Wednesday, July 24, 2013

இசைத்தமிழ் - பயிற்சி

                     தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், “தமிழ் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி“ புதுக்கோட்டை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24.07.2013 அன்று  நடைபெற்றது.

                   ஒன்பது, பத்து வகுப்புத் தமிழ்ப் பாடநூலில் உள்ள செய்யுள் பகுதிகளை இசையோடு எப்படிக் கற்பிப்பது என்பதை பாவலர் பொன்.கருப்பையா “இசைத்தமிழ்“ என்னும் தலைப்பில் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளித்தார்.

                  இசைத்தமிழின் வரலாறு, தொன்மை, தொல்காப்பியத்தில், சங்க இலக்கியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில், தேவாரத் திருமுறைகளில்  எவ்வாறெல்லாம் காணப்படுகின்றன என்பதையும். காலப்போக்கில் உயர்ந்தும் தாழ்ந்தும் போன இசைத் தமிழ், இடைக்காலத்தில் மேம்பட்டிருந்ததையும், தேவாரத் திருவாசகப் பனுவல்கள் துணைகொண்டு விளக்கினார்.

                பண்டைப் பண்கள், அவற்றிற்கான இராகங்கள், ஏழு சுரங்கள், 72 மேளகர்த்தாக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் தமிழிசை மக்கள் வாழ்க்கையில் எப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரையில் இணைந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினார்.

               தற்போதைய 9,10 தமிழ்ப் பாட நூல்களில்  உள்ள மனப்பாடப் பகுதிகளை, மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்றத் தக்க இசையில் பாடி, ஆசிரியர்களை இணைந்து பாடப் பயிற்சியளித்தார்.

             இரண்டு பிரிவுவேளைகளிலும் நடந்த இப்பயிற்சியினைச்  சோர்வின்றி ஆர்வமுடன் தமிழாசிரியர்கள் பின்பற்றியது பாராட்டிற்குரியதாக இருந்தது.

No comments:

Post a Comment