விளக்கும் கதை, உரையாடல், போர்க்களக் காட்சிகளில் யானை பிளிறல், குதிரைக் குளம்பொலி, கனைப்பு, வாள்களின் உரசல், துப்பாக்கிகளின்  வெடிச் சத்தம் முதலான வற்றுக்கு எளிய கருவிகளால் உரிய ஒலிகளை அமைத்த  இசையமைப்புப் பாங்கு முதலானவற்றால் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நாடகம் அது..

                 எனது மேடை நாடகத்திற்கு ஒருமுறை தலைமை தாங்கி நாடகம் முழுமையையும் பார்த்து வியந்து பாராட்டிய  வானொலி அண்ணா திரு இளசை சுந்தரம் அவர்கள் அளித்த அந்த வாய்ப்பை என்றும் மறக்க முடியாது. 

              அதன் தொடர்ச்சியாக நான் திருச்சி வானொலி நாடகங்களில் நடிக்கவும் நாடகங்கள் எழுதவும் வந்த வாய்ப்புகள் தனிக்கதை.

            பள்ளி மேடை நாடகங்களில் நடித்த மாணவர்களின் திறமைகளையும் அவர்கள் இன்று வகிக்கும் பொறுப்புகளையும் நோக்க  வியப்பாகவும் நகைப்பாகவும்    இருக்கிறது.

           அன்று கண்ணகியாக  உரிமைக்குப் போராடிய  மாணவி, இன்று காவல் துணை ஆய்வாளராக இருக்கிறார்.
 ( பெயர்கள் வேண்டாமென நினைக்கிறேன்)  

           அன்று அகிம்சைவாதி காந்தியாக நடித்தவர் இன்று  கராத்தே மாஸ்டராக இருக்கிறார்.   

          இராணி இலட்சுமி பாய் பாத்திரமேற்றவர் இன்று ஒரு பெரிய  தனியார் நிறுவன  நிருவாகியாக இருக்கிறார்.  

         அவுரங்கசீப்பை அலற வைத்த கலகக்காரனாக நடித்தவர் இன்று ஒரு நீதிமன்ற நடுவராக இருக்கிறார். 

          அவர்களுக்கு ஆசிரியராக இருந்த நான்  அவர்களை உயர்த்திவிட்ட ஏணியாகவே ஓய்வு பெற்று, அவர்களின் உயர்வில் பெருமைப்பட்டு  இருக்கிறேன்.

         ஒரு முறை  ஒரு சிறுபான்மை    தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் , வீர சிவாஜி நாடகத்தை நடத்தக் கேட்டார்கள். நான் அப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம்  பெண்பாத்திரமே இல்லாத ஒரு நாடகத்தை வெறும் பெண் குழந்தைகளை வைத்து எப்படி நடத்துவது ? என்று கேட்டேன். அதில்தான் உங்கள் திறமையைக் காட்ட வேண்டுமென்று ஒரு சவால்போலச் சொன்னார்கள். 

              நானும் அதைச் சவாலாகவே எடுத்துக் கொண்டு அம்மாணவியர்க்குப் பயிற்சியளித்தேன். 

             அப்பள்ளி  ஆண்டுவிழாவில்   சிறந்த நிகழ்ச்சிக்கு பரிசளிப்பதுண்டு என்பதால் பல கலைநிகழ்ச்சிகள் போட்டிக்கானவையாகவே நடந்தன. 

           ஆண்டுவிழா நிறைவில் பரிசுக்குரிய நிகழ்ச்சியாக
 “ மலைநாட்டு மன்னன்”  நாடகம்  அறிவிக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது. 



                 எல்லாக் குழந்தைகளிடமும் எல்லாத்திறமைகளும் புதைந்துதான்  கிடக்கின்றன. அகழ்ந்தெடுக்கும்போதுதான் அதனதன் மகத்துவம் புரிகின்றது.

              அதே போல புதுக்கோட்டை ஜே.சி.ஐ யும் கண்ணதாசன் நற்பணி மன்றமும் நடத்திய நாடகப் போட்டியிலும்  மாணவர்கள் நடித்த மலைநாட்டு மன்னன் நாடகம் முதல் பரிசு பெற்றதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

              பரிசு பெற்றதைப் பெருமையாக நினைக்கும்  அதே வேளையில்  புறக்கணிக்கப்பட்டபோது பட்ட  வேதனையையும் பகிர்ந்து கொள்ளத்தானே வேண்டும்.

         1970 களில் புதுக்கோட்டையில் மாவட்ட நிருவாகம் “ஆடிப்பூரம் ” பொருட்காட்சி நடத்திய காலம். பலதுறை சார்ந்த சிறப்புகள்  பொருட்காட்சி அரங்குகளில்  வைக்கப்படும். ஒவ்வொருநாள் மாலையும் இரண்டு கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.

              அப்படி ஒருநாள் கல்வித்துறை சார்பான கலை நிகழ்ச்சியில்,   நான் பணிபுரிந்த பள்ளி சார்பாக  “ தலைக்கு ஒரு விலை” என்ற  எனது    முப்பது நிமிட   நாடகம் நடத்த வாய்ப்பு தரப்பட்டது.  

              குமணவள்ளல் பற்றிய வரலாற்று நாடகம்  அது. பொதுமக்கள் கூடும் பெருவெளி மேடை என்பதால்   திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடுமையாகப் பயிற்சியளித்திருந்தேன். 

              கல்வித் துறை அலுவலரும் முழு ஒத்திகையைப் பார்த்து அருமை எனப் பாராட்டி அரங்கேற வாய்ப்பளித்தார். 
 அரச இருக்கை, உடைகள். வாள், கிரீடம் முதலியவற்றை வாடகைக்கு எடுத்து மாலை 6.30 மணி நாடகத்திற்கு 4.00 மணிக்கே ஒப்பனை செய்து மாணவர்களை ஆயத்த நிலையில்  வைத்திருந்தேன்.

            தொடக்கத்தில் நடந்த நாதசுர கச்சேரிக் காரர்கள் 6.45க்குத்தான் மேடை விட்டார்கள். அரசவை நடனத்துடன் தொடங்கிய நாடகம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது.

              படைத்தளபதியின் சூழ்ச்சியால் இளங்குமணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு குமணன் காட்டுக்குச் செல்கிறான். 

             காட்டில் அவன் தனித்து வருந்தும் உணர்ச்சி மயமான காட்சி நடந்து கொண்டிருந்தது.  

     “போதும் நிறுத்துங்க நாடகத்தை” என்ற குரல் மேடையின் பக்க மறைவிலிருந்து வந்தது.

        அதை பொருட்படுத்தாது நாடகத்தைத் தொடர்ந்தேன்.  

            குமணனிடம்  மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க விரும்பாமல் குமணனின் தலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன்கழஞ்சு என முரசடிக்க வைக்கிறான் தம்பி இளங்குமணன். 

    “ இப்போ நிறுத்தப் போறியா இல்லையா?”

 கோபாவேசத்தோடு ஒருவர் மேடைக்குள் நுழைந்தார்.

யார் இவர்? ஏன் நிறுத்தச் சொல்கிறார்? புரியாமல் விழித்தேன்.

             --- அடுத்து நடந்ததை அடுத்த தொடரில் 


   

Sunday, June 4, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-27

விழி திறந்து ஒளி தந்த மகளே

                 “தனிக்குடித்தனம்”  நாடகத்திற்கு தலைமையேற்ற சிறப்பு விருந்தினரை வழியனுப்பிவிட்டு, நாடகத்தைத் தொடங்க வேகமாக மேடைக்கு ஓடியபோது, அங்கே  நாடகத்தில் நடிக்கக் கூடிய மன்ற நடிகர்கள் எல்லோரும்   திரை திறந்த ஒளிமேடையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள்.

            என்னைப் பார்த்ததும் “ மாட்டோம்  மாட்டோம் நாடகத்தில் நடிக்க மாட்டோம்” என ஆர்ப்பாட்டக் குரல் கொடுத்தார்கள்.
“என்னப்பா பிரச்சனை?”
 “நிறைவேற்று நிறைவேற்று எங்கள் கோரிக்கையை நிறைவேற்று”
“ என்னப்பா உங்க கோரிக்கை?“
“நிறைவேற்ற உறுதி கொடு”
“என்னன்னு சொன்னாத்தானே முடியுமா முடியாதான்னு சொல்லமுடியும்”
“ உங்களாலே முடியும். உறுதி கொடுங்க ”
 “ நேரமாயிடுச்சு,  எதுவானாலும் நாடகம் முடிஞ்சு பேசிக்குவோம்“
“முடிஞ்ச பிறகு எதுக்கு? தொடங்கும் முன்னே செய்யுங்க”
“ என்ன செய்யணும் சொல்லுங்க”
செய்யுறேன்னு சொல்லுங்க”
 “ இப்போ நாடகத்தை நடத்தப் போறீங்களா இல்லே கல்லெறி வாங்கப்போறீங்களா? -- பார்வையாளர் பகுதியிலிருந்து ஒரு குடிமகனின் மிரட்டல்  குரல்.

“செல்வின் சார், நீங்க சிலைடைப் போடுங்க” நாடகத்தை ஆரம்பிப்போம்”  - ஒளிப்பதிவாளரிடம்  நான்

” போடாதே போடாதே. சிலைடு போடாதே”  கூட்டாக எதிர்ப்புக் குரல் மேடைக் கலைஞர்களிடமிருந்து 

 “  இப்ப என்னதான் செய்யணுங்குறீங்க?“

“ முதல்ல நாங்க கேக்குறதைச் செய்யுறேன்னு சொல்லுங்க”

 அட செய்யுறேன்னுதான் சொல்லேய்யா”  தர்ணாவுக்கு ஆதரவாக ஒரு ரசிகரின் குரல்.

“ சரி செய்யுறேன், என்ன செய்யணும்?

“அப்படிவாங்க வழிக்கு,  30நாள் 40 நாள்ன்னு எங்களை ஒத்திகை ஒத்திகைன்னு போட்டு வதைக்கிறீங்கல்ல, எங்களை யாருன்னு மக்களுக்கு அடையாளம் காட்டுறீங்களா?”  கதைத்தலைவனா நடிக்க இருந்தவரின் கேள்வி
“என்னப்பா நாடகத் துண்டறிக்கையிலே எல்லோருடைய பெயர்களையும்  அச்சடிச்சுத் தானே விளம்பரம் பண்றோம்.”

“நோட்டீசிலே சரி, மேடையிலே....?”

 ”அதான் வெள்ளைத் திரையில வண்ண சிலைடுல பெயர்களைப்  போடுறோமுல்ல”

“அது எங்க ஆயி அப்பன் வச்ச பேரு, இந்த மூனு மணி நேரத்துக்கு  எங்களுக்கு  என்ன பேரு?
.......

“ சார் , நாடகத்திலே என்ன பேருல நடிக்கிறோம்” மன்றத் தலைவரின் கேள்வி

“ நீங்க காதர்பாட்சாவா. அவரு பாட்டு வாத்தியார் பசவப்பா”

“அப்படி கேரக்டர் பேரைச் சொல்லி எங்களை மேடையில அறிமுகப் படுத்துங்க”

“அவ்வளவுதானே. செஞ்சுடுறேன். எல்லாம் எந்திரிச்சு அந்த நீலத்திரைக்குப் பின்னாலே போங்க” ன்னு சொல்லிட்டு அவங்க கோரிக்கையை நிறைவேற்றத் தொடங்கினேன்.

               ஒவ்வொருவருடைய நாடகப் பாத்திரப் பெயரையும் நடிப்பவர் பெயரையும் நான் சொல்லச் சொல்ல ஒவ்வொருவராக வந்து தங்களின் “பஞ்ச்” டயலாக் ஒன்றைச் சொல்லிச் சென்றனர்.

             நாடகம் பார்வையாளர்களின் கையொலியுடன் கலகலப்பாகத் தொடங்கியது .

             நாங்கள் முன்னரே திட்டமிட்டுச் செய்த ஒருவகை
 “அறிமுக உத்தி” என்பது பார்வையாளர்களுக்குத் தெரியவா போகிறது?

                                                   பெண்சிசுக் கொலை.

 பெண்குழந்தை பிறந்தவுடன் அதன் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியும், நெல் மூக்கைச் செருகியும் கொன்றழிக்கும் ஈனச்செயல்  தென்மாவட்டக் குக்கிராமங்களில் நடப்பதான செய்தி நாளேடுகளில் பரபரத்த வேளை.

               பெண்சிசுக் கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தி 1994ல் ஆக்கப்பட்ட ஒரு சமூக சீர்திருத்த மேடை நாடகம்தான்
 “ விடியலைத்தேடி”





                 பெண்களுக்குத் திருமணத்தின்போது சீர்வரிசை செய்வதைச் சுமையாகக் கருதி, அந்தியுர் என்ற கிராமத்தில், பெண்குழந்தை பிறந்தால் உடனே அக்குழந்தையின் வாயில் கள்ளிப்பாலை ஊற்றியோ, நெல்சுனையை அக்குழந்தையின் தொண்டைக்குள் செருகிக் கொன்று புதைத்து விடும் சமூகஅநீதிச் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.     பள்ளி.  போக்கு வரத்து செய்தித் தொடர்பு என்ற எவ்வித   வசதிகளும்    இல்லாத    அந்த மலைக்கிராமம்    கங்காணியார் குடும்பம்  என்ற ஒரு தனிக் குடும்பத்தின் சர்வாதிகாரத்தில்   இயங்கும் 
ஒரு  த னித் தீவாகவே இருந்து வந்தது.

              இரண்டு முறை பெண்குழந்தை பிறந்து அவற்றைக் கொன்ற   பின்னர் மூன்றாவதும்  பெண்குழந்தையாகப்    பிறந்தால், அப்பெண் தன் கணவனை விலக்கிவிட்டு ஆண்குழந்தை வேண்டி  வேறு கணவனைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற  முரண்பாடான நடை முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது அக்கிராமத்தில்.

                அந்த கங்காணி மகள் குருவம்மாவுக்கு  மூன்றாவதாகப் பிறந்த  பெண்  குழந்தையைக் கொன்று புதைக்க அக்குழந்தையின் தந்தை  கொண்டையனிடமே ஒப்படைக்கிறார்  கங்காணி.  அவன் அக்குழந்தையைக் கொல்ல விரும்பாமல்  அடுத்த ஊர்    தமுக்கு அடிக்கும் கொம்பேறி என்பவனிடம்   வளர்க்க  ஒப்படைத்து  விட்டு கரடிக்காட்டிற்குள் தலைமறைவாகிறான் கொண்டையன்.

               தாய் முகம் தெரியாது, தன்னை  வளர்த்த    கொம்பேறியே தனது தந்தை என நினைத்து  வேணி என்னும் பெயரில்   வளர்கிறாள்  அக்குழந்தை .  அப்படி வளர்ந்த அந்தப்பெண்   படித்துப் பட்டம்பெற்று   புலனாய்வுக்  காவல் ஆய்வாளராகிறாள்.

                அந்தியுரில் நடக்கும்  சிசுக் கொலை தடுப்புப் பணிக்கு நியமிக்கப்பட்ட வேணி,  மாறுவேடத்தில்    அந்தியுர் வந்து  கங்காணி வீட்டில்  எடுபிடியாக இருக்கும்  ஊமைத்துரை என்னும் வெகுளியோடு பழகி  இரகசியங்களைச் சேகரிக்கிறாள்.



                 கொண்டையனை விலக்கிவிட்டு புலிக்குட்டி என்பவனைத் தன் மகள் குருவம்மாவுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் கங்காணி. வெடிவிபத்தில் கங்காணி இறந்ததும்  குருவம்மாள் அந்த கிராமத்தையே  ஆட்டிப் படைக்கிறாள்.

              பெண்சிசுக்களைக் கொல்வதில் கொடூரமாக நடந்து கொள்ளும்        கு ருவம்மாவுக்கு   அவளுடைய     மகன் கோபால் முரடனாகத்  தாயின் அன்முறைக்கு துணையாகிறான்.

              உளவுபார்க்க வந்திருக்கும்    வேணியை  ஊரைவிட்டு விரட்ட அவளின் தந்தை  வெட்டியான்  கொம்பேறியை அடியாள்களை வைத்துத் தாக்குகிறான். கடுமையான தாக்குதலால் இறக்கும் நிலையில்,  கொம்பேறி வேணியோடு பழகும் ஊமையனிடம்   தனது மகள் இல்லை,  கொண்டையன் மகள் என்பதைச் சொல்லி இறந்து விடுகிறான்.

               தன் தந்தை இறப்புக்குக் காரணமான கோபாலைச் சட்டத்தின் முன் நிறுத்த வேணி முயற்சிக்கையில் அவளை தன் கூலிப்படை மூலம் கடத்திக் கொல்ல முயற்சிக்கிறாள்  குருவம்மா.

              கொம்பேறி இறந்ததையும், அவனால் வளர்க்கப்பட்ட தன் மகள்     வேணி குருவம்மாவால் கொடுமைப் படுத்தப்பட இருப்பதையும்  ஊமைத்துரை மூலம் அறிந்த கொண்டையன்,  வேணியைக் காப்பாற்ற  வருகிறான். 

               வேணியைத்தூணில் கட்டி வைத்து மண்ணெண்ணையை ஊற்றி எரிக்க முயலும்  குருவம்மாவைத் தடுத்து,  வேணி தங்கள் மகள் என்னும் உண்மையைச் சொல்கிறான்  கொண்டையன்.


                பெண்களால்தான் ஒருசமூகம் முன்னேறமுடியும். மாற்றத்திற்கான விதைகள் பெண்களாலே விதைக்கப்படுகிறது. பெண்கள் இல்லாத உலகு விடியல் இல்லாத  இருளாகவே இருக்கும், மணம்தரும் மலர்களை அரும்பில் அமிலம் ஊற்றிக் கருக்கலாமா? எனப் பெண்களின் அருமை பெருமைகளை குருவம்மாவுக்கு உணர்த்துகிறான் கொண்டையன். 

                     பெண்சிசுக் கொலைக்கு ஒரு பெண்ணான தானே காரணமாகியிருந்த தனது செயலுக்கு வருந்துகிறாள் , பெண்குழந்தைகளை அரும்பவிடாமல் அழித்து     மனித      குலத்தையே    குருடாக்கிய   தனக்கு   தன்மகளே விழி திறந்து  
ஒளிதந்தவள் எனப் பெருமை கொள்கிறாள்.  


            --- அடுத்த தொடரில் வரலாற்று நாடக அனுபவங்கள்.



       









Thursday, June 1, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி- 26


நாற்றங்காலும் நடவுப் பயிரும் 


                    மாற்றுக் கருத்துகளைக்   கருத்து ரீதியாக எதிர் கொள்வர்   கொள்கை வாதிகள் சிலர்  . குள்ளநரிகளாய்  கூட இருந்தே அடுத்துக் கெடுப்பவர் பலர். 

                  எனது முற்போக்கு நாடகக் கருத்தகளை விரும்பாத   அத்தகு குள்ளநரி ஒன்று. “ கரையேறிய அலைகள்” நாடகத்தில் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடிக்க, இருபது நாள்களாகப் பயிற்சி பெற்றிருந்த ஒருவரை நாடகத்தின் முதல்நாள் கடத்திவிட்டார்.

                 இறுதி முழு ஒத்திகையின்போது  அவரைக் காணாது தேடினால் அவரது அண்ணன் அவரை மேல்மருவத்தூருக்கு ஒரு  அவசர    ஆன்மீகப் பணிக்காக அனுப்பி  விட்டதாகத் தெரிந்தது.

                “அவளுக்கு ஒரு நீதி”  நாடகத்தில்  கதைத் தலைவனாக நடிக்கப் பயிற்சியெடுத்தவர்  திடீரென    பணி மாறுதல் காரணமாக சென்னை சென்றுவிட, நான் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கசப்பான பட்டறிவால்,  அடுத்தடுத்த நாடகங்களில் நான் எந்த முதன்மைப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்காமல் என்னை எதற்கும் தயாரான நிலையிலேயே  ( ஒரு ஜோக்கர் போல ) வைத்திருப்பேன்.   

               எந்த க்காலி  இடத்தையும்  இட்டு  நிரப்பும் திறமை யுள்ளவன்தான்   ஒரு மேடைநாடக இயக்குநராக இருக்க முடியும் என்பது எனது மேடை நாடக அனுபவம்.

             அந்த வகையில் இந்த  நாடகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்க்கக்  காவல்  ஆய்வாளர் பாத்திரத்தை நானே    ஏற்று நடித்து, நாடகம்  நின்றுபோகும் எனக் குள்ளநரி கண்ட   கனவினைக் களைத் தொழித்தேன்.  

            “இத்தனைக்குப் பிறகும்  மேடை நாடகத்தைத் தொடர வேண்டுமா?” என்ற   விரக்தியில் சோர்ந்து போயிருந்த  எனக்கு  அரசு வழக்குரைஞராக அப்போதிருந்த திரு எருதலான், திரைப்பட இயக்குநர்  மகேந்திரா போன்றவர்கள்  “சமூக மாற்றத்திற்கான கூர்ப்புள்ள கருவி மேடை நாடகங்கள்”, விடாது தொடருங்கள் எனப்  புத்துணர்ச்சியளித்துத் தொடரச் செய்தனர்.

             அந்தத் தெம்பினில்  1987ல் இரு முறையும், 1990ல் இருமுறையும்  சிறப்பாக அரங்கேறிய  சமூக நாடகம்தான் “ தனிக்குடித்தனம்”



                   இந்த நாடகக் கதையும்      ஒரு பெண்ணின் சீர்மைச் செயலை  உட்கருவாகக் கொண்டதுதான்.

                  ஒரு குடும்பத்தில் தலைமகனாய்ப் பிறந்தவன்தான் அந்தக் குடும்பத்தின்  அத்தனை பொறுப்புகளையும் வாழ்நாள் முழுதும் சுமக்கவேண்டுமா?  அந்தக் குடும்பத்தின் மூத்த மருமகளுக்குத்தான்  அத்தனை சுமைகளுமா?  என்ற கேள்விகளுக்கு , அந்த தலைமகனுக்கு மனைவியாய் வந்த பெண் மூலம்  விடை தேடுவதாய்  அமைந்தது இந்நாடகம்.

               படிப்பு, பருவம், உடல்திறன் அனைத்தும் இருந்தும் அண்ணன் வருவாயில் ஆடம்பரமாய் வாழ நினைத்த தனது கணவனின் தம்பி, தங்கை ஆகியோர்க்கு குடும்பப் பொறுப்பை உணர்த்த முயல்கிறாள்  தலைமகனின் மனைவி  பரிமளம். உடன் பிறந்த தங்களைவிட இடையில் வந்தவளுக்கு என்ன உரிமை என,
தங்கள் சுகபோகத்திற்குத் தடையாய்  இருப்பதாய்  அ ண்ணியின் அறிவுரையை அலட்சியம் செய்கின்றனர் தலைவனின் உடன் பிறப்புகள்.

                அவர்களுக்குப் பணத்தின் அருமையை உணர்த்தவும், வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கவும் , தான் ஒரு எதிர்த் தலைவியாக மாறித் தனது கணவனோடு  அந்த வளாகத்திலேயே ஒரு வீட்டிற்குத் தனிக்குடித்தனம் போகிறாள்  கதைத் தலைவி பரிமளம்.

               தங்களைத் தவிக்கவிட்டுத் தங்கள் அண்ணனோடு தனிக்குடித்தனம் சென்ற பரிமளத்தை அவள் கொழுநனும், நாத்தியும் எதிரியாக நினைத்து வெறுக்கின்றனர்.


           தனித்து விடப்பட்ட  இருவரும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளைக் களைவதிலும், அவர்களுக்கு வருமானத்திற்கான வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும் , மறைமுகமாக உதவுகிறாள் பரிமளம்.

              தனது அண்ணனைவிட அதிக வசதிகளை அடைய,   குறுக்கு வழியில் பொருளீட்ட  முனைத்த  தம்பி   முத்து, ஒரு மோசடிக் கும்பலில் சிக்கித் தவிக்கிறான்.  தனது அண்ணியைவிட  மேலான நகை, புடவைகளுக்கு ஆசைப்பட்ட  விசயா ஒரு ஆடம்பரப் பிரியனை நம்பி மோசம்போகும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். 

            அவர்களை அவர்களின் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றி,  இருவருக்கும் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து   வாழ்க்கை அனுபவங்களை உணர்த்துகிறாள் பரிமளம்.
 பரிமளத்தின் நல்லெண்ணச் செயல்களால் நாணப்பட்ட   இருவரும்  இறுதியில் கூட்டாகச் சேர்ந்து  வாழ விரும்புகின்றனர்.  

             தனியே இருக்கும் போதுதான் சொந்தக் காலில் நிற்கும் பொறுப்பு அதிகரிக்கும்.     குடும்பங்கள் பிரிந்து  இருந்தாலும்   பாசம்  என்றைக்கும்  சேர்ந்தே இருக்கும் என அறிவுறுத்தி அவர்களைத் தனிக்குடித்தனம்  அமர்த்துகிறாள் பரிமளம்.    

             நகைச் சுவை, செட்டிங், இவற்றால் இந்நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்த நாடகத்தில் இரண்டு  புதிய முயற்சிகள். 

                திரைகளைக் கொண்டு காட்சிப் பின்புலத்தை மாற்றுவதைத் தவிர்த்து,  ஒரே அரங்க அமைப்பில்,  மாடிப்படியோடு கூடிய  நான்கு குடியிருப்புகளைக் காட்டுவது.  மூன்று நுழைவாயில் கொண்ட  குடியிருப்புகள் கீழே.  மாடியில் ஒரு குடும்பம் வசிப்பதாகக் காட்டுவது .

             அதற்காக ஒரு மாதம் முயன்று செட்டிங் தயாரித்திருந்தேன்.   ஒவ்வொரு குடும்பத்தின் செயல் நடப்பை  அந்த வீட்டின் விளக்கால் பிரித்து அடையாளப்படுத்தி   யிருந்தேன்.

            விளக்குகள் எரிய வேண்டிய குறிப்புகளை ஒளியமைப்பாளர் ஒரு காட்சியில் மாற்றி எரியவிட,  குடியிருப்பு மாறிப்போன குழப்பம் ஓரிடத்தில்.

             மேடை மாடிப்படியில் ஏறிப்போனவர்கள்  இறங்க வழியின்றித் திண்டாடியதும், வெளியிலிருந்து காட்சிக்கு வரவேண்டியவர்கள்    இறங்காமல் அங்கேயே நின்ற தால்  அடுத்த காட்சிக்கு வெளியிலிருந்து வரமுடியாமல் தவித்த   முரண்நகைச் சுவைகளும் நடந்தன.



                 நாடகத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தவர்களை கவனித்துவிட்டு  நாடகத்தைத் தொடங்க மேடைக்கு நான் வந்தபோது...

             நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும்  “நடிக்க முடியாது” என்று மேடையிலேயே ஒரு தர்ணா போராட்டத்தை நடத்தி பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டனர்.  





               அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்?

               --- அடுத்த தொடரில் 



Tuesday, May 30, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-25

                  பைத்தியமாய் ஒரு வைத்தியம் 

              “நாட்டாமை தீர்ப்பை மாத்து” என்ற திரை வசனம் போல, செம்பறவை நாடகத்தைப் பார்த்த ஒரு பெண்ணிய வாதியிடமிருந்து வந்த  கருத்து மடலில்

 “ கெடுக்கப்பட்டவள் இறுதியில் சாகத்தான் வேண்டுமா?”

என்ற கேள்வி என்னை உலுக்கத்தான் செய்தது.. என்றாலும் ஒரு வன்முறையாளனைப் பழிவாங்க அவனது மனைவியை இரு முரடர்களை வைத்து வன்புணர்ச்சிக்குள்ளாக்கி ஒரு பெண்ணே கொன்றதும், இன்னொருவனைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதுமான குற்ற நடவடிக்கைகளை அவள் சந்திக்க வேண்டியதைத் தவிர்க்கவும்,  புகழ்பெற்ற மருத்துவரின் மகளாக சமுதாயத்தில் மதிப்பிலிருக்கும் ஒரு பெண்மருத்துவரின் தாய் ஒரு விலைமாது என்ற அவப்பெயரை  தன்மகள் அறியாமலிருக்கவும்,  அந்தச் செம்பறவைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதாக அந்நாடகத்தின் முடிவை அமைத்திருந்தேன்.  

               அந்தக் குறையினை 1988ல் அரங்கேற்றிய    
   “ கரையேறிய அலைகள்” என்ற நாடகத்தின் மூலம் போக்க முயற்சித்திருந்தேன்.




                 மணக்கொடை என்னும் வரதட்சணை மறுத்தும், சீர் பொருள்கள் வெறுத்தும், ஆடம்பரமில்லாத  திருமணத்தை  விரும்பும் ஒரு வரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார் ஒரு  மதுரை செல்வந்தர்.

                மருமகனை நம்பி  திருவனந்தபுரத்திலிருக்கும் தனது தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்க ஒரு பெருந்தொகையைக் கொடுத்து அனுப்புகிறார் அந்த செல்வந்தர்..

            இருசக்கர உந்தூர்தியில்  மலைப்பாதை வழியே  தனது நண்பனுடன்    சென்ற அவன், ஒரு விபத்தில் மலை உச்சியிலிருந்து வண்டியோடு விழுந்து எரிந்து இறந்து போகிறான்.  மருமகன் இறந்த செய்தி கேட்ட செல்வந்தர் மாரடைப்பால் இறக்கிறார்.

             கணவனையும்  தந்தையையும் இழந்த துக்கம் தாழாத மல்லிகா ( செல்வந்தரின் மகள் )  வைகை  நீர்த்தேக்கத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள்.

             சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருளாந்து, அவளைக் காப்பாற்றி  மனவளர்ச்சி குன்றிய தன் பருவ வயது  மகள் சித்ராவுக்குத் துணையாக இருக்கட்டும் என்று மல்லிகாவைத் தன்னுடன் சென்னை  திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் செல்கிறார்.

                அங்கு தனது தொழிற்சாலையின் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை மல்லிகாவுக்குக் கொடுக்கிறார்.

            ஆறுமாதங்கள் உருண்டோட,  அந்தத் தொழிலதிபரின்  மன வளர்ச்சி குன்றிய மகள்   சித்ராவுக்கு வாழ்வளிக்க விரும்புவதாக ஒரு  இரங்கூன் மருத்துவர் வருகிறார்.

               அந்த மருத்துவ மணமகனைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியடைகிறாள்.  இறந்து போனதாக தான்  நம்பிக்கொண்டிருந்த தனது கணவன் விநோத் , இரங்கூன் டாக்டர் கிஷோராக அங்கே  வந்திருப்பதை அறிகிறாள்.

                  தன்னை வளர்ப்பு மகளாகக் கருதும்  தொழிலதிபர் அருளாந்திடம்   மாப்பிள்ளையாக    வந்திருப்பது தனது கணவன்தான் எனக் கூறுகிறாள்.

                 விபத்தில் இறந்ததாக அடையாளப் படுத்திவிட்டு, மெய்யப்பர்( மல்லிகாவின் தந்தை)  கொடுத்த பெருந்தொகையோடு பெங்களுரில் தலைமறைவாக இருந்து வரும் விநோத்,  மல்லிகாவை  அந்த வீட்டில் பார்த்து அதிர்ந்தாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல், மல்லிகாவைத்  தனக்கு   யாரென்றே தெரியாது என்று நடிக்கிறான்.    தான் இரங்கூனிலிருந்து வந்த டாக்டர் என்று போலிச் சான்றிதழ் காட்டி  தனது கையாள்களை வைத்து  தொழிலதிபரை  நம்ப வைக்கிறான்.

