Saturday, March 8, 2014

நினைவஞ்சலிக் கூட்டம்


புதுக்கோட்டை திருக்குறள் தலைவராக இருந்து கடந்த 05.02.2014 அன்று இயற்கை எய்திய திரு பா.இராமையா அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் 08.03.2014 அன்று புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடந்தது.

திருக்குறள் கழகமும், புதுக்கோட்டை மூத்த குடிமக்கள் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்விற்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச்செம்மல் திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையேற்று மறைந்த திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா அவர்களின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.

தமிழிசைச் சங்கத் தலைவர் திருமிகு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் பா.இராமையா அவர்களின் சிறப்புகளைத் தனது  அறிமுக உரையில்  கூறினார் .

காலமான பா.இராமையா அவர்கள் தனது இல்லத்தின் உப்பரிகைப் பகுதியினைத் தமிழ்ப்பணிக்காக பாலா தமிழரங்கம் எனப் பெயரிட்டு தொடர்ந்து  திங்கள் தோறும் அவ்வரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகள் நடத்தியமை, அவ்வரங்கம் முழுமையும் போற்றத்தகு தமிழறிஞர்களின் திருவுருவப் படங்கள் பொதிந்துள்ளமை, தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழிசைச் சங்கம், மூத்தகுடிமக்கள் அமைப்பு ஆகியவற்றை நிறுவியமை, ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டுவிழாக்களை தமிழ் மணம்கமழ நடத்தியமை, திருக்குறள் மாநாடு நடத்தியமை, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி திருச்சியோடு இணைக்கப்பட்டதைக் கண்டித்து இயக்கம் நடத்தியமை, தமிழ் செம்மொழியாக்கப்பட நடைப்பயணம் மேற்கொண்டமை.  

2010ல் சென்னை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தோடு இணைந்து சங்க இலக்கியப் பயிலரங்கத்தினை பத்துநாள்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தியமை, திருக்குறளின் தேர்ந்த 330 திருக்குறள்களுக்கு ஆங்கில உரை எழுதி நூலாக வெளியிட்டமை, அறமும் புறமும் என்னும் நூல் வெளியிட்டமை, புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைப் புரந்தமை, அனைத்திற்கும் மேலாக புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே திருவள்ளுவர் சிலையினை அமைப்புக்குழுத் தலைவராக இருந்து நிறுவியமை ஆகிய அன்னாரது சிறப்புகளை நிகழ்விற்கு வருகை தந்திருந்த புதுக்கோட்டையின் இலக்கிய சமூக அமைப்பினர் நினைவு கூர்ந்து அஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் திருமிகு.ரெ.இராமையா, இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு இராமுக்கண்ணு, உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலாளர் புலவர் தி.சு.மலையப்பன், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டனை நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா, புதுக்கோட்டை வர்த்தகக்கழக கவுரவத் தலைவர் திருமிகு இரா.சேவியர், உணவக உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு சண்முக பழனியப்பன், திலகவதியார் திருவருள் ஆதினத் தலைவர் திருமிகு தயானந்த சந்திரசேகரன்,  புலவர் துரை.மதிவாணன், ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால்செட்டியார், திருக்குறள் கழகப் பொதுச் செயலாளர் திருமிகு வே.இராமதாசு, மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா, சர்வசித் அறக்கட்டளையின் தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு,  இலக்கியப் பேச்சாளர்கள் தஞ்சை வி.விடுதலை வேந்தன், செயசீலன், மதுரை பத்திரிகையாளர் திருமிகு தி.அரப்பா,  முனைவர் தா.மணி, முனைவர் சு.மாதவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், வரலாற்றுப் பேரவை முனைவர் இராசாமுகம்மது, திருவள்ளுவர் மன்றத்தலைவர் திருமிகு மா.கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் இலக்கிய மன்றத் தலைவர் திருமிகு முகேசு , திரு ஆரோக்கியசாமி, தொழிலதிபர்கள்  திரு மைக்கேல்  ஏ.வி.எம் .நல்லையா.நட்புறவு இயக்கத் தலைவர் திரு முத்துச்சாமி ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்.

புதுக்கோட்டையின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளைச் செலுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்குறள் கழக இணைச் செயலாளர் திரு மா.மீனாட்சி சுந்தரம், பாவலர் பொன்.க ஆகியோர் செய்திருந்தனர். திருக்குறள் கழகப் பொருளாளர் திருமிகு கோ.கோவிந்தசாமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Wednesday, March 5, 2014

சேவைக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மத்திய சுழற்கழகமும்.புதுக்கோட்டை மகாராணி சுழற்கழகமும் இணைந்து 04.03.2014 அன்று சுழற்கழக அரங்கத்தில் ஆளுநரின் அலுவல் சார்ந்த வருகைக் கூட்டத்தினை நடத்தியது.

                 அந்நிகழ்வில் இரண்டு அமைப்புகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

                பல துறைகளிலும் செயற்கரிய சேவையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

                புதுக்கோட்டையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதரவற்று இறந்த, கோரப்படாத 149 உடல்களை அரசு மருத்துவமனையிலிருந்து பெற்று முறையாக நல்லடக்கம் செய்தும், 

              அகவை முதிர்ந்த முதியோர்களுக்கு இல்லங்களிலேயே சென்று மருத்துவ உதவிகள் செய்தும், 

               நடக்க இயலாத நோய்வாய்ப்பட்டவர்களை ஆம்புலன்சு வண்டி மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் வரும் சர்வசித் மக்கள் சேவை அறக்கட்டளை சிறந்த சேவை நிறுவனமாகப் பாராட்டப் பட்டது

              அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் மு.சரவணன், தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் ச.இராமதாசு, செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா, அறங்காவலர் திரு.அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் சுழற்கழக ஆளுநர்  ரொட்டேரியன் கோபால் அவர்கள் வழங்கிய அவ்விருதினை பலத்த கையொலிகளுக்கிடையே பெற்றனர். 

Monday, March 3, 2014

இளங்கோவடிகள் இலக்கிய மன்ற இரண்டாமாண்டு விழா.

புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் இரண்டாமாண்டு சிலப்பதிகாரவிழா தி.பி.2045 கும்பம் 17,18,தேதிகளில்         ( 01.03.2014-02.03.2014) புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது.

கும்பம் கஎ ஆம் நாள் (1.03.2014 ) காரிக்கிழமை ( சனிக்கிழமை ) மாலை கலைவளர்மணி எம்.பி.எஸ் கருணாகரன் குழுவினரின் மங்கல இசையோடு விழாத் தொடங்கியது. செல்வி சு.சுபாசினி திங்களைப் போற்றுதும் வாழ்த்துப்பா இசைக்க, இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் தலைமையேற்க. கம்பன் கழகத் தலைவர் தமிழ்த்திரு ரெ.இராமையா, உலகத்திருக்குறள் கழக மாவட்டத் தலைவர் தமிழ்த்திரு சண்முக பழனியப்பன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.

திருமதியர் மயில்சுந்தரி வைரமாணிக்கம், தருமாம்பாள் மலையப்பன், சத்தியபாமா இராமுக்கண்ணு, வள்ளியம்மைசுப்பிரமணியன், திருமதி சுந்தரராசன் ஆகியோர் மங்கலச்சுடரேற்றினர்.

 மன்றத்தின் துணைத் தலைவர் தமிழ்த்திரு இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நாவுக்கரசர் முனைவர் சோ.சத்தியசீலன்  பற்றிய அறிமுக உரையினை புலவர் மா.நாகூர்அவர்கள் அளித்தார். முனைவர் சத்தியசீலன் அவர்கள் தனது தொடக்க உரையில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் சீர்மைகளைச் சாறுபிழிந்து சுவைஞர்களுக்கு வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலப் பொருளாளர் தமிழ்த்திரு சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையிலும், மெ.இராமச்சந்திரன் செட்டியார்  அவர்கள் முன்னிலையிலும்  புதுக்கோட்டை சாய் நாட்டியாலயா வின் “சிலப்பதிகார நாட்டிய நாடகம்” நடைபெற்றது.   நாட்டிய நாடகம் மூலம் சிலம்பின் சிறந்த காட்சிகளை பார்வையாளர்களுக்குப் பருகத் தந்த நாட்டியக் குழுவினரைப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் பாராட்டிப் புகழ்ந்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.புலவர் கு.ம.திருப்பதி அவர்கள் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்க, திருமிகு கு.சுப்பிரமணியன் அவர்கள்  நன்றியுரையாற்றினார்.

