Friday, December 16, 2016

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க..

தமிழன்னை சிந்தும் கண்ணீரைத் துடைக்க...

“தொன்று நிகழ்ந்த தனைத்து முணரந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் 
என்று பிறந்தவள்  என்றுண ராத 
இயல்பின ளாம் எங்கள் தாய்“ --

என்ற பாரதியின் வாக்கிற்கேற்பவும்  

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்“ என்ற பாவேந்தர் 

மொழிவிற்கேற்பவும், உலகின் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் மூத்த,தொன்மை வாய்ந்த மொழியாய்த் தோன்றிய மொழி 
நம் தமிழ்மொழி.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழி என பிரித்தானியா கலைக் களஞ்சியம் சொல்லும் பெருமை கொண்ட மொழி தமிழ்மொழி.
இத்தகு பெருமையும் தனித்தன்மையும் மிக்க தமிழ்மொழியில் காலப்போக்கில் பிறமொழிகள் சிறிது சிறிதாகக் கெடுவாய்ப்பாகக் கலக்கத் தொடங்கின.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமற்கிருதம் போன்ற பிற மொழிச்சொற்கள் சில தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நம் தமிழ் நூல்களில் வந்து கலந்ததாக வரலாற்றாய்வாளர் கூறுகின்றனர்.         ( திருக்குறளில் வெறும் 17 சொற்களே பிறமொழிச் சொற்கள் என்பார் பாவாணர்)
தமி்ழைப் பிற உலக மொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்ந்த கால்டுவெல்                        “ தமிழுக்கு அயன்மொழியின் துணை தேவையில்லை. 
பிறமொழிச் சொற்களை விலக்கினாலே தமிழுக்குப் பெருமை மிகும்” என்று குறிப்பிட்டார்.


தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக்கூறப்பட்ட களப்பிரர் காலத்தில் தான் பல  தமிழ் நூல்கள் பிறமொழிக் கலப்போடு புடைத்தெழுந்தன. 
காலச்சூழலில் ஆண்ட மன்னர்களின் பேதைமையாலும் ஆரிய ஆதிக்கம் மிகுந்தது.

அழிவின் விளிம்பில் இருந்த தமிழ்,  அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்  காரைக்கால் அம்மையார் போன்றோரின் திருமுறைகளால் ஓரளவு காப்பாற்றப்பட்டது என்றே கூறலாம்.  ஆழ்வார்களின் இறைஇசைப் பாடல்களும்கூட சமற்கிருதத்தைப் புறந்தள்ளியே இருந்ததைக் காணலாம். 

கம்பரும், ஒட்டக்கூத்தரும்  இயன்றவரை பிறமொழிச் சொற்களைத் தவிர்ததே தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். என்றாலும் பல புலவர்கள் பிறமொழிக் கலப்போடே படைப்புகளைத் தந்துள்ளமை வேதனைக்குரியதே.

பல்லவர் காலத்திலும் பின்பெழுந்த  மூவேந்தர் காலத்திலும்  வெறிகொண்ட சமற்கிருத தாக்கம் தமிழில் மிக்கிருந்தது வெள்ளிடைமலை.

 புலவர்களின் புனைவுகள், மன்னர்களின் கீர்த்திக் கல்வெட்டுகள் பிறமொழிக் கலப்போடே காணப்படுகின்றன. 
பிற்காலத்தில் தெலுங்கு கன்னடம், சமற்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடை தமிழின் தனித் தன்மைக்குப் பெரும் முட்டுக்கட்டையாய் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

அயல்நாட்டார் வருகை  காரணத்தால், இனிமைத் தமிழ்மொழி இனந்தெரியாப் பிறமொழிகளின் கலப்பிற்குட்பட்டுச் சிதையத் தொடங்கியது.

குறிப்பாக ஆங்கில, பாரசீக,போர்ச்சுகீசிய மொழிகள் தமிழில் இரண்டறக் கலந்து பேதமின்றி பேச்சு, எழுத்து வழக்கில் நிலைபெறத் தொடங்கிற்று.

பிறமொழிக் கலப்பால் தமிழ்மொழி தன் தனித்தன்மையை இழந்து நாளடைவில் கலப்பு மொழியாகி அழிந்து விடும் என்கிற மொழிக்காப்பு உணர்வில்தான்  மறைமலையடிகள்,  பரிதிமாற்கலைஞர்,தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து , தமிழினத்தை ஓர் அறிவுக் குமுகமாக மாற்றி நிலை நிறுத்தும் அரிய பணியினைத் தொடர்ந்தனர்.

கால்டுவெல் , சி.யு.போப், வீரமாமுனிவர் போன்ற் அயலகச் சான்றோரும் தனித் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளனர்.
தனித்தமிழின் வளர்ச்சிக்கு  தமிழ்த் தென்றல் திரு.வி.க. கி.ஆ.பெ.விசுவநாதன் போன்ற பலரின் இதழியல் தொண்டும் மறக்கவியலாதவை. 

கடந்து நூற்றாண்டின் இணையற்ற பாவலர்கள் பாரதியும் பாரதிதாசனும் தங்களின் படைப்புகளின்வழி தனித்தமிழின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர்.

“தாய்ப்பாலில் நஞ்செனவே
தமிழில்வட மொழி சேர்த்தார்
தவிர்த்தல் வேண்டும்.
தமிழ்ப் புலவர் தனித் தமிழில்
நாடகங்கள் படக்கதைகள் 
எழுத வேண்டும்“  எனத் தனது “தமிழியக்க“ நூலில் பாவேந்தர்  பகர்ந்துள்ளது நோக்கத் தக்கது.
தமிழ் வரலாற்றில் முதன்முறையாக வடசொல் ஆட்சிகளைத் தவிர்க்கும உணர்வோடு தனித்தமிழிலேயே எழுதும் முயற்சியில் இலக்கியங்களைப் படைத்த பெரும்பாவலர் பாரதிதாசன் என்று செக்.மொழியறிஞர் கமில்சுவலபில் கூறியுள்ளார் .
ஆனால் இன்று  தமிங்கிலம் தலைதூக்கிய நிலை. சமற்கிருதமும் இந்தியும் தலைமொழிகளாய்ப் புகும் நிலை. 

இப்படிக் காலங்காலமாய்  தமிழில் பிறமொழிக் கலப்பை நோக்குங்கால்        “ மெல்லத் தமிழினி சாகும் என்றந்த பேதை“ சொன்னதுபோல் எங்கே தமிழ்மொழி அழிந்து போகுமோ என்ற கவலையால் தமிழ்த்தாய் கண்ணீர் வடிப்பது  வேதனையளிப்பதாகவே உள்ளது.

இந்நிலை இப்படியே தொடர விடப்போகிறோமா? 
ஒரு மொழி அழியும்போது அம்மொழி பேசும் இனமுமல்லவா அழிந்துபடும்.
“இந்நிலைமாற வேண்டுமெனில்... 
பேச்சில் எழுத்தில்  இதழ்களில் , சின்னத்திரை, வண்ணத்திரை  காட்சி  ஊடகங்களில்,சமூக மின்னணு ஊடகங்களில்., பிறமொழிக் கலப்பில்லாத படைப்புகள் வரத் ்துறைதோரும் பரப்புரை மேற்கொள்வோம்”. 
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ,
 “தனித்தமிழ் இயக்கம் தொடர்வோம்” 

பிறமொழிப் பெயர்கள் தவிர்த்து 
“தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவோம்.”

 “தாய்மொழிவழி நம் குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்வோம்.” தாய்மொழிவழிச் சிந்தனையே பிறமொழி கற்றலுக்கு உதவும் .

“பிறமொழி நூல்களைத் தனித்தமிழில் மொழிபெயர்ப்போம்.”
தனித்தமிழில் பேசுவோம். 
தனித்தமிழ்ப்  படைப்புகளை உருவாக்குவோம். 
 தமிழ்த்தாயின் கண்ணீரைத் துடைப்போம். 
தமிழினம் காப்போம். 




2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழின் பெருமை உணர்வோம்
தமிழினம் காப்போம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Post a Comment