                 மல்லிகா அவனிடம் தங்கள்  பழைய  நிகழ்வுகளை நினைவு படுத்த, அவன் மல்லிகாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என ஒரு போலி மனநல மருத்துவரை வைத்து அருளாந்தை நம்ப வைக்கிறான்.

                காவல் நிலையத்தில் விநோத்தின் வஞ்சகச் செயல் பற்றிப் புகார் கொடுக்கச் செல்கிறாள்  மல்லிகா.  அவளிடம்  விநோத் - மல்லிகா  திருமணம் நடந்ததற்கான சான்றுகளை காவல்துறை அதிகாரி கேட்க, அழைப்பிதழோ, போட்டோவோ, திருமணப் பதிவோ திருமணம் நடந்ததை நிரூபிக்கும் சாட்சிகளோ  அவளிடம்   இல்லாமையால்  அவள் புகார் புறக்கணிக்கப் படுகிறது. 

             மனநல வைத்தியருடன் மல்லிகாவைத் தேடி   காவல் நிலையம் வந்த அருளாந்தும் அவளைப் பைத்தியம் எனக்கூறி   வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்




                  மல்லிகாவினால் தனது திட்டம் பாழாகிவிடும் என அஞ்சிய விநோத்,  இரண்டு நாள்களில் சித்ராவைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய இதயநோய் மருத்துவமனை சித்ரா பெயரில்  கட்ட கால்கோள் நடத்தச் செல்ல வேண்டுமென்று   தொழிலதிபர் அருளாந்துக்கு  நெருக்கடி கொடுக்கிறான், மல்லிகா அந்தத்   திருமணம் நடைபெற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

               மனநலம் குன்றிய தனது மகளின் திருமணத்திற்கு மல்லிகா தடையாக இருப்பதை விரும்பாத அருளாந்து அவளை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.

                விநோத்தின் விருப்பப்படியே  மருத்துவமனை கட்ட மூன்று கோடி ரூபாயை அவனிடம் கொடுத்து , தனது மகளையும் அவன் குறித்த நாளிலேயே அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் தொழிலதிபர் அருளாந்து. 

                வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா ஒரு போக்கிலியைச் சந்தித்து, சித்ராவை எப்படியாவது கடத்தி அந்தத் திருமணம் நடக்கவிடாமல் செய்ய வேண்டுகிறாள்.

               அதற்குள் சித்ராவை  கடத்தி அவளைக் கெடுத்து, அதன்மூலம் சித்ரா தன்னையேத் திருமணம் செய்து கொள்ளும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கிறான் விநோத்.

               கடத்தப்பட்ட சித்ராவை விநோத்திடமிருந்து காப்பாற்ற முயல்கிறாள் மல்லிகா. மதுவெறியில் மிருகமாய் மாறி சித்ராவைக் கெடுக்க முற்பட்ட விநோத்தை    உடைந்த  மது பாட்டிலால்  அவன் வயிற்றுப் பகுதியில் குத்த,  இரத்த வெள்ளத்தில் இறக்கிறான் விநோத்.

                 அங்கே வந்த போக்கிலி வேடத்திலிருந்த  சி.பி.ஐ அதிகாரி ஆனந்தன், விநோத் ஒரு தேடப்படும்  குற்றவாளி என்றும்
அவன் பம்பாய். கல்கத்தா, டெல்லி , நாக்புர் முதலான பெரு நகரங்களில் , செல்வந்தர் வீட்டுப் பெண்களை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து , அப்பெண்களின் பெற்றோரிடம் இதுபோல நிறுவனம் நடத்த வேண்டுமென்று  பெருந்தொகை யினைப் பெற்றுக் கொண்டு , திருமணம் நடந்த தடயங்களே இல்லாமல், அந்தப் பெண்களுடன்  தேனிலவு செல்வதாய் அவர்களைக் கொன்றுவிட்டு. அதை விபத்தாக்கி விட்டு தப்பிவிடுவதையும், தொழிலாய்க் கொண்டவன் என்றும் விவரிக்கிறான். 

              அவனது கூட்டாளி ஒருவனை  டெல்லியிலிருந்து பின் தொடர்ந்து  தான் சென்னை வந்ததாகவும்,    ஆதாரங்களோடு  அவனைக்     கைது செய்ய,  தான்   போக்கிலி வேடத்தில்  மல்லிகாவைச் சந்தித்ததாகவும். அதற்குள் மல்லிகா அவசரப்பட்டு அவனைக் கொன்று கொலைப்பழி யேற்கும் நிலைக்கு வந்ததையும் கூறி வருந்துகிறான்.

                “பெண்களைப் பைத்தியங்களாக்கி   சட்டத்தின் ஓட்டைகளின் வழியே  தப்பிக்கும்  சமூக விரோதிகளுக்கு,   பாதிக்கப்பட்ட  பெண்கள்தான்  சரியான  தண்டனை கொடுக்க முடியும்”  என்று கூறி கணவனானாலும் ஒரு கயவனைத் தண்டித்த மன நிறைவோடு, சிறை செல்கிறாள் பைத்தியக்கார பட்டம் சூட்டப்பட்ட மல்லிகா. 

                இந்த நாடகத்தை அரங்கேற்றும் போது எனக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்ன தெரியுமா?

                           --- அடுத்த தொடரில்

Friday, May 26, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-24

                 
 முடிவை மாற்று!!!

               காய்கறி விற்றுக் கபடமில்லாத   சிட்டாகத்  துள்ளித் திரிந்த  காவேரி, தன்னைக் கூட்டாக வன்புணர்வு செய்து தலைமறைவாய்ப் போன இரண்டு பேரைப் பழிவாங்க “கௌரி” என்ற பெயரில் செம்பறவையாய் ஊர்   ஊராய்த் 
தேடித் திரிகிறாள்.

                  அவர்களைக் கண்டுபிடித்து அவளது சபதத்தை நிறைவேற்று வதாகச் சொன்ன சமூக விரோதி செங்கோடனின் உறுதிமொழியை நம்பி  கூட்டு   வன்புணர்ச்சியால் கருவுற்றுத் தனக்குப் பிறந்த ஆறுமாதக் கைக்குழந்தையையும், தனது தம்பியையும்  செங்கோடனிடம் ஒப்படைக்கிறாள். அவன் அவர்களை    ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கௌரியை ஆந்திராப் பகுதிக்கு  அழைத்துச் சென்று, அவளை  வைத்து   விபச்சாரத் தொழில் நடத்திப் பணம் ஈட்டுகிறான்.

                  பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு,  அவனது உதவியாள்  இராசாளி மூலம் அங்கிருந்து தப்பி,  தமிழ்நாடு வந்து  தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரது இருப்பிடங்களையும் கண்டு பிடிக்கிறாள்.

                தான் தேடிய இருவரில்  தியாகு என்ற  ஒருவன்   திருச்சியில் வழக்குரைஞராக  இருப்பதைத் தனது உதவியாள்  மூலம் அறிகிறாள்.  அவன் மனைவியை தனது உதவியாள் மூலம் கடத்திவந்து,  அவளை மீட்க , அந்த வழக்குரைஞரை வரவழைக்கிறாள்.

                தனது மனைவியை மீட்க வந்த வக்கீலிடம் , 
18 ஆண்டுகளுக்கு முன்   நடந்த  நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறாள். அவன் அதற்கு வருத்தம்  தெரிவித்து, தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறான்.  தான் பட்டபாட்டை அவனுக்கு உணர்த்த அவன் கண்முன்னே 
அவனது  மனைவியை இரண்டு முரடர்களைக் கொண்டு  
வன்புணர்ச்சி செய்யச் சொல்கிறாள்.  அந்தக் கொடுமையில் வழக்குரைஞர் மனைவி மூச்சுத் திணறி இறக்க, அதைப் பார்த்த வக்கீல் தியாகு பைத்தியக்காரனாகி அலைகிறான்.

                 இன்னொருவன்  ஜார்ஜ், கோவையில்  மருத்துவராக  பெரும் புகழோடும் செல்வச் செழிப்போடும் இருப்பதை அறிந்து அங்கே   செல்கிறாள். அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்து அப்போதுதான்  தந்தை வீடு வந்த டாக்டர் ஜார்ஜின் மகள் வித்யாவை    தனது கையாள்களை வைத்து  ஏமாற்றி அழைத்து வந்து  இரகசிய இடத்தில் அடை த்து வைக்கிறாள். 

                மகளைத் தேடிவந்த டாக்டர் ஜார்ஜிடம் தான் யாரென்பதை நினைவு படுத்துகிறாள் கௌரியாக இருக்கும் காவேரி. வாலிப வயதில் தான் செய்த  தவறுக்கு இழப்பீடாக இலட்சங்களை அள்ளித் தருவதாகக் கூறுகிறான் மருத்தவர்  ஜார்ஜ்.  அவனது வன்செயலால் திசைமாறி, விலைமாதாய் நிற்கும் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாள். சமுதாயத்தில் புகழோடு இருக்கும்  அவன் அவளின் கோரிக்கையை  ஏற்க மறுக்கிறான்.

               அப்படியானால்  அவன் மகளை  இரு முரடர்களை வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகக்  கூறுகிறாள். 

              அப்போது. தனது மனைவி முதல் பிரசவத்தின்போது இறந்து போனதையும்,  வித்யாவை “சுந்தரேசன் அனாதை இல்லத்திலிருந்து” தத்து எடுத்துத் தன் மகளாய் வளர்ப்பதையும் கூறுகிறான் ஜார்ஜ்.

             சுந்தரேசன் அனாதை இல்லத்தில் செங்கோடனால் ஒப்படைக்கப்பட்ட  தனது ஆறுமாதக் கைக்குழந்தைதான் டாக்டரின் மகளாக வளர்ந்துள்ள வித்யா என்பது  காவேரிக்குத் தெரிய வருகிறது. மனதில் இரக்கம் கசிகிறது.  

                  தன்மகளான       வி த்யாவைச் சீரளிக்க விரும்பாமல், டாக்டரிடம் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ள  மீண்டும் 
வற்புறுத்துகிறாள். இரண்டு நாள்களில் தன் முடிவைச் சொல்வதாக காவேரியிடம் சொல்லிவிட்டு  வித்யாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் டாக்டர் ஜார்ஜ்.

                 புகழ்பெற்ற மருத்துவராய் விளங்கும் தான்,    ஊரறிந்த ஒரு விலைமாதை தன் மனைவியாய்  ஏற்றுக் கொள்ள முடியாமலும்,  காவேரிதான் தனது  தாய் என்பதை வித்யா அறியாமலிருக்கவும் , தனக்குத் தானே விச ஊசி போட்டுக் கொண்டு இறந்து விடுகிறான் அந்த டாக்டர்.

                 செங்கோடன், வெலிங்டன் இராணுவ முகாமிலிருந்து  இந்திய இராணுவ இரகசியங்களைத் திருடி பாகிஸ்தானுக்கு விற்க முயற்சிக்கையில்  பாதுகாப்புப் படை அதிகாரி மணிவண்ணனால்  சுடப்பட்டு, தப்பித்துக் கோவை வித்யா மருத்துவ மனைக்கு வருகிறான்.    இராசாளி மூலம் செங்கோடனின் தேசத் துரோகச் செயலை அறிகிறாள்  காவேரி.  

                  தன்னை விபச்சாரத் தொழிலில் தள்ளியதோடு, தாய் நாட்டுப் பாதுகாப்பையும் சீரழிக்கச்  சதி செய்த  செங்கோடனுக்குச்  சிகிச்சை அளிக்க விடாமல்  வித்யாவைத்   தடுத்து    விடுகிறாள் காவேரி.    மேலும் செங்கோடன் இருக்குமிடத்தையும் இராணுவ முகாமுக்குத் தெரிவிக்கிறாள்.

                 தப்பியோடியவ னைத் தேடி வந்த மணிவண்ணன்,  செங்கோடனிடமிருந்த இராணு இரகசியங்களைக் கைப் பற்றுகிறான்.     உரிய நேரத்தில்   சிகிச்சை  கிடைக்காமையால் செங்கோடனும் இறக்கிறான். 

                 கோவை வித்யா மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வந்திருந்த சுந்தரேசன் மூலம்,  இராணுவ அதிகாரியாய் இருக்கும் மணிவண்ணன்  18 ஆண்டுகளுக்கு முன் அனாதை இல்லத்தில் விடப்பட்ட   தனது தம்பிதான்  என்பதை  அறிந்து கொள்கிறாள்  காவேரி.

              மணிவண்ணன்  வித்யாவை விரும்புவதையறிந்த காவேரி, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க  அனாதை இல்ல  சுந்தரேசனிடம் வேண்டுகிறாள்.

              ஊரறிந்த  விலைமகளான ஒருத்தி,   மணிவண்ணனின் அக்கா என்பதோ, வித்யாவின் அம்மா என்பதோ வெளியுலகுக்குத் தெரிந்தால்   உயர்ந்த நிலையிலிருக்கும் அவர்களின் கவுரவம் கெட்டுவிடும் என்றெண்ணிய காவேரி . தான் தேடிய  பணம், பொருள் அனைத்தையும் சுந்தரேசனுடைய  அனாதை இல்லத்திற்கு எழுதி  சுந்தரேசனிடம்  ஒப்படைத்து விட்டு,    விசமருந்தித் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

           ஒரு தேசத்துரோகியின் இருப்பிடத்தை அடையாளம்     காட்டியமைக்காக  காவேரியைப்   பாராட்ட அவளைத் தேடிவந்த மணிவண்ணனும் , அவளுக்கு வாழ்வழிக்க உடனிருந்து உதவிய இராசாளியும்   விசமருந்தி  மரணத்தின் விளிம்பிலிருக்கும்   காவேரியைக்  காப்பாற்ற  முயன்றும்  அந்த செம்பறவை தன் சிறகுகளைத் தானே உதிர்த்துக் கொண்டது.


             இந்த நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
21.03.1987ல்  மீண்டும் புதுக்கோட்டை லாரி உரிமையாளர், ஓட்டுநர், கிளீனர்கள் சங்க ஆண்டு விழாவில்  நகரின் முக்கிய இடத்தில்        ( அண்ணா சிலை அருகே)  நடத்தப்பட்டு செம்பறவையாக நடித்த நடிகைக்கு “குணச்சித்திர நடிகை” என்ற பட்டமும் சங்கத் தலைவரால்  வழங்கப்பட்டது. 

              மூன்று நாள்கள் கழித்து எனது முகவரிக்கு  ஒரு உள்நாட்டு அஞ்சல் வந்தது.  அதில்  “ கெடுக்கப்பட்டவள்  சாகத்தான் வேண்டுமா?  முடிவை மாற்றுங்கள்” என்று ஒரு பெண்ணிய வாதி சாட்டையைச் சுழற்றியிருந்தார். 


உங்கள் பார்வை என்ன? 

                --- அடுத்த தொடரில் “கரையேறிய அலைகள்” 






Wednesday, May 24, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 23



செம்பறவையான  சிட்டு


                    பட்டி மன்றம் முடிந்தது வீட்டில் வழக்காடு மன்றம் என்ற அன்மைக் கால சொலவடை போல,  மேடை நாடகம்  சுந்தர காண்டமாக முடிந்து,  வீட்டில்  யுத்த காண்டம் தொடரப் போவதை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தார்கள்   என் மனைவியைப் பகடிபேசிய உறவுகள். 

               பழியஞ்சி கிராமத்தில்  நடந்த    “அவளுக்கு ஒரு நீதி”  நாடகத்தில்  கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவன்,  அவளை நாகரீகமாக  சேலை உடுத்தக் கற்றுக் கொடுக்கும் காட்சியில்  நடித்த நான்,   நாடக மனைவிக்கு இப்படித்தான்  சேலை கட்ட வேண்டும் என்று சேலையை பிளிட் வைத்து இடுப்பில் சொறுகி விட்டபோது,  மேடையின் முன் பார்வையாளர் பகுதியில் இருந்த என் மனைவியை ” ஏன்டி மரகதம், ஓம் புருசன் ஒருநாளாவது இப்டி ஒனக்குக் கட்டி விட்ருப்பானா?“ என நாடகம் பார்த்துக் கொண்டிருந்த உறவுகள்   சீண்டியதன் விளைவு  வீட்டில் ஒரு யுத்த காண்டம் நடக்கப் போகிறது என்றுதான்  எல்லோருக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு. 

                              நாடகம் முடிஞ்சதும்   ஒப்பனை களைச்சு,. கலைஞர்களுக்கு சம்பளமெல்லாம் கொடுத்துட்டு   என் மனைவியைச் சந்திக்க    அவளைத் தேடுனா ஆளைக் காணோம். 

“ அண்ணே, அக்கா அவங்க சித்திகூட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு   வீட்டுக்குப்  போயிட்டாங்க” ன்னு  ஒரு பையன் தகவல் சொன்னான்.  

இதையெல்லாம் பார்த்தவர்கள்   நா அப்படி நடிச்சது பிடிக்காமதான் என் மனைவி  கோவிச்சுக்கிட்டு போயிட்டான்னு நெனைச்சு,

 “ வீட்டுக்குப் போனதும் இருக்கு வாத்தியாருக்கு  செமத்தியா மொத்து” ன்னு முனுமுனுத்ததும்  என் காதுல விழுந்தது.

வீட்ல என்ன நடக்குமுன்னு அவங்களோட கற்பனை இது.

” ஏங்க, அத்தனை பேருக்கு முன்னால  அவளுக்கு சேலையைக் கட்டி விடுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை?” ன்னு அவ கேப்பா


” வெறும் நடிப்புக்குத்தானே அப்டிச் செஞ்சேன்” ன்னு அவன் சொல்லுவான்


” பிளிட் மடிச்சு அவ கையில கொடுத்து சொறுகிக்கச் சொல்ல வேண்டியதுதானே, அதென்ன நீங்களே கொண்டுபோய் சொறுகிவிட்டு.... அதுவும் தொப்புள்க்குக் கீழே” ன்னு அவ  கொமுட்டுல   இடிப்பா


” அது லோகிப் சேலை அப்படித்தான்டி கட்டணும்”ன்னு அவன் வழிவான்


” ஓகோ, அப்படியே சன்னல் வச்ச ஜாக்கெட்  ஊக்கையும்  மாட்டிவிட வேண்டியதுதானே”ன்னு அவ மொகரையக் காட்டுவா


“  இல்லேப்பா, ஒரு பட்டிக்காட்டு வெகுளிப்பொண்ணுக்கு நாகரீகமா இருக்கது எப்படிங்கிறதுக்காக...” ன்னு அவன் இழுக்குறதுக்குள்ள 


“ நீங்க அந்த தளுக்குக் காரியோட வீட்டுல போயி வேணுன்னாலும் அதையெல்லாம் செய்யுங்க, நா எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்னுட்டு அவ ஓடப்போறாப் பாரு”


                    இப்படியெல்லாம் கற்பனை செஞ்சு பாத்தவங்களுக்குத் தெரியுமா    அன்னக்கிப் பகல் பயிற்சியின்போது  வீட்ல   அப்படி பிளிட் வச்சு சேலை கட்டிவிட எனக்குக் கத்துக் கொடுத்ததே என் மனைவிதான்னு.   

                 ஆமாம். 1964ல் இருந்து மேடை நாடகத்தில் ஈடுபட்டிருந்த எனது நடிவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்து,  1971ல்என்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டவள் என் மனைவி. உள்ளுர்வாசி.

                   மேலும் எனது நாடகத்தில் நடிக்கவரும் நடிகையர் முதல்நாள் ஒத்திகைக்கு வரும்போதெல்லாம், எனது வீட்டில்தான் தங்குவார்கள். அவர்களிடம்  இணக்கமாக, நல்ல நட்புடன் பழகுவதுடன் அவர்கள் விரும்பும் சுவையான உணவைச் சமைத்து வழங்குவதும் எனது மனைவியே.

                 இன்னும் ஒருபடிமேலே சொல்லணுமுன்ன,      நாடகத்தில் வரும் காதல்காட்சிகளை    எனது வீட்டில் வைத்துதான் நாயகன் நாயகிக்குப் பயிற்சி யளிப்பேன். அதனால் எள்ளளவும் எனது நடத்தை மீது சந்தேகப் படமாட்டாள் என் துணைவி.

             எனது மேடை நாடகத்திற்கான  பல கதைகளின் மையக் கருத்துகள் அவள் எனக்குத் தந்தவை என்பதைச் சொல்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.

             சுருங்கச் சொன்னால்  நான்  ஐம்பதாண்டுகளாய் சமூக மேம்பாட்டிற்கான   கலை இலக்கியத் துறையில் களமாட உற்ற துணையாய் இருந்தவள் என் இணையாள் என்பது மிகையில்லை. 