இரண்டாம் நாள் கும்பம் கஅ (18) 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் தலைமையில் “சிலப்பதிகாரச் சிறப்பியல்புகள்” உரையரங்கம் நடைபெற்றது. 

செந்தூரான் கல்விக்குழுமத் தலைவர் தமிழ்த்திரு இராம.வைரவன், மூத்தகுடிமக்கள் அமைப்பின் தலைவர் திருமிகு க.இராமையா ஆகியோர் முன்னிலையேற்றனர்.இளங்கோவடிகள் இலக்கிய மன்றப் பொருளாளர் திருமிகு மு.இராமுக்கண்ணு அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிலம்பொலி செல்லப்பனார் பற்றிய அறிமுகத்தை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் துணைத் தலைவர் புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் நிகழ்த்தினார். 

 இளங்கோவடிகளுக்கு நாடெங்கும் மன்றங்கள் பல்க வேண்டும், சிலப்பதிகாரக் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு ஊட்டப்பட வேண்டும் எனத் தனது கருத்துரையில் சிலம்பொலியார் கூறினார். விரைவில் புதுக்கோட்டையில் திருவள்ளுவருக்குச் சிலை அமைந்தது போல இளங்கோவடிகளுக்கும் சிலை அமைக்கப்படும் என்றும், கண்ணகிக்குக் கோட்டம் ஒன்று அமைக்கப் படும் என்றும் இளங்கோவடிகள் மன்றத் தலைவர் தமிழ்த்திரு முரு.வைரமாணிக்கம் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து முனைவர் தி.இராசகோபாலன் அவர்கள் “ சிலம்பின் எச்சரிக்கை” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.உலகத் திருக்குறள் பேரவையின் மகளிரணித் தலைவர் திருமதி சந்திரா ரவீந்திரன் அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்தளிக்க, புலவர் மகா.சுந்தர் அவர்களின் நன்றியுரையோடு காலை நிகழ்வுகள் நிறைவுற்றன.

மாலை புதுகை இசைப்பள்ளி தந்திக்கருவி வித்தகர் திருமிகு அம்பிகாபிரசாத் அவர்கள் வயலின் இசைக்க, கலைமுதுமணி புதுகை கே.இராசா, திருச்சி கோபு நாகராசன் ஆகியோர் மிருதங்கம் இசைக்க சிறப்பானதொரு இசையரங்கம் நடைபெற்றது. 

நிகழ்விற்கு ஆலங்குடி வணிகர் சங்கத் தலைவர் மெ.அ.தனபால் செட்டியார் அவர்கள் முன்னிலையேற்றார்.

அந்நிகழ்வினையடுத்து வெங்கடேசுவரா கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்த்திரு ஆர்.எம்.வி.கதிரேசன் அவர்கள் தலைமையிலும் குழந்தைகள்நல மருத்துவர் ச.இராமதாசு, எம்.ஆர்.எம். கல்விநிறுவனத் தலைவர் திருமிகு எம்.ஆர்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும்  “ நெஞ்சு அணி” என்னும் தலைப்பில் வாணியம்பாடி கவியருவி முனைவர் தி.மு.அப்துல்காதர் அவர்களின் உரைவீச்சு நடைபெற்றது.

 இன்றையச் சமூகத்திற்கு சிலப்பதிகாரம் காட்டும் நெறிகள் எவ்வாறு நெஞ்சணிகளாக அமைந்துள்ளன என்பதை அரங்கு நிறைந்தோர் ஆழக்கொள்ளும் தகைமையில் அவரது உரைவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது..வரவேற்புரையினை முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் வழங்க, நன்றியுரையினை சிலட்டூர் இராமலிங்கம் அவர்கள் வழங்கினார்

விழாவின் நிறைவு நிகழ்வாக புதுக்கோட்டை வர்த்தகர் கழகத்தின் கவுரவத்  தலைவர் திருமிகு ஆர் சேவியர், பொன்மாரி கல்வி நிறுவனங்களின்  அறங்காவலர் திருமிகு அ.லெ.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் “சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஊழ்வினையா? ஆள்வினையா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

ஊழ்வினையே என்னும அணியில் நகைச்சுவை அருவி இரா.மாது, கற்பனைக் களஞ்சிய நங்கை ரேணுகாதேவி ஆகியோரும், ஆள்வினையே என்னும்அணியில் சன்மார்க்க சீலர ஜோதி இராமலிங்கம் இசைப் பேரரசி ஜோதிலெட்சுமி ஆகியோரும் வாதிட்டனர்.

