Thursday, May 18, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள். தொடர்ச்சி-21



ஆளுக்கு ஒரு நீதியா?

                    சின்னக் குழந்தை பாத்திரங்களை  வைத்து நாடகம் போடுவதில் ஏற்பட்ட சிரமத்தால் இனி  குழந்தை பாத்திரங்களே இல்லாத  கதைகளை எழுதுவது என்ற  முடிவில் உறுதியாகவே இருந்தேன்.

                அதேபோல   பொது வெளியில் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை,  20க்கு 16 பலகை அடித்த மேடைகளில், நான் ஆசைப்பட்ட  பின்புலக் காட்சிகளை அமைப்பதில்  எதிர்பாராமல் நடந்த சிக்கல்களால் இனி  அமெர்ச்சூர் மேடைகளுக்கு அடங்காத  செட்டிங்களைப் போடக்கூடாது என்ற முடிவோடு  வெறும் திரைச்சீலைகளை மாற்றும் காட்சிகளை வைத்து ஒரு நாடகத்தை எழுத முனைந்தேன்.

             அப்படி  பெண்களின் பிரச்சனையை மையக்கருவாகக் கொண்டு  எழுதப்பட்டு 1979ல்   அரங்கேற்றிய நாடகம்தான்
  “ அவளுக்கு ஒரு நீதி”


                     அதிக படிப்பறிவில்லாது , கிராமத்து பழக்க வழக்கங்களில் ஊறிப்போன ஒரு கிராமத்துப் பெண்ணை, சென்னையில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு  கிராமத்து      இளைஞன் உறவுமுறை விட்டுப் போகாமலிருக்கப் பெற்றோர் செய்த ஏற்பாட்டின்படி  திருமணம் செய்து கொள்கிறான்.

                அந்த இளைஞனின் கிராமத்துத் திருவிழாவினைக் கண்டுகளிக்கச்  சென்னை நிறுவன நண்பர்கள் வருகின்றனர். பின் கொசுவம் வைத்துக் கட்டிய கண்டாங்கிச் சேலையுடனும், நெற்றியில்    காசளவு  குங்குமப் பொட்டுடனும், அள்ளிச் செறுகிய கொண்டையுடனும்  வெகுளியாய் வரவேற்ற தங்கள் நிறுவன உதவி மேலாளரின் மனைவியின் கோலத்தைப் பார்த்த  அந்த  நண்பர்கள் பகடி பேசுகின்றனர்.

                   தன் மச்சினன்  ஊரில் நடக்கும்  முதல்   திருவிழா   தேவைக்கு,  உச்சிக்குடுமியோடு   அவளது அண்ணன், ஆட்டுக்குட்டி, சேவல், அச்சுவெல்லம், பச்சரிசி,  காய்கறி இலைக்கட்டு முதலான சீர்கள் கொண்டு வருகிறான். இவற்றைப் பார்த்த நாகரீக மோக  நகரத்து    நண்பர்கள்  கதைத் தலைவனைக் கேலி செய்கின்றனர்.

                ஒரு வெளிநாட்டுக்கு அழகுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின்  உதவி   மேலாளர் தனது தகுதிக்கேற்ப அவரின் மனைவியை மாற்ற வேண்டுமென்று நண்பர்கள்  வற்புறுத்துகிறார்கள்.

                கிராமத்துக் கலாச்சார நடை உடை பழக்க வழக்கங்களை மாற்ற முனையும்  கதைத்தலைவனை அவனது அப்பா கிராமத்துக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி மறுக்கிறார்.

                  அவளை நாகரீக  மங்கையாக  மாற்ற சென்னைக்கே அழைத்துச் செல்கிறான் அவளின் கணவன். அங்கு அவளை மாற்ற அவன்படும் பாட்டை நகைச்சுவையாய்ச் சொல்லியிருந்தேன்.

               மேலாளர்  பதவி  உயர்வு பெற்றமைக்காக அவன் நண்பர்களுக்கு  ஒரு நட்சத்திர விடுதியில் விருந்து கொடுக்கிறான்.   விருந்துக்கு வந்த கிராமத்து மச்சினன்,   அங்கு நடந்து கொண்டிருந்த      மேற்கத்திய இசை நடனத்திற்கிடையே,  நாட்டுப்புறப் பாட்டுப்பாடி ஆட, அவனுடன் கதைத் தலைவியும் சேர்ந்து ஆடுகிறாள்.  அதைக் கண்ட அவனது  நண்பர்கள்  செய்த கேலிகளால்,   கதைத் தலைவன் அவமானப்பட்டு,    அவளைக் கிராமத்துக்கே திரும்ப அனுப்புகிறான். மேலும் அவளை விவாகரத்து செய்யவும்  தன் தந்தையிடம் வற்புறுத்துகிறான். ஊர்கூடி பஞ்சாயத்து நடக்கிறது.





                 வாழ்க்கையை இழக்க விரும்பாத கதைத்தலைவி,
 தன் கணவன் விருப்பப்படியே  இனி நடந்து கொள்வதாய் பஞ்சாயத்தாரிடம்     சொல்லி, பட்டணத்திற்குச் சென்று  கணவனுடன் சேர்கிறாள்.

              “முள்ளை முள்ளால் தான்  எடுக்க வேண்டும்” என்று முடிவெடுக்கிறாள். தன் கணவன் விரும்பும்படி நடை, உடை பழக்கங்களை மாற்றிக் கொள்கிறாள்.  இன்னும்  ஒருபடி மேலே போய் அவனுடைய நண்பர்களுடன் மிக நெருக்கமாகப் பழகவும், கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லவும் தொடங்குகிறாள்.

                ஒரு கட்டத்தில்,  கேளிக்கை விடுதியில்  தன் கணவனின் நண்பனுடன் மது அருந்தி, ஆட்டம் போடுவதாகவும் நடிக்கிறாள்.
நாகரீகம் என்ற பெயரில் தன் மனைவி அளவுமீறி அயலானுடன் பழகுவதையும். ஆடம்பர மோகம் கொண்டு அலைவதையும் கண்டு மனம் புழுங்குகிறான் கதைத் தலைவன்.  தன்மான இழப்பைத் தாங்க முடியாது தற்கொலை முயற்சிக்குச் சென்ற கணவனைத் தக்க சமயத்தில் காப்பாற்றி,  அவனை பண்பாட்டுச் சீரழிவை உணரச் செய்கிறாள்.

              இந்த நாடகம் சுற்று வட்டாரக் கிராமப்புற மக்களால் பெரிதும்  பாராட்டப் பட்டது. அதன் விளைவாக எனது உறவினரும்  கோதண்ட ராமபுரம் பஞ்சாயத்துத் தலைவருமாயிருந்த திருமலை அவர்கள், அவர்கள் ஊர்த் திருவிழாவில் அந்த  நாடகத்தை 1985ல்நடத்த வேண்டுமென்றார்.  ஆனால் அவர்  மிகக் குறைவான செலவில் நடத்தித்தர வற்புறுத்தினார் . ஆசைப்படுகிறாரே என நானும் ஒத்துக் கொண்டேன்.  முன்னர் நடித்த  நடிகையர்அ ந்த தேதியில் வேறு நாடகத்தில் ஒப்பந்தமாகி   இருந்தமையால்  திருச்சியிலிருந்து கதாநாயகி நடிகையையும் புதுக்கோட்டை நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை   நடிகையும் ஒப்பந்தம் செய்தேன்.

                 பழைய கதாநாயகனை வைத்து புதிய நடிகைகளோடு இரண்டு மூன்று  பயிற்சியும் நடந்தது. பதினெட்டுப் பட்டி கிராமத்திலும் எங்கள் நாடகம் நடப்பது பற்றி துண்டறிக்கை விளம்பரம் செய்யப்பட்டது.

                நாடகம் நடக்க மூன்று நாட்களே  இருந்த நிலையில் , கதாநாயகனாக நடித்தவருக்கு ( கல்வித் துறையில்  பணிபுரிந்தவர்) திடீரென  சென்னைக்கு பணி உயர்வு ஆணை வந்தது.அவர் உடனடியாக புதுக்கோட்டையிலிருந்து விடுபட்டுச் 
சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய நிலை.

             அவருக்கு பணிமுக்கியம். எனக்கு நாடகத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம். மூன்று நாள்களுக்குள் ஒரு புதியவரை அந்தப் பாத்திரத்திற்குத் தயாரிப்பது அத்தனை எளிதான செயலா?
.
                              அந்த நிலையில் என்ன செய்வது?

                                                                                        --- அடுத்த தொடரில்






  

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சோதனை மேல் சோதனைதான் