Monday, January 27, 2014

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை.

கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதுக்கோட்டை அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையம் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியுடன் இணைந்து கடந்த இருவாரங்களாகப் புதுக்கோட்டையின் பல சிற்றூர்களில் முகாம்களை நடத்திவருகிறது.
அவ்வகையில் இன்று (27.01.2014) ஆவுடையார் கோயி்ல் ஒன்றியம் துஞ்சனூர் கிராமத்தில் விழிப்புணர்வு பரப்புரை முகாம் நடைபெற்றது.
கரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவி திருமதி இராஜேசுவரி தலைமையேற்றார்.
ஆவுடையார் கோயில் அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் திருமதி ஜெயந்தி வரவேற்புரையாற்றினார்.
செஸ்டாட்ஸ் மேலாளர் திரு மா.வீரமுத்து  வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவர் பாவலர் பொன்.கருப்பையா கருத்துரையாற்றினார்.
அவர் தனது உரையில் கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, கிராமப்புற மக்கள் வங்கிகளில் கணக்குத் தொடங்கவேண்டியதன் அவசியம், சிக்கன வாழ்க்கையும் சேமிப்பும், வங்கிகளில் வரவு-செலவு செய்தல், வங்கித் தொடர்பாளர்களை அணுகுதலும் அவரது சேவையினை பயன்படுத்தலும், சிறுதொழில், வேளாண்தொழில், மேற்படிப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றிற்கு வங்கிகள் மூலம் கடன் பெறும் வழிமுறைகள், வங்கிக்கடன்களைத் திரும்பக் கட்டுதலும் தொழில் மேம்பாட்டிற்கு புதியகடன்கள் பெறுதலும் முதலான கருத்துகளைக் கதை, பாடல் மூலம் நகைச்சுவையாக மக்களுக்கு விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து கரூர் கனரா வங்கி மேலாளர் திரு கார்த்திக் தனது கிளை வங்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள், மக்கள் சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.

சிறப்புரையாற்றிய  நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு சோமசுந்தரம்  கிராமத்து மகளிர் கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வங்கிச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்

நிறைவாக அறிவியல் இயக்க ஒன்றியச் செயலாளர் திரு ஆ.செல்வராசு நன்றி கூறினார்.
இம்முகாமில் வங்கிக் கடன் மூலம் எத்தகைய தொழில்களைத் தொடங்கலாம் என்பது பற்றி பாவலர் பொன்.க எழுதி இசையமைத்துப் பாடிய பாடல் இது.

சிறுதொழில் குறுதொழில் சுயமாகத் தொடங்கிட
                                                         நாடுங்கள் வங்கிகளை
செய்கின்ற தொழிலினில் வருமானம் பெருக்கிட
                                                      செயல்திட்டம் போடுங்களே
பதினெட்டு வயசுக்கு மேலுள்ள யாவரும்
                                                        பயன்பெறும் வகையினிலே
கடன்தந்து உதவிட வங்கிகள் இருக்குது 
                                                        உடன்அதை நாடுங்களே

சுயதொழில் தொடங்கிடுங்கள் - அதன்வழி
சோர்வின்றி உயர்ந்திடுங்கள்                                           -- சிறுதொழில்


கைத்தறி நெசவையும் கம்மியர் தொழிலையும்                                                                                     கடன்பெற்றுத் தொடங்கிடலாம்
தையல்கடை வைக்கத் தச்சுத் தொழில்செய்யத்                                                                                                            தடையின்றிக் கடன்பெறலாம்
முறுக்குத் தொழில்செஞ்சும் முன்னேற வழியுண்டு  
                                                   முனைந்துமே இறங்கிடுங்கள்
மூங்கில்பாய் முடைஞ்சு முறுக்கிக் கயிறுசெய்ய
                                                        முறையாகக் கடன்பெற்லாம்
                                                                                                      -- சிறுதொழில்

அனுபவம் இருக்கின்றத் தொழிலினைத் தொடங்கிட
                                                        ஆர்வமாய் முன்வருக
அதற்கான அறிவினைப் பெறவுமே அடிப்படைப்        
                                                         பயிற்சியை மேற்கொள்ளுக
இருக்கின்ற பகுதியில் சுயதொழில்மேற்கொள்ள 
                                                         இடம்பொருள் காட்டிடுக
ஈட்டிடும் வருவாயில் கடன்கட்டிச் சேமித்து
                                                         ஏற்றமாய் வாழ்ந்திடுக.
                                                                                                     -- சிறுதொழில்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள பாடல்கள்... பாராட்டுக்கள் ஐயா...

சேவைகள் தொடரவும் வாழ்த்துக்கள் ஐயா...

Post a Comment