Thursday, February 23, 2012

பேரிடர் மேலாண்மை- ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி

இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.
                20.02.2012 அன்று மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி் கலை அறிவியல் கல்லூரி மாணவியர்  அழகம்மாள் புரத்தில் நடத்திய நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமில், பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் ”இயற்கைப் பேரழிவில் மாணவியர் பங்கு ” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிச்  செயல் முறை விளக்கங்களும் செய்து காட்டினார்.
             முகாமின் திட்ட அலுவலர்  செல்வி தமிழ்வாணி அவர்கள் வரவேற்க, கல்லூரியின் முதல்வர் திருமதி ஜானகி சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
              பாவலர் பொன்.க அவர்கள் தனது உரையில் இயற்கைப் பேரிடர் என்றால் என்ன? பேரிடர்களுக்கான காரணிகள் யாவை? பேரிடர் வருமுன் காத்தல் எவ்வாறு? பேரிடர் காலத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன? பேரழிவு நிகழ்ந்த பின்னர் மாணவியர் ஆற்ற வேண்டிய பணிகள் யாவை? என்னும் வினாக்களுக்கான விளக்க உரையினை வழங்கினார்.
முதலுதவியின் நோக்கம், முதலுதவியாளரின் தகுதிகள், முதலுதவியில் பின்பற்ற வேண்டிய முதன்மைச் செயல்கள், மயக்கம், மாரடைப்பு, காயங்கள். எலும்பு முறிவு,  நச்சுக் கடிகள், அதிர்ச்சி முதலியவற்றுக்குச் செய்ய வேண்டிய முதலுதவிகள் பற்றி விளக்கினார். தொடர்ந்து காயங்களின் இரத்த ஒழுக்கை நிறுத்தும் முறைகள், எலும்பு முறிவுக்குப் போட வேண்டிய கட்டுகளின் வகைகள், தீக் காயங்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்டலும் முதலுதவி செய்தலும் பற்றிய செயல் முறை விளக்கங்களைச் செய்து காட்டினார்.             முதலுதவியில் பயன் படுத்தப் படும் தட்டை முடிச்சு, வளைய முடிச்சு. உயிர்காக்கும் முடிச்சு, நாற்காலி முடிச்சு முதலியவற்றைப் போடும் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.
                     மாணவியர் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டதும், அரும்பிய அய்யப்பாடுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றதும் சிறப்பாக இருந்தது.

No comments:

Post a Comment