Tuesday, August 16, 2011

என்னத்த நா பாடுறது?

14.08.2011 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற த.மு.எ.கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில்  நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க  பாவலர் பொன்.க சுடச்சுட எழுதி, சுடச்சுட அரங்கேற்றிப் பாடிய இசைப் பாடல்.

என்னத்தநா பாடுறது? எதுக்குத் தாளம் போடுறது? நெஞ்சுக்குள்ளே நெனைப்புகள் வந்து முன்னுப் பின்னா மோதுறதே.                        --என்னத்த


சாதிமத பேதமின்றிச் சமநீதி காத்துவந்த
                 சத்தியவான்களைப் பாடுறதா?
சாதிக்கும் மாந்தரெல்லாம் சாதிக்குள் அடைககாக்கும்
               சண்டித்தனப் போக்குகளைப் பாடுறதா?
பண்பாடு மாறாம பாருயரப் பாடுபடும்
              பாட்டாளித் தோழரைப் பாடுறதா?
பசப்பு வேலைசெஞ்சு பதவிசுகம் தேடும்
              பகல்வேசக் காரங்களைப் பாடுறதா?                                        -- என்னத்த


மத்தவங்க துயர்போக்கத் தன்னலத்தைத் துறந்திட்ட
              தியாகத் தீபங்களைப் பாடுறதா?
சொத்துசுகம் சேருதுன்னு நித்தம்பழி பாவம்செய்யும்
             வக்கிர மனிதர்களைப் பாடுறதா?
கைம்மாறு நோக்காம கடமையைச் செஞ்சுவரும்
              கண்ணியவான்களைப் பாடுறதா?
கடமையைச் செய்யக்கூட கைநீட்டி லஞ்சமவாங்கும்
            கசட்டு மனுசங்களைப் பாடுறதா?                                            --என்னத்த

பெண்ணின் பெருமைசேர்க்க பெரிதுமே உழைத்திட்ட
             பேராண்மைச் சான்றோரைப் பாடுறதா?
பொன்பொருளைப் பெற்றும்பெண்ணை வன்கொடுமை செய்யுமந்தப்         
            பேராசைப் பித்தர்களைப் பாடுறதா?
பெத்தபிள்ளை வாழத் தங்கள் சொத்தோடு சுகமிழந்த
            உத்தமப் பெற்றோர்களைப் பாடுறதா?
பெத்தவங்க சுமையின்னு தத்தளிக்கத் தள்ளிவிட்ட
            புத்திகெட்டப் பிள்ளைகளைப் பாடுறதா?                                -- என்னத்த

தமிழின மொழிகாக்கத் தங்களையேத் தத்தம்செஞ்ச
            தன்மானச் சிங்கங்களைப் பாடுறதா?
தமிழினம் எரிகின்றத் தனலிலே குளிர்காயும்
           தரங்கெட்ட சொந்தங்களைப் பாடுறதா?
தரணிக்கே பண்பாட்டு ஊற்றுக்கண்ணாய் விளங்கிய
           தமிழ்மண்ணின் பெருமையைப் பாடுறதா?
தரங்கெட்டுப் பன்னாட்டு மோகத்துல சிக்கிநாளும்
           தடுமாறும் கீழ்மைகளைப் பாடுறதா?                                         --என்னத்த

No comments:

Post a Comment