Tuesday, December 9, 2014

காலநிலை மாற்றம் எதனாலே?

             22ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் இரண்டாம் நாள் மாலை , மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையி்ல் பொது மேடையில் “காலநிலை மாற்றம் எதனாலே?” என்னும் கருத்தமைந்த கீழ்வரும் பாடலை அன்றே இயற்றி அன்றே இசையமைத்துப் பாடினேன்.
மேடையிலிருந்த சான்றோரும்  குழந்தை விஞ்ஞானிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் தமிழக 32 மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்திருந்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என 2100 பேர்களும் அரங்கதிர கையொலி எழுப்பிப் பாராட்டிய பாடல். என்னுடைய 351 ஆவது பாடல் இது.
முன்னெடுப்பு 
ஆடியில காத்தடிச்சு ஆவணியில் மழைபெய்ஞ்சு
ஆறுகுளம் நிரம்பிவய அமோகமா வௌஞ்சதப்பா,
மாசம்தையில் பொங்கவச்சு மக்கநல்லா வாழ்ந்தகாலம்
 மறுபடியும் வராதான்னு மனசுரொம்ப ஏங்குதப்பா

எடுப்பு
காலநிலை மாறிப் போச்சுங்க - அதன் 
காரணமே  நாம தானேங்க
காற்றைநீரைக் கெடுத்துப் புட்டோங்க- அதைக் 
காப்பதுதான் நமது வேலைங்க
காக்கணும் காக்கணும் இயற்கை வளத்தைக் காக்கணும்
போக்கணும் போக்கணும் செயற்கைத் தனத்தைப் போக்கணும் - காலநிலை

தொடுப்பு
காடுகரை அழிச்சு எங்கும் கட்டட மாக்கிட்டோம்
கம்மாஏரிக் குளத்தைத் தூத்துக் குடியும் ஏறிட்டோம்
கடல்நீரும் ஆவியாகாமக் கழிவால் நெரப்பிட்டோம் - இப்போ
கழுதைக்குக் கல்யாணம் பண்ணி மழைக்கு வேண்டுறோம்
சுருங்கிச் சுருங்கி வான்மழையின் அளவும் சுருங்குது
எறங்கி எறங்கி நிலத்தடிநீர் மட்டம் எறங்குது                        --காலநிலை

நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வெடிகள் வெடிக்குறோம்-பெரும் 
நஞ்சைக் கக்கும் அணுக்கதிரை வானில் நெரப்புறோம்
நச்சுக்காத்தால் விண்வெளியைச் சூடு ஏத்துறோம் - அப்பறம்
நல்லாமழை பெய்யலேன்னு ஒதட்டைப் பிதுக்குறோம்
உருகி உருகிப் பனிமலைங்க ஒயரம் கொறையுது
உயரும் கடல்நீர் மட்டம் இந்த நெலத்தை விழுங்குது       -- காலநிலை

வேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்
விண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்
காருவண்டி ஆலைக்கழிவால் காத்தைக் கெடுக்குறோம் - அட
காலங்கெட்டுப் போச்சுதுன்னு கெடந்து பொலம்புறோம்
காலம்மாறிக் காத்து மழை சுழன்று அடிக்குது
கணக்கில்லாம உயிர்கள் மண்ணில் பொதைஞ்சு அழியுது -- காலநிலை

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//வேதிஉரம் புச்சி மருந்தில் வௌச்சல் பெருக்குறோம் - அதில்
விண்ணும் மண்ணும் பாழாப்போகும் நெலைய மறக்குறோம்//
உண்மைதான் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

நேரில் ஒருமுறை ரசிக்க வேண்டும்... விரைவில் வருகிறேன் ஐயா...

Post a Comment