Wednesday, September 30, 2015

சுமையாகிப்போமோ சுகஊற்று?

சுமை  யென்று  நினைக்காதே முதியவரை -நீ
சுவை கொள்ளத்  சுகந்தன்னை  இழந்தவரை
சொந்த மெல்லாம்  நீயேயென்  றிருந்தவரை - வாழும் 
சொர்க்க மெனப்  போற்றிடுவாய் இறுதிவரை.

முந்நூறுநாள் வயிற்றில் சுமந்து உன்னை - நல்
முத்தாகக் காப்பாற்றி வளர்த்த அன்னை
மூப்பினால் வயதாகித் தளர்ந்த பின்னே -ஒதுக்கி
முதியோர் இல்லந் தன்னில் சேர்ப்பதென்னே?

தந்தையின் சொத்ததினில் உரிமை கொண்டாய் - அருந்
தாயவள்    கருணையதால்  வளர்ந்து  நின்றாய்
தாங்கிடும் விழுதெனவே   நினைத் திருந்தார்-உற்ற
தளர்ச்சியைப் போக்கிட  நீஏன்  மறந்தாய்?

பட்டினி    கிடந்  துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம்    இருந் துனது நோய்போக்கிப் 
பாங்குடன்   நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர் 
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து. 

முறுக்குடன்  நீயும்  இன்று விளங்கிடலாம்- நாளை
முதுமையும் உனை வந்து  முடக்கிடலாம்
முன்கையின்  வழிநீளும் முழங்கையைப் போல் -முறை
முழுதை யும்உன்  பிள்ளை தொடர்ந்திடுமே.

-- அக்தோபர் முதல் நாள் உலக முதியோர் நாள்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பட்டினி கிடந் துனக்குப் பாலூட்டி-கடும்
பத்தியம் இருந் துனது நோய்போக்கிப்
பாங்குடன் நல்வாழ்வில் உனை அமர்த்தி - அவர்
பரிதவித் தலைதல் பாவம் நெஞ்சிலிருத்து.

நன்று சொன்னீர் ஐயா
முதியோர் சுமையல்ல
நம் சொத்து
நன்றி ஐயா

Post a Comment