Sunday, March 9, 2014

தமிழகத் தமிழாசிரியர் கழக முப்பெரும் விழாவில்...

                                தி.பி.2045 கும்பம் 25 ( 09.03.2014) ஞாயிறன்று புதுக்கோட்டை எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா அதன் மாவ்ட்டத் தலைவர் திருமிகு கு.ம.திருப்பதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

                பாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து ,கழக மாவட்டச் செயலாளர் திருமிகு சி.குருநாதசுந்தரம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

               கழகத்தின் மேனாள் மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையேற்றனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தொடக்க உரையாற்றினார் அவர் தனது உரையில் தமிழ்மொழியின் சிறப்புகளை  விளக்கி, தாய்மொழியாம் தமிழ்மொழிவழிச் சிந்திப்பவரே வாழ்க்கையின் மேன்மைகளை அடைவர் என்பதை வலியுறுத்தினார்.

 தொடக்க உரையினைத் தொடர்ந்து கழகத் தமிழ்த்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற  660 மாணவர்களுக்குக் கேடயங்களும், பாவேந்தர், பாரதியார் நூல்களும் பரிசுகளாக வழங்கப்பெற்றன.

             பரிசுகளை  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் வழங்கினார். அவர் தனது பாராட்டுரையி்ல்  அதிகம் படிப்பறி வில்லாத பெற்றோரின் தமிழ்வழிப் பயிலும் குழந்தைகளே தமிழில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளமையினைத் தன்னையேச் சான்றுகாட்டி எந்த மொழியினைக்  கற்றாலும் தமிழ்மொழியில் பயிலுவோரே வாழ்க்கைப் பாடத்தை முழுமையாக அறிந்து கொள்பவர்களாக உள்ளனர் என்பதை மாணவர் மனங்கொள்ள எடுத்துரைத்தார்.

        அவரைத் தொடர்ந்து சுப.காந்திநாதன், முத்தமிழ்ப் பாசறை திருமிகு நெ.இரா.சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

       அதனையடுத்து  தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் வேர்ச்சொல் ஆய்வறிஞர் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்னும் தலைப்பில்  விழாப் பேருரையாற்றினார். அனைத்து மொழிகளும் தமிழ்மொழியின் வேர்ச் சொல்லில் இருந்து பகிர்ந்து கொண்ட சொற்களைச் சான்றுகாட்டி தமிழ்வழிக் கற்றலே  எதிர்கால இளைய தலைமுறையினை உலக அரங்கில் உயர்த்தும் என்பதைப் பதிவு செய்தார்.

            அவரைத் தொடர்ந்து  தோழமைச் சங்களின் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திருமிகு ரெ.ரெங்கராசு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அமைப்புச் செயலாளர் திருமிகு ஆ.மணிகண்டன் , பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் திருமிகு மு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

      விழாவின் முன் நிகழ்வாக, பாவலர் பொன்.கருப்பையா, செல்வி சுபாசினி ஆகியோரின்  தமிழிசைப் பாடல்கள்  இசைநிகழ்ச்சி நடைபெற்றது

            உணவு இடைவேளைக்குப் பின்னர் பள்ளி அளவில் தமிழ்ப் பாடத்தில் உயர்நிலை எய்திய மாணவர்களுக்கு வலுஊட்டல் பயிற்சியினை முனைவர் சு.துரைக்குமரன், முனைவர் பெரி.சே.இளங்கோவன் ஆகியோர் அளித்தனர்.

           அடுத்ததாக பணிஓய்வு பெற்ற கழகச் செம்மல்கள், அரங்கில் சிறப்பிக்கப் பட்டனர்.அவர்களை மாநில மதிப்பியல் தலைவர் புலவர் சந்தானமூர்த்தி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

         தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற கழகச் செம்மல்களுக்குப் பாராட்டு செய்யப் பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு இளங்கோவடிவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

          முப்பெரும் விழாவினை அரங்கு நிறைந்த ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும்  சுவைத்து மகிழ்ந்தனர். 

          விழா நிகழ்வினை மாநில செயற்குழு உறுப்பினர் திரு மகா.சுந்தர் அழகுற தொகுத்து வழங்கினார்.

        கழக மாவட்டப் பொருளாளர் திருமிகு சந்தான ஆரோக்கியநாதன் அவர்கள் நன்றியுரையாற்றினார். 

         விழா ஏற்பாடுகளை கழக மாவட்ட, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment