நெஞ்சிருக்கும் வரை......
தாயில்லாமல் நானில்லை...
அன்னை ஓர் ஆலயம் ...
அன்னையைப் போல்ஒரு தெய்வமில்லை...
என்றெல்லாம் காலம் காலமாகப் பல்வேறு கவிஞர்கள்
தாயின் பெருமையைப் போற்றிப் பாடி வந்துள்ளனர்.
எனது நெஞ்சிருக்கும் வரை நீங்காது நினைவில் வாழும் என் தாயின் 12 ஆவது நினைவு நாளில் என்னுள் எழுந்த எண்ண வரிகள் இதோ...
கருவாய் நான் உருவான முதலே
கருத்தாக எனைக் காத்த தாயே
இணையாக உனக் கென்றும் நீயே
இன்னமுது ஊற்றாய் இருந் தாயே
உதிரத்தை உருக்கிப் பாலூட்டி வளர்த்தாய்
உறங்கிட எனக்குத் தாலாட்டு இசைத்தாய்
உனக்குற்ற சுகமெல்லாம் எனக்குள்நீ புதைத்தாய்
உனக்கேதும் கைம்மாறு வருமென்றா நினைத்தாய்?
அம்மாஎனும் சொல்லால் அதரத்தை அசைத்தாய்
அப்பாஎனும் உறவை அறிமுகம் அளித்தாய்
அறிவினை ஊட்டும்நல் ஆசானாய்த் திகழ்ந்தாய்
அல்லலெனை நெருங்கிடாத அணையாக இருந்தாய்
நன்னெறியில் நான்ஒழுக நாளும்நீ உழைத்தாய்
நலங்கெட்டு நலிந்தாலும் மடிதந்து மகிழ்ந்தாய்
நானிலத்தும் நான்தேடும் தெய்வமாக இருந்தாய்
நாளுமுனை மறந்திடாது நனிநெஞ்சில் நிறைந்தாய்
-- பாவலர் பொன்.க.,
3 comments:
அருமை... அருமை ஐயா...
நன்றி வலைச் சித்தரே.
தங்களின் தாய் போற்றுதலுக்கு உரியவர் ஐயா
Post a Comment