Sunday, March 25, 2018

வீட்டுக்கொரு கழிப்பறை

வீட்டுக்கொரு கழிப்பறை இருக்க வேண்டியதன் அவசியத் தையும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்புகளையும் ஊர்ப்புற மக்களிடம்   ஊரக வளர்ச்சி முகமை மூலம் பரப்புரை செய்ய  உருவாக்கப்பட்ட விழிப்புணர்வுப் பாடல்.

இசைப்பாடல்   - பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை


வீட்டுக்கொரு கழிப்பறைதான்
                  ஏ அய்யா அம்மாமாரே
வேணுமுங்க அவசியமா
                  கட்டிடுவோம் வாங்க நீங்க
திறந்தவெளிப் பொட்டலத்தான்
                தேடிப்போயி மலம் கழிச்சா
 தீராத தொற்றுநோயும்
                தேடிவரும் நம்மலைத்தான்  --- வீட்டுக்கொரு

வாய்க்குள்ளே போறதெல்லாம்
                 ஏ அய்யா அம்மாமாரே
வயித்துக்குள்ளே தேங்கிடாமே
                 வெளியேவந்து ஆகவேணும்
காலைமாலை ரெண்டுவேளை
                 கழிவைவெளி யேற்றவேணும்
கலகலன்னு ஒடம்பிருக்கும்
                கண்டபிணி ஓடிவிடும்              - -- வீட்டுக்கொரு

பொழுதெல்லாம் அடக்கிவச்சு
                ஏ அக்கா தங்கைமாரே
பொழுதுபட்டும் விடியுமுன்னும்
               புதரைத்தேடிப் போறீகளே
தேக்கிவைக்கும் மலஜலத்தால்
               தீங்குரொம்ப வெளையும்தானே
தீரும்ஒங்க துயரமெல்லாம்
              கழிப்பறையைக் கட்டுனாலே   --- வீட்டுக்கொரு

கூரைவீடோ ஓட்டுவீடோ
              ஏ அய்யா அம்மாமாரே
குடியிருப்பின் வெளியேகொஞ்சம்
               எடமிருந்தாப் போதுந்தானே
பஞ்சாயத்து ஆபீசுக்கு
              கழிப்பறைன்னு கேட்டுப்போனா
பன்னெண்டாயிர ஊக்கநிதியில்
              கழிப்பறையும் வருமேதானா      --- வீட்டுக்கொரு

அஞ்சுக்கு மூனடியில்
              ஏ அய்யா அம்மாமாரே
அழகாஒரு கழிப்பறையை
             அமைச்சுவச்சு நீயும்பாரு
உருளைவடிவ உறைகளாலே
              உலர்கழிவுத் தொட்டிபோதும்
ஒருதுளியும் நாத்தமின்றி
               உரமாஅந்தக் கழிவும்மாறும்       --- வீட்டுக்கொரு

குளக்கரையில் மலம்கழிச்சா
              ஏ அண்ணந் தம்பிமாரே
கொசு கிருமி உருவாகி
             கொல்லைநோயைப் பரப்பிடுமே
குடிநீரும் காத்தும்கெட்டு
             கணக்கில்லாம தொல்லைதரும்
கவலைநீங்கி சுகமாவாழக்
             கழிப்பறைதான் அடித்தளமே      --- வீட்டுக்கொரு

சுத்தியுள்ள எடத்தையெல்லாம்
             ஏ அய்யா அம்மாமாரே
சுத்தமாக வச்சிக்குவோம்
            சுகவாழ்வு தானேவரும்
தூய்மைபாரத் திட்டத்தாலே
             திறந்தவெளியில் மலம்கழிக்கா
மாவட்டமா புதுக்கோட்டையை
            மாத்திடுவோம் வாங்கநீங்க          -- வீட்டுக்கொரு

தன்னனன்ன தானே னன்னே
தானானே தானே னன்னா
தனனானே தானே னன்னன்னா
ஏஅம்மாமாரே தானானே 
தானே தன்னன்னா

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விழிப்புணர்வுப் பாடல் ஐயா

மணிச்சுடர் said...

கருத்தளித்தமைக்கு நன்றி அய்யா

Post a Comment