           மலரினும் மென்மையாக இருக்கும் மகளிர் எரிமலையாய் மாறுவதற்கும், எரிந்து சாம்பலாவதற்கும்  ஆணாதிக்க வன்மங்களே காரணம்  என்பதை  தடம் மாறிப்போன  அவள்  தோழியின்  வாழ்வியல் சம்பவத்தை அடிக்கடிச் சொல்லி ஆதங்கப்படுவாள் என் இணையாள்.


            அப்படி அவள் தந்த ஒரு கதைக்கருதான் “ செம்பறவை” என்னும் பெயரில்  மேடை நாடகமாக 1983ல் அரங்கேறியது.






                   காய்கறி விற்க  வந்த காவேரி என்ற பெண்ணை ஒரே அறையில் தங்கிப்படித்த இரு கல்லூரி மாணவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் .
அதன்விளைவாகக் கருவுற்ற அவள் அவர்களிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறாள். அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி  ஏமாற்றிவிட்டு தேர்வு முடிந்ததும்  வெவ்வேறு திசைகளுக்கு இடமாறிச் சென்று விடுகின்றனர்.

                       திருமணமாகாமல்     கர்ப்பிணியான அவளை ஊர் தூற்றுகிறது. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய இருவரில் ஒருவனாவது தன்னை  மனைவியாய் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில், தனது 4 வயதுத் தம்பியுடன்   ஊரைவிட்டு வெளியேறி  அவர்கள் தந்த முகவரிக்கு அவர்களைத் தேடிச் செல்கிறாள். முகவரி பொய்யென அறிந்து புலம்பிய அவளுக்கு ஒரு  மூதாட்டி  உதவிட அவளுக்கு ஒரு பெண்மகவு பிறக்கிறது.


                        நான்கு வயது   தம்பியுடனும் ஆறுமாதக்        கைக்குழந்தையுடனும் ஆதரவற்ற நிலையிலிருந்த அவளுக்கு வாழ்வளிக்க முன்வருகிறான் செங்கோடன் என்னும் அன்முறையாளன்.     


                     அவளின் தம்பியையும் கைக்குழந்தையையும்  சுந்தரேசன் என்பவர் நடத்தும் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து விட்டு  அவளை ஆந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறான் செங்கோடன் .      அங்கு   அவளை   விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துகிறான்.   


                   மென்மையான மலர் மனம் படைத்த அவள் தன்னை வஞ்சித்த இருவரையும் தேடிப் பழிவாங்க வன்மையான செம்பறவையாக மாறுகிறாள்.   அவளை ஏமாற்றிய இருவரையும் தேடிப் பழிவாங்க ஒவ்வொரு ஊராக  அவளை  அழைத்துச் சென்று  கேளிக்கை விடுதிகளில் விலைமாதாக ஆக்கிப் பணம் சம்பாதிக்கிறான். 


 18 ஆண்டுகளுக்குப் பின்    தன்னை  வன்புணர்ச்சி செய்தவர்களில் ஒருவன்     திருச்சியில்  வழக்குரைஞராகவும், இன்னொருவன் கோவையில் மருத்துவராகவும் இருப்பதை அறிந்து அவர்களைப் பழிவாங்க முனைகிறாள்.




                     அவளின் முயற்சியில் வெற்றி பெற்றாளா? 

                                                 ---அடுத்த தொடரில் 

Sunday, May 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-22

                  
மனைவி முன்னிலையில்   நடிப்பது தப்பா?

              கோதண்டராமபுரம் பஞ்சாயத்துத் தலைவரின்   அன்பான வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், 1979 ல் நடத்தி பெயர்பெற்ற  சமூகவியல் நாடகமான “ அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தை  1985 ல் பழியஞ்சி ஊர்த் திருவிழாவில்   நடத்த ஒத்துக் கொண்டேன். 

                   முன்பு நடித்த கதாநாயகனோடு  புதிய நடிகையரை வைத்து பயிற்சியும் அளித்து நாடகத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.  


                   பஞ்சாயத்தைச் சேர்ந்த 18 பட்டிகளிலும் நாடகம் பற்றிய துண்டறிக்கை விளம்பரங்கள் தடபுடல் செய்யப் பட்டிருந்தது. நாடகம் மூன்று நாள்கள் இருந்த வேளையில்  கதாநாயக நடிகருக்கு பணி பதவி உயர்வு வந்து, உடனடியாக  சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு நாள்களுக்குள் எப்படி ஒரு புதியவரை  மூன்றுமணிநேர நாடகத்திற்குத் தயாரிக்க முடியும்?


              வேறு வழியின்றி நானே அந்நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்குவது என  முடிவு செய்தேன்.   மேடை நாடக     இயக்குநராக,  அந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்குமான வசனங்களைச் சொல்லிக் கொடுத்திருந்ததால்   கதா நாயகனின்  வசனங்கள்  

 மனப்பாடம் ஆகியிருந்தது.  அந்தத் துணிச்சலில் நானே கதாநாயக அவதாரம் எடுத்தேன்.

             இதில் மறக்க முடியாத பல புதிய அனுபவங்களைச் சந்திக்க வேண்டியதிருந்தது. 


              நாடகத்தன்று காலையே நடிகையரை எனது வீட்டிற்கு வரச் செய்து ஒரு இறுதி ஒத்திகை பார்த்துக் கொண்டு, மாலை 5.00 மணிக்கு அந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். 


              எங்களுடைய பொல்லாத நேரம் அன்று  அரசியல் காரணமாக பொது வேலை நிறுத்தம் .


              எல்லாப் போக்குவரத்துகளும் நின்று போயிருந்தன.  வேறு வழியின்றி  நாடகம்  நடக்கும் 5 கல் தொலைவிலிருந்த அந்த கிராமத்துக்கு  நடிகையரை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு 
சென்றோம்.  (அப்போது எங்கள் குழுவில் யாரிடமும் உந்தூர்தி இல்லை.)  இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக் கருவிகளுடன் அவர்களுடைய மிதி வண்டியிலேயே  அந்தக் கிராமத்துக்கு வந்து  சேர்ந்தனர். அது ஒரு வித்தியாசமான அனுபவம்

               அந்தக் கிராமத்துக்குச் சென்று நாடகக் கொட்டகையைப் பார்த்ததும்  ஒரே   அதிர்ச்சி.  வழக்கமாக  அந்த ஊர்த்திரு விழாவில்    மண்மேடையின் மீது  ஒரு சரிவான கீற்றுக் கொட்டகை போட்டு,   கதம்ப நிகழ்ச்சிதான் கலைநிகழ்ச்சியாக நடத்துவார்களாம்.    முன்புறம் சற்று உயர்ந்தும் பின்புறம் சரிவாகவும் உள்ள கீற்று க் கொட்டகையில் எப்படித் திரைச் சீலைகள் கட்ட முடியும். செலவு சிக்கனம் என்பதால்  திரை அமைப்பாளரை அழைத்துச் செல்லாமல் நாங்களே மூன்று திரைச் சீலைகளை நடிகர் சங்கத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்தோம். அதை எப்படி அந்த சரிவான கொட்டகையில் கட்டுவது?


                    அழைத்திருந்த  பஞ்சாயத்துத் தலைவரைத் தேடினேன். அவர் ஊருக்கு புறத்தே உள்ள கோயிலுக்கு கிடாவெட்டுப் பூசைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எங்களைக் கவனிக்க வைத்திருந்த ஆளிடம் இந்தக் கொட்டகையில் நாடகம் நடத்த முடியாது என்று சொன்னதும், அவர் அங்கிருந்த கொட்டகை வேலை தெரிந்த இரண்டு பேரை அழைத்து வந்து பின்புறம் சரிந்திருந்த கொட்டகையை ஒரேமட்டத்துக்கு உயர்த்திக் கட்டித் தந்தார். “மேடைக்கு ஏதாவது பெஞ்சுகள் கிடைக்குமா” எனக் கேட்டேன். அரை மணி நேரத்திற்குப் பின்   நான்கு பெஞ்சுகளைக் கொண்டு வந்தார்கள் . அதைவைத்து மேடை அமைக்க முடியுமா? பேசாம மண்மேடையிலேயே     நடிப்பது என்று முடிவுக்கு வந்தோம். நல்லவேளையாக நெல்களத்தை மூடும் தார்ப்பாய் ஒன்று கொண்டு வந்து  அந்த மண்மேடையில் விரித்துத் தந்தார்கள்.


              நீளமும்   அ கலமும் குறைவான அந்தக் கொட்டகையில் சுருக்கமும், இழுபடுவதுமாய் எங்கள் மன்ற நண்பர்கள் திரைகளைக் கட்டி முடித்தார்கள்.


                  500 ரூபாய்க்குள்  ஒரு அமெர்ச்சூர் நாடகத்தை நடத்த வேண்டிய நெருக்கடியால், ஒப்பனைக் கலைஞரை ஒப்பந்தம் செய்து அழைத்துச் செல்லாமல்  ஒப்பனைப் பொருள்களை வாங்கி நாமே  ஒப்பனை செய்து கொள்ளலாம் என  முடிவு செய்திருந்தேன்.  அங்கு ஒப்பனை செய்யத் தனியான இடம் கேட்டபோது     கதவு சன்னல்கள் பொருத்தப் படாது  ஒரு ஓட்டு வீட்டைக் காட்டினார்கள்.   அந்த வீட்டில், ஒரு போர்வையை திரைபோட்டு நடிகையரை ஒப்பனை செய்யச் சொல்லி, நடிகர்களுக்கு நான் ஒப்பனை செய்யத் தொடங்கினேன். 


                இரவு 8.00 மணிக்கு கிடாய் வெட்டு முடிந்து மக்கள் கூத்துப் பொட்டலில் கூடத் தொடங்கி விட்டனர்.   நடிகையர்  தேநீர் கேட்க, அன்று கடையடைப்பு என்பதால் ஒரு வீட்டில் வரக்காப்பி போட்டுக் கொடுத்து விட்டார்கள். வேறு வழியின்றி அதைக் குடித்தோம். 


           ஏற்பாடு செய்த தலைவர்   அப்போதுதான்  ஒப்பனை  செய்து கொண்டிருந்த என்னிடம்   வ ந்து ” என்னப்பா ஆரம்பிக்கலாமா?“ ன்னு கேட்டார். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ,   இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கலாம் என்றேன். 


              “ஒருவழியா சாப்பிட்டுட்டு   ஆரம்பி ங்களே” ன்னாரு.   பசியிலிருந்த   உறுப்பினர்களும் “சரி” ன்னு சொல்ல எல்லாருக்கு  தையிலையில் சாப்பாடு வந்தது . அவர்கள் சாப்பிடும் நேரத்தில்  நானும் கொஞ்சம் அரிதாரத்தைத் தடவிக் கொண்டேன்.