அமுதசுரபி இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் முனைவர் திருப்புர் குமரன் அவர்கள் நடுவராக இருந்து சீர்மை செய்தார். இருதரப்பு வாதங்களையும் ஒப்புநோக்கி “ சிலப்பதிகாரத்தில் விஞ்சி நிற்பது ஆள்வினையைவிட ஊழ்வினையே” எனத் தீர்ப்பளித்தார். பட்டிமன்றக் குழுவினரையும் முன்னிலையாளர்களையும் பார்வையாளர்களையும் திருமிகு  கோ.தனபதி அவர்கள் வரவேற்க, திருமதி ஜானகிகணேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியினை பாவலர் பொன். கருப்பையா சீராகத் தொகுத்தளித்தார்.  

இரண்டு நாள் நிகழ்வுகளுக்கும் புதுக்கோட்டையின் பல்வேறு சமூக, கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தமிழ்ச் சான்றோர்களும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பித்தது பெருமைக்குரியதாக இருந்தது.

விழாவிற்கு வருகை தந்தோரில் பலர் இளங்கோவடிகள் மன்றத்தில் தங்களை வாழ்நாள் உறுப்பினராக, ஆண்டு உறுப்பினராக இணைத்துக் கொண்டது விழாக்குழுவினருக்குப் பெருமையாக அமைந்தது.



Wednesday, February 26, 2014

சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள்.

பிப்பிரவரி 28 தேசிய அறிவியல் நாளையொட்டி 26.02.2014 அன்று புதுக்கோட்டை சுதர்சன் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மனப்பான்மை வளர என்னும் தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையும் எளிய அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும் முறைகளும் பற்றிய செயல் விளக்கங்கள் அளித்தார்.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு ரெங்கராசன் அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்கள் செயல்வழிக் கல்வியினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக்
கூறினார்.

கருத்துரையாற்றிய பாவலர் பொன்.க. பாடத்திட்டத்திலும் கற்பித்தலிலும் புதிய உத்திகளை ஆசிரியர்கள் மேற்கொண்டால்  பள்ளிவயதில் இடைநிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

செயல்வழி கற்பித்தல் மாணவர்களைத் தொடர்ந்து கற்றலில் ஈடுபடச் செய்யும். ஒவ்வொரு  ஆசிரியரும் கற்பித்தல் துணைக் கருவிகளைப் பயன்படுத்துதலும்  மாணவர்களை  செய்து பார்க்க வாய்ப்பளிப்பதும்  அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.

அறிவியல் மனப்பான்மை வளர, ஆக்கப் புர்வமான செயல்கள் பெருகும். அறிவியலை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தினால் நாட்டின் சமூக, பொருளாதார நிலை மேம்படும் என்பதை வலியுறுத்திய அவர் செலவில்லாத, குறைந்த செலவிலான கற்பித்தல் துணைக்கருவிகளைத் தயாரிக்கும் முறைகளைக் கல்வியியல் மாணவர்களுக்கு செயல்விளக்கமாகச் செய்து காட்டினார்.

ஏறத்தாழ மூன்றுமணிநேரம் நடந்த இக்கருத்தரங்கில்  பேராசிரியர்களும் கல்வியியல் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுத் தாங்களாக முன்வந்து சில ஆய்வுகளைச் செய்தமை பாராட்டிற்குரியதாக இருந்தது..

Thursday, February 6, 2014

திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.

புதுக்கோட்டை அண்ணலார் பு.அ. சுப்பிரமணியனார் அவர்களால் தொடங்கப்பட்ட திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்த திரு.பா.இராமையா அவர்கள் 06.02.2014 அன்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்த செய்தி என் போன்ற தமிழ் உணர்வாளர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் பெரிதும் பாதித்து விட்டது.

 இந்தியன் வங்கி மேலாளர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .  புதுக்கோட்டை வடக்கு அரச வீதியில் தனது வசிப்பிட உப்பரிகையில் “பாலா தமிழரங்கு“ என ஒரு அரங்கினை அமைத்து, கடந்த 1999லிருந்து திருக்குறள் கழகத்தின் தலைவராக இருந்து  திங்கள் கூட்டங்களை தொடர்ந்து நடத்தித்  தமிழ்ச்சான்றோர்களை அழைத்து கருத்துரையாற்றச் செய்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியவர்.

