Tuesday, May 30, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-25

                  பைத்தியமாய் ஒரு வைத்தியம் 

              “நாட்டாமை தீர்ப்பை மாத்து” என்ற திரை வசனம் போல, செம்பறவை நாடகத்தைப் பார்த்த ஒரு பெண்ணிய வாதியிடமிருந்து வந்த  கருத்து மடலில்

 “ கெடுக்கப்பட்டவள் இறுதியில் சாகத்தான் வேண்டுமா?”

என்ற கேள்வி என்னை உலுக்கத்தான் செய்தது.. என்றாலும் ஒரு வன்முறையாளனைப் பழிவாங்க அவனது மனைவியை இரு முரடர்களை வைத்து வன்புணர்ச்சிக்குள்ளாக்கி ஒரு பெண்ணே கொன்றதும், இன்னொருவனைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதுமான குற்ற நடவடிக்கைகளை அவள் சந்திக்க வேண்டியதைத் தவிர்க்கவும்,  புகழ்பெற்ற மருத்துவரின் மகளாக சமுதாயத்தில் மதிப்பிலிருக்கும் ஒரு பெண்மருத்துவரின் தாய் ஒரு விலைமாது என்ற அவப்பெயரை  தன்மகள் அறியாமலிருக்கவும்,  அந்தச் செம்பறவைத் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதாக அந்நாடகத்தின் முடிவை அமைத்திருந்தேன்.  

               அந்தக் குறையினை 1988ல் அரங்கேற்றிய    
   “ கரையேறிய அலைகள்” என்ற நாடகத்தின் மூலம் போக்க முயற்சித்திருந்தேன்.




                 மணக்கொடை என்னும் வரதட்சணை மறுத்தும், சீர் பொருள்கள் வெறுத்தும், ஆடம்பரமில்லாத  திருமணத்தை  விரும்பும் ஒரு வரனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார் ஒரு  மதுரை செல்வந்தர்.

                மருமகனை நம்பி  திருவனந்தபுரத்திலிருக்கும் தனது தொழிற்சாலைக்கு இயந்திரங்கள் வாங்க ஒரு பெருந்தொகையைக் கொடுத்து அனுப்புகிறார் அந்த செல்வந்தர்..

            இருசக்கர உந்தூர்தியில்  மலைப்பாதை வழியே  தனது நண்பனுடன்    சென்ற அவன், ஒரு விபத்தில் மலை உச்சியிலிருந்து வண்டியோடு விழுந்து எரிந்து இறந்து போகிறான்.  மருமகன் இறந்த செய்தி கேட்ட செல்வந்தர் மாரடைப்பால் இறக்கிறார்.

             கணவனையும்  தந்தையையும் இழந்த துக்கம் தாழாத மல்லிகா ( செல்வந்தரின் மகள் )  வைகை  நீர்த்தேக்கத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள்.

             சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அருளாந்து, அவளைக் காப்பாற்றி  மனவளர்ச்சி குன்றிய தன் பருவ வயது  மகள் சித்ராவுக்குத் துணையாக இருக்கட்டும் என்று மல்லிகாவைத் தன்னுடன் சென்னை  திருவல்லிக்கேணிக்கு அழைத்துச் செல்கிறார்.

                அங்கு தனது தொழிற்சாலையின் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை மல்லிகாவுக்குக் கொடுக்கிறார்.

            ஆறுமாதங்கள் உருண்டோட,  அந்தத் தொழிலதிபரின்  மன வளர்ச்சி குன்றிய மகள்   சித்ராவுக்கு வாழ்வளிக்க விரும்புவதாக ஒரு  இரங்கூன் மருத்துவர் வருகிறார்.

               அந்த மருத்துவ மணமகனைப் பார்த்த மல்லிகா அதிர்ச்சியடைகிறாள்.  இறந்து போனதாக தான்  நம்பிக்கொண்டிருந்த தனது கணவன் விநோத் , இரங்கூன் டாக்டர் கிஷோராக அங்கே  வந்திருப்பதை அறிகிறாள்.

                  தன்னை வளர்ப்பு மகளாகக் கருதும்  தொழிலதிபர் அருளாந்திடம்   மாப்பிள்ளையாக    வந்திருப்பது தனது கணவன்தான் எனக் கூறுகிறாள்.

                 விபத்தில் இறந்ததாக அடையாளப் படுத்திவிட்டு, மெய்யப்பர்( மல்லிகாவின் தந்தை)  கொடுத்த பெருந்தொகையோடு பெங்களுரில் தலைமறைவாக இருந்து வரும் விநோத்,  மல்லிகாவை  அந்த வீட்டில் பார்த்து அதிர்ந்தாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல், மல்லிகாவைத்  தனக்கு   யாரென்றே தெரியாது என்று நடிக்கிறான்.    தான் இரங்கூனிலிருந்து வந்த டாக்டர் என்று போலிச் சான்றிதழ் காட்டி  தனது கையாள்களை வைத்து  தொழிலதிபரை  நம்ப வைக்கிறான்.

                 மல்லிகா அவனிடம் தங்கள்  பழைய  நிகழ்வுகளை நினைவு படுத்த, அவன் மல்லிகாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என ஒரு போலி மனநல மருத்துவரை வைத்து அருளாந்தை நம்ப வைக்கிறான்.