               மேடையில் இடமில்லாததால் இசைக்குழு ஹென்றி, ஜோசப் குழுவினர்  இரண்டு பெஞ்சுகளில் மேடையின் முன்னால்  அமர்ந்தனர்.


              நான் கதாநாயகனாய் நடிக்க வேண்டியிருந்ததால்  நாடக ஸ்கிரிப்ட் பார்க்க  அங்கு வந்திருந்த கோயில்பட்டி பாரதி மன்ற அன்பு சிதம்பரம் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.  அப்படி இப்படின்னு தட்டிக் கொட்டி நாடகத்தை  தொடங்கும்போது மணி பதினொன்னு.


              அரங்க அமைப்பு, ஒப்பனை. இசை எப்படி இருந்தாலும்  நடித்தவர்கள்  தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடித்தனர்.


              உறவு விட்டுப் போகாமல் இருக்க, அப்பாவின் கட்டாயத்தால்,  பட்டிக்காட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்ட பட்டணத்தில் பணிபுரியும்  நாயகன்,  தன் மனைவியை நவநாகரீக மங்கையாக மாற்ற முயலும் கதை  அது.  


                 அதில் ஒரு காட்சியில் பின் கொசுவம் வைத்து மட்டும்  சேலை கட்டத் தெரிந்த  கிராமத்து   மனைவிக்கு  கணவன்  வெளிநாட்டு சார்செட் புடவை வாங்கிக் கொடுத்து  நவ நாகரீகமாக   பிளிட்  ( முன் பிரில் ) வைத்துச் சேலைகட்டக் கற்றுக் கொடுக்கும் காட்சி. 


                 வழுவழுப்பாக நழுவி விழும்  அந்தப் புடவையைக் கட்டமுடியாமல் மனைவி தடுமாறும் போது கணவன்  தானே பிளிட் மடித்து அவள் இடுப்பில் சொறுகி விடுகிறான். கணவனாக நடிக்கும் நான் அப்படிச் செய்தபோது, எதிரே இருந்த பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பொலி. 


                கூடவே  ” ஏன்டி மரகதம் ஓன் புருசன் ஒரு நாளாவது ஒனக்கு இப்டி சேலை கட்டி விட்ருப்பானா?”  ங்கிற கமெண்ட் வந்தது.  


              விமர்சனம் வந்த பக்கம் அப்போதான் பார்த்தேன்  மேடைக்கு முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்க்க வந்த     என் மனைவியைச் சுற்றி இருந்த சொந்தங்கள் அவளை அவ்வாறு சொல்லிக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.


              மேடை நாடகம் என்னவோ அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள். 


                மறுநாள் வீட்டில்...


                    --- என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.

Thursday, May 18, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-21



ஆளுக்கு ஒரு நீதியா?

                    சின்னக் குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் போடுவதில் ஏற்பட்ட சிரமத்தால் இனி  குழந்தை பாத்திரங்களே இல்லாத  கதைகளை எழுதுவது என்ற  முடிவில் உறுதியாகவே இருந்தேன்.

                அதேபோல   பொது வெளியில் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை,  20க்கு 16 பலகை அடித்த மேடைகளில், நான் ஆசைப்பட்ட  பின்புலக் காட்சிகளை அமைப்பதில்  எதிர்பாராமல் நடந்த சிக்கல்களால் இனி  அமெர்ச்சூர் மேடைகளுக்கு அடங்காத  செட்டிங்களைப் போடக்கூடாது என்ற முடிவோடு  வெறும் திரைச்சீலைகளை மாற்றும் காட்சிகளை வைத்து ஒரு நாடகத்தை எழுத முனைந்தேன்.

             அப்படி  பெண்களின் பிரச்சனையை மையக்கருவாகக் கொண்டு  எழுதப்பட்டு 1979ல்   அரங்கேற்றிய நாடகம்தான்
  “ அவளுக்கு ஒரு நீதி”


                     அதிக படிப்பறிவில்லாது , கிராமத்து பழக்க வழக்கங்களில் ஊறிப்போன ஒரு கிராமத்துப் பெண்ணை, சென்னையில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு  கிராமத்து      இளைஞன் உறவுமுறை விட்டுப் போகாமலிருக்கப் பெற்றோர் செய்த ஏற்பாட்டின்படி  திருமணம் செய்து கொள்கிறான்.

                அந்த இளைஞனின் கிராமத்துத் திருவிழாவினைக் கண்டுகளிக்கச்  சென்னை நிறுவன நண்பர்கள் வருகின்றனர். பின் கொசுவம் வைத்துக் கட்டிய கண்டாங்கிச் சேலையுடனும், நெற்றியில்    காசளவு  குங்குமப் பொட்டுடனும், அள்ளிச் செறுகிய கொண்டையுடனும்  வெகுளியாய் வரவேற்ற தங்கள் நிறுவன உதவி மேலாளரின் மனைவியின் கோலத்தைப் பார்த்த  அந்த  நண்பர்கள் பகடி பேசுகின்றனர்.

                   தன் மச்சினன்  ஊரில் நடக்கும்  முதல்   திருவிழா   தேவைக்கு,  உச்சிக்குடுமியோடு   அவளது அண்ணன், ஆட்டுக்குட்டி, சேவல், அச்சுவெல்லம், பச்சரிசி,  காய்கறி இலைக்கட்டு முதலான சீர்கள் கொண்டு வருகிறான். இவற்றைப் பார்த்த நாகரீக மோக  நகரத்து    நண்பர்கள்  கதைத் தலைவனைக் கேலி செய்கின்றனர்.

                ஒரு வெளிநாட்டுக்கு அழகுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின்  உதவி   மேலாளர் தனது தகுதிக்கேற்ப அவரின் மனைவியை மாற்ற வேண்டுமென்று நண்பர்கள்  வற்புறுத்துகிறார்கள்.

                கிராமத்துக் கலாச்சார நடை உடை பழக்க வழக்கங்களை மாற்ற முனையும்  கதைத்தலைவனை அவனது அப்பா கிராமத்துக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மறுக்கிறார்.

                  அவளை நாகரீக  மங்கையாக  மாற்ற சென்னைக்கே அழைத்துச் செல்கிறான் அவளின் கணவன். அங்கு அவளை மாற்ற அவன்படும் பாட்டை நகைச்சுவையாய்ச் சொல்லியிருந்தேன்.

               மேலாளர்  பதவி  உயர்வு பெற்றமைக்காக அவன் நண்பர்களுக்கு  ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து கொடுக்கிறான்.   விருந்துக்கு வந்த கிராமத்து மச்சினன்,   அங்கு நடந்து கொண்டிருந்த      மேற்கத்திய இசை நடனத்திற்கிடையே,  நாட்டுப்புறப் பாட்டுப்பாடி ஆட, அவனுடன் கதைத் தலைவியும் சேர்ந்து ஆடுகிறாள்.  அதைக் கண்ட அவனது  நண்பர்கள்  செய்த கேலிகளால்,   கதைத் தலைவன் அவமானப்பட்டு,    அவளைக் கிராமத்துக்கே திரும்ப அனுப்புகிறான். மேலும் அவளை விவாகரத்து செய்யவும்  தன் தந்தையிடம் வற்புறுத்துகிறான். ஊர்கூடி பஞ்சாயத்து நடக்கிறது.





                 வாழ்க்கையை இழக்க விரும்பாத கதைத்தலைவி,
 தன் கணவன் விருப்பப்படியே  இனி நடந்து கொள்வதாய் பஞ்சாயத்தாரிடம்     சொல்லி, பட்டணத்திற்குச் சென்று  கணவனுடன் சேர்கிறாள்.

              “முள்ளை முள்ளால் தான்  எடுக்க வேண்டும்” என்று முடிவெடுக்கிறாள். தன் கணவன் விரும்பும்படி நடை, உடை பழக்கங்களை மாற்றிக் கொள்கிறாள்.  இன்னும்  ஒருபடி மேலே போய் அவனுடைய நண்பர்களுடன் மிக நெருக்கமாகப் பழகவும், கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லவும் தொடங்குகிறாள்.

                ஒரு கட்டத்தில்,  கேளிக்கை விடுதியில்  தன் கணவனின் நண்பனுடன் மது அருந்தி, ஆட்டம் போடுவதாகவும் நடிக்கிறாள்.
நாகரீகம் என்ற பெயரில் தன் மனைவி அளவுமீறி அயலானுடன் பழகுவதையும். ஆடம்பர மோகம் கொண்டு அலைவதையும் கண்டு மனம் புழுங்குகிறான் கதைத் தலைவன்.  தன்மான இழப்பைத் தாங்க முடியாது தற்கொலை முயற்சிக்குச் சென்ற கணவனைத் தக்க சமயத்தில் காப்பாற்றி,  அவனை பண்பாட்டுச் சீரழிவை உணரச் செய்கிறாள்.

              இந்த நாடகம் சுற்று வட்டாரக் கிராமப்புற மக்களால் பெரிதும்  பாராட்டப் பட்டது. அதன் விளைவாக எனது உறவினரும்  கோதண்ட ராமபுரம் பஞ்சாயத்துத் தலைவருமாயிருந்த திருமலை அவர்கள், அவர்கள் ஊர்த் திருவிழாவில் அந்த  நாடகத்தை 1985ல்நடத்த வேண்டுமென்றார்.  ஆனால் அவர்  மிகக் குறைவான செலவில் நடத்தித்தர வற்புறுத்தினார் . ஆசைப்படுகிறாரே என நானும் ஒத்துக் கொண்டேன்.  முன்னர் நடித்த  நடிகையர்அ ந்த தேதியில் வேறு நாடகத்தில் ஒப்பந்தமாகி   இருந்தமையால்  திருச்சியிலிருந்து கதாநாயகி நடிகையையும் புதுக்கோட்டை நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை   நடிகையும் ஒப்பந்தம் செய்தேன்.

                 பழைய கதாநாயகனை வைத்து புதிய நடிகைகளோடு இரண்டு மூன்று  பயிற்சியும் நடந்தது. பதினெட்டுப் பட்டி கிராமத்திலும் எங்கள் நாடகம் நடப்பது பற்றி துண்டறிக்கை விளம்பரம் செய்யப்பட்டது.

                நாடகம் நடக்க மூன்று நாட்களே  இருந்த நிலையில் , கதாநாயகனாக நடித்தவருக்கு ( கல்வித் துறையில்  பணிபுரிந்தவர்) திடீரென  சென்னைக்கு பணி உயர்வு ஆணை வந்தது.அவர் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து விடுபட்டுச் 
சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய நிலை.

             அவருக்கு பணிமுக்கியம். எனக்கு நாடகத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். மூன்று நாள்களுக்குள் ஒரு புதியவரை அந்தப் பாத்திரத்திற்குத் தயாரிப்பது அத்தனை எளிதான செயலா?
.
                              அந்த நிலையில் என்ன செய்வது?

                                                                                        --- அடுத்த தொடரில்






  

Tuesday, May 16, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 20

               

வலிகளோடும் வழிகள் தேடி... 

                  நாடும் வீடும்   மேடை நாடகத்தில், வஞ்சகன்  ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்  மனமொடிந்து    தன்னை மாய்த்துக் கொள்ள காட்டுப் பகுதிக்குள் ஓடுகிறாள். அங்கே மரம்வெட்டும் தொழிலாளி ஒருவன், வெட்டி விழுந்த மரத்தினடியில் சிக்கி உயிருக்குப் போராடிக்   கொண்டிருக்கிறான். அதனைக் கண்ட அப்பெண் அவனைக் காப்பாற்ற முயல்கிறாள். அவன் மீது விழுந்திருந்த மரத்தை (  அரங்கத்திற்கேற்ப கிளைகள் வெட்டப்பட்ட உண்மையான உதியமரம் ) அகற்ற முனைகிறாள். ( ஒத்திகையில் அட்டை மரத்தைப் புரட்டிப் பயிற்சியெடுத்த அந்த நடிகை உண்மையான மரத்தைப் புரட்டச் சிரமப்படுகிறாள். ஒருவழியாக அந்த மரத்தைப் புரட்டி நிமிர்த்தி வைத்துவிட்டு, மரத்துக்கு    அடியில் மயக்கமுற்றுக் கிடக்கும் விறகுவெட்டிக்கு முதலுதவி செய்ய அவனை நோக்கிக் குனிந்த போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது.

                 நிமிர்த்திய மரம் மீண்டும் கீழே விழாமலிருக்க அரங்கத்தின் மேல் கூரையிலிருந்து ஒரு கனமான கொக்கியைத் தொங்க விட்டிருந்தோம். மரத்தை நிமிர்த்தியதும் அதன் கவைப் பகுதியை அந்தக் கொக்கியில் மாட்டிவிட அந்த நடிகை மறந்துவிட்டார். விளைவு, நிமிர்த்திவைத்த அந்த மரம் அந்த நடிகையின் மேல் விழ, அதன் அழுத்தம் தாங்காமல் நடிகை  கீழேகிடந்த விறகு வெட்டிமேல் குப்புற விழ,இருவரும் மரத்தினடியில் ஒருவர்மேல் ஒருவர் கிடக்க  ...      காட்சி அப்படித்தான்போல என நினைத்த பார்வையாளர் பகுதி இளைஞர்களின் விசிலும் கைதட்டலுமாகிய ஆரவாரம் கிளம்பியது .  அரங்கப் பொறுப்பிலிருந்த எங்களுக்கோ என்ன செய்வது என்ற பரபரப்பு தொற்றியது . காட்சிக்குள் நுழையவும் முடியாமல் , நிறுத்தவும் முடியாமல் அப்போது  பட்டபாடு அப்பப்பா.... இதுதான் மேடை நாடகம் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களே . திரைப்     படப்பிடிப்பானால் தவறாய்ப்போன காட்சியை நீக்கிவிட்டு   அடுத்த டேக் போய் விடலாம். மேடையில் என்ன செய்ய முடியும் ? கல்லில் விழுந்த கண்ணாடிதான்.

              திரையை மூடிவிட்டு மரத்தைப் புரட்ட, விளக்கணைக்கும் பொத்தானை அழுத்தினால் ஒளியமைப்பாளரும் அந்த நெருக்கடிக் காட்சியில் ஒன்றிப்போய் சிவப்பு விளக்கு எரிவதைக் கவனித்து மேடை விளக்கை அணைக்காமல் விட்டுவிட்டார். 

                  அந்த நெருக்கடியில்,  அந்த நாடகத்தில்  நகைச்சுவைப் பாத்திரத்தில் டீ க்கடை காயாம்பு வாக நடித்த ( தடித்த ) நடிகை  
 ( கதாநாயகி நடிகையின் உடன்பிறந்த    சகோதரிதான் )  காட்சிக்குள் நுழைந்து அந்த மரத்தைப் புரட்டிப்போட்டு, தன் தங்கையைத் தூக்கி விட்டார்.    ( இரத்த பாசமல்லவா )  அதன்பின் திரையிறக்க ப்பட்டது.  நல்ல வேளையாக விபரீதமாக எதுவும் நடக்க வில்லை.  நகைச்சுவை நடிகைதான்   கொஞ்சம் சீரியசாகிவிட்டார். தங்கைக்கு ஏற்பட்ட துன்பத்தால். கதாநாயகி தனது தவறுதான் என்று சொன்னபின்  சமாதானமானார்.  நடிகையை ஆசுவாசப் படுத்தி நாடகத்தைத் தொடர்ந்தோம். இடைப்பட்ட நேரத்தில்  வெண்திரையில் சிலைடு போட்டுச் சமாளித்தோம்.

                புதுமையாக உண்மையான பின்புலத்தை அமைக்க வேண்டுமென்ற எனது ஆர்வக்கோளாறு காரணமாக, உண்மையான மரத்தை வைத்து வெட்டச் செய்ததோடு,  அந்த  நாடகத்தில் வரும் டீக்கடை காட்சிகளில் தேநீர் தயாரிக்கும்  வேம்பாவுடனான டீஸ்டாலை அரங்கத்தில் அமைத்திருந்தேன். 16 அடி அகல மேடைக்குள் அதை   நிறுவுவதிலும், அகற்றுவதிலும் ஏற்பட்ட சிரமங்களை  அப்புறம்தான் உணர்ந்தேன்.

              அந்த டீக்கடை வேம்பாவால் இன்னொரு சிக்கலும் ஏற்பட்டது.  அந்த நாடகத்தில்  மனைவியை இழந்த ஒரு செல்வந்தரின்  மூன்று வயதுக் குழந்தைக்கு  தாயாக  நடிக்க வேண்டிய நிர்பந்தம்  விறகுவெட்டியின் காதலிக்கு வருகிறது.  அந்தக் குழந்தை பாத்திரத்தில் எனது மூன்று வயது மகனை நடிக்க வைத்திருந்தேன்.

             அவனை எனது அப்பா தன் பொறுப்பில் மேடையின் மறை பகுதியில் வைத்துக் கொண்டிருந்தார்.  அரங்கப் பொருள்கள் மாற்றத்தால் காட்சிக்குக் காட்சி இடைவெளி அதிகமாகிப் போனதால் நாடகம் சற்று காலம் நீண்டே நடந்தது. 

             அடுத்து அந்தக்  குழந்தை பாத்திரம் தனது  அம்மாவோடு  வீட்டுக்குள்  சிரித்து விளையாடும் காட்சி  நடக்கவேண்டும்.   நேரமோ  இரவு 1.00 மணி..  குழந்தையாக நடித்த எனது மகன் அவனது தாத்தா மடியில் படுத்துத் தூங்கிவிட்டான்.  தூங்கிவிட்ட குழந்தையை விழிக்க வைக்க,  அவனை வைத்திருந்த எனது அப்பா  காட்சிக்காக வைத்திருந்த வேம்பாவில்  இருந்த பழைய தேநீரை அவனுக்குக்  குடிக்கக்  கொடுத்திருக்கிறார்.  அதைக் குடித்த குழந்தை வாந்தியெடுத்திருக்கிறான்.  பயந்துபோன என் அப்பா,  எனது மனைவியை அழைத்துக் கொண்டு குழந்தையைப்   பக்கத்திலிருந்த மருத்துவரிடம் காட்ட   கொண்டு போய் விட்டனர்.

                நாடகக் காட்சிகளை நகர்த்தும் மும்முரத்திலிருந்த எனக்கு,  காட்சிக்கான குழந்தையைத் தேடும்போதுதான் அரங்கப் பொறுப்பிலிருந்த உதவி இயக்குநர் நடப்பினைச் சொல்கிறார்.


         இப்போது  நான் குழந்தைக்கு அப்பாவாக மருத்துவம் பார்க்கச் செல்வதா?  நாடக இயக்குநராய் நாடகத்தைத் தொடர்வதா?  பாதியில் நாடகத்தை நிறுத்துவதா?  குழப்பத்தில் இருந்த நான் ஒரு முடிவுக்கு வந்தேன். குழந்தையை  எனது மனைவியும் எனது அப்பாவும்  மருத்துவரிடம் காட்டிக் கவனித்துக் கொள்வார்கள். நாடகத்தை என்னைத் தவிர யாராலும் தொடர முடியாது. எனவே நாடகத்தைத் தொடர முடிவு செய்தேன். 

இப்போது நாடகத்தில்  அம்மாவோடு விளையாடும் குழந்தைக்கு  என்ன செய்வது?  என்ற நெருக்கடி.   அந்தக் காட்சியில் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு     “தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையோடு நான் போய்  விளையாடிவிட்டு வருகிறேன் ” என்று    குழந்தையின் அப்பாவாக நடிப்பவரிடம்  சொல்லும்படி   உடனடியாக உரையாடலை மாற்றி நிலைமையைச் சமாளித்தேன். அடுத்தடுத்து      குழந்தை பாத்திரம் பங்கேற்கும் காட்சிக்கு என்ன மாற்று செய்வது என்ற குழப்பத்தோடு காட்சிகளை நகர்த்திக் கொண்டு  இருந்த நிலையில்,  என் அப்பா எனது மகனோடு மேடைக்கு வந்து  “வாந்தி நின்னுடுச்சுப்பா” ன்னாரு.  சோர்வாக இருந்த என் குழந்தை  மீண்டும் மேடைக்கு வந்த புத்துணர்ச்சியில் அவனுக்கான  உரையாடல்களை  உடன் நடிப்பவர்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஒருவாறு  நாடகத்தை முடித்தேன். 

              அந்த நாடகத்தில் பெற்ற   கசப்பான பட்டறிவால் 
 “ இனிமே  குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் எழுதவே கூடாது”
” புதுமைங்கிற பேர்ல மேடைக்கு அடங்காத செட்டிங்களை அமைக்கவே கூடாது” ங்கிற இரண்டு உறுதிகளை  எனக்குள்ளே எடுத்துக்கிட்டேன்.  


 சமூக மாற்றம் காண விழையும் படைப்பாளிகளின்    மனம்   கிளை  தாவும்   குரங்குகள்தானோ? அவை  ஓரிடத்தில்  கட்டுப்பட்டு நிற்குமா? 


எடுத்த முடிவுகளில்  நான் உறுதியாக நின்றேனா?  

               --- அடுத்த தொடரில்  சொல்கிறேன்.