அதே அரங்கில் மூத்த குடிமக்கள் அமைப்பினையும் நிறுவி, தமிழிசைச் சங்கத்தினையும் இயக்கி வந்தவர்.

அவ்வரங்கு முழுமையும் தமிழ் வளர்ச்சிக்கு உழைத்த  சான்றோர்களின் ஒளிப்படங்களைப் பரப்பி மிளிரச் செய்தவர்.

கடந்த 2010 திசம்பர்த் திங்களில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தோடு திருக்குறள் கழகத்தையும் இணைத்து பத்து நாள்கள் “சங்க இலக்கியப் பயிலரங்கத்” தினை கலை இலக்கியச் சுவையோடு நடத்தியவர்.

அன்னாரின் அருமுயற்சியால் புதுக்கோட்டை சின்னப்பா புங்கா அருகே உருவாகி  உயர்ந்து நிற்கும் “ திருவள்ளுவர் சிலை “ அவரைக் காலமெல்லாம் நினைக்கத் தூண்டும் ..

ஆண்டுதோறும் திருக்குறள் கழக ஆண்டு விழாவினை கலை இலக்கிய நிகழ்வுகளோடு நடத்தி சிறந்த தமிழறிஞர்களுக்குக் “ குறள்நெறிச் செம்மல்“ விருதுகளை வழங்கி  வந்த அவர் கடந்த  23.11.2013 ல் திருக்குறள் கழகத்தின்        59 ஆம்  ஆண்டுவிழாவினை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை வைத்து, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பொ.திராவிடமணி அவர்களுக்கு “அண்ணலார்-சி.இலக்குவனார் குறள்நெறிச் செம்மல் விருதினை“ வழங்கிச் சிறப்பித்தார்.

திருக்குறளின் பால் தீவிர ஆர்வமுடைய இவர் “ திருக்குறள் ஆங்கில உரை விளக்கம்“ மற்றும் “ அறமும் புறமும்” ஆகிய இரு நூல்களைப் படைத்து அவற்றை சென்னை ஊடகவியலார் திரு.க.அய்யநாதன் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

 தமிழியச் சிந்தனையும் பகுத்தறிவுச் சீர்மையும் கொண்டு  தன் வாழ்நாள் முழுவதும் தமிழின மேம்பாட்டிற்காக உழைத்த அன்னாரது மறைவு புதுக்கோட்டை இலக்கிய வட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

Saturday, February 1, 2014

நாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.

01.02.2014 அன்று புதுக்கோட்டை அழகம்மாள் புரத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு “முதலுதவி பற்றிய விழிப்புணர்வு” கருத்துரையினைச் செயல் விளக்கத்தோடு முகமையர்க்கு நடத்தினார்.


இயற்கைச் சீற்றங்கள், பேரிடர், வருமுன்னர் காத்தல், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டியன, விபத்து, பேரிடர்களில் பாதிக்கப் பட்டோர்க்குச் செய்ய வேண்டிய முதலுதவி ஆகியன பற்றி நடப்பியல் சான்றுகளுடன் விளக்கமளிக்கப் பட்டது.

மூர்ச்சையடைந்தவரை  இயல்பு நிலைக்குக் கொணர்தல், சி.பி.ஆர் என்னும் மார்பழுத்த சிகிச்சை , செயற்கைச் சுவாசமளித்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழிமுறைகள்,  எலும்பு முறிவுகளின் வகைகளும் அவற்றிற்கான கட்டுகளும், முதலுதவியில் பயன்படும் முடிச்சுகள், தீக்காயம் பட்டோர்க்கான முதலுதவி, நீரில் மூழ்கியவரை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் முறைகள், நச்சுக்கடிகள், மின்விபத்துகளுக்கான முதலுதவி முதலானவை செயல் விளக்கங்களோடு மாணவியர்க்கு பயிற்றுவிக்கப் பட்டது.

கதை, பாடல், நகைச்சுவையோடான இந்நிகழ்வில் முகமையர் சிறிதும் சோர்வின்றி ஈடுபாட்டுடன் பங்கேற்றமை சிறப்பாக இருந்தது.