                காவல் நிலையத்தில் விநோத்தின் வஞ்சகச் செயல் பற்றிப் புகார் கொடுக்கச் செல்கிறாள்  மல்லிகா.  அவளிடம்  விநோத் - மல்லிகா  திருமணம் நடந்ததற்கான சான்றுகளை காவல்துறை அதிகாரி கேட்க, அழைப்பிதழோ, போட்டோவோ, திருமணப் பதிவோ திருமணம் நடந்ததை நிரூபிக்கும் சாட்சிகளோ  அவளிடம்   இல்லாமையால்  அவள் புகார் புறக்கணிக்கப் படுகிறது. 

             மனநல வைத்தியருடன் மல்லிகாவைத் தேடி   காவல் நிலையம் வந்த அருளாந்தும் அவளைப் பைத்தியம் எனக்கூறி   வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்




                  மல்லிகாவினால் தனது திட்டம் பாழாகிவிடும் என அஞ்சிய விநோத்,  இரண்டு நாள்களில் சித்ராவைத் திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் ஒரு பெரிய இதயநோய் மருத்துவமனை சித்ரா பெயரில்  கட்ட கால்கோள் நடத்தச் செல்ல வேண்டுமென்று   தொழிலதிபர் அருளாந்துக்கு  நெருக்கடி கொடுக்கிறான், மல்லிகா அந்தத்   திருமணம் நடைபெற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

               மனநலம் குன்றிய தனது மகளின் திருமணத்திற்கு மல்லிகா தடையாக இருப்பதை விரும்பாத அருளாந்து அவளை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்.

                விநோத்தின் விருப்பப்படியே  மருத்துவமனை கட்ட மூன்று கோடி ரூபாயை அவனிடம் கொடுத்து , தனது மகளையும் அவன் குறித்த நாளிலேயே அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் தொழிலதிபர் அருளாந்து. 

                வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா ஒரு போக்கிலியைச் சந்தித்து, சித்ராவை எப்படியாவது கடத்தி அந்தத் திருமணம் நடக்கவிடாமல் செய்ய வேண்டுகிறாள்.

               அதற்குள் சித்ராவை  கடத்தி அவளைக் கெடுத்து, அதன்மூலம் சித்ரா தன்னையேத் திருமணம் செய்து கொள்ளும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கிறான் விநோத்.

               கடத்தப்பட்ட சித்ராவை விநோத்திடமிருந்து காப்பாற்ற முயல்கிறாள் மல்லிகா. மதுவெறியில் மிருகமாய் மாறி சித்ராவைக் கெடுக்க முற்பட்ட விநோத்தை    உடைந்த  மது பாட்டிலால்  அவன் வயிற்றுப் பகுதியில் குத்த,  இரத்த வெள்ளத்தில் இறக்கிறான் விநோத்.

                 அங்கே வந்த போக்கிலி வேடத்திலிருந்த  சி.பி.ஐ அதிகாரி ஆனந்தன், விநோத் ஒரு தேடப்படும்  குற்றவாளி என்றும்
அவன் பம்பாய். கல்கத்தா, டெல்லி , நாக்புர் முதலான பெரு நகரங்களில் , செல்வந்தர் வீட்டுப் பெண்களை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து , அப்பெண்களின் பெற்றோரிடம் இதுபோல நிறுவனம் நடத்த வேண்டுமென்று  பெருந்தொகை யினைப் பெற்றுக் கொண்டு , திருமணம் நடந்த தடயங்களே இல்லாமல், அந்தப் பெண்களுடன்  தேனிலவு செல்வதாய் அவர்களைக் கொன்றுவிட்டு. அதை விபத்தாக்கி விட்டு தப்பிவிடுவதையும், தொழிலாய்க் கொண்டவன் என்றும் விவரிக்கிறான். 

              அவனது கூட்டாளி ஒருவனை  டெல்லியிலிருந்து பின் தொடர்ந்து  தான் சென்னை வந்ததாகவும்,    ஆதாரங்களோடு  அவனைக்     கைது செய்ய,  தான்   போக்கிலி வேடத்தில்  மல்லிகாவைச் சந்தித்ததாகவும். அதற்குள் மல்லிகா அவசரப்பட்டு அவனைக் கொன்று கொலைப்பழி யேற்கும் நிலைக்கு வந்ததையும் கூறி வருந்துகிறான்.

                “பெண்களைப் பைத்தியங்களாக்கி   சட்டத்தின் ஓட்டைகளின் வழியே  தப்பிக்கும்  சமூக விரோதிகளுக்கு,   பாதிக்கப்பட்ட  பெண்கள்தான்  சரியான  தண்டனை கொடுக்க முடியும்”  என்று கூறி கணவனானாலும் ஒரு கயவனைத் தண்டித்த மன நிறைவோடு, சிறை செல்கிறாள் பைத்தியக்கார பட்டம் சூட்டப்பட்ட மல்லிகா. 

                இந்த நாடகத்தை அரங்கேற்றும் போது எனக்கு ஒரு நெருக்கடி வந்தது. என்ன தெரியுமா?

                           --- அடுத்த தொடரில்

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நெருக்கடியா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இந்த நாடகத்திலும் நெருக்கடியா? அது என்ன?

Post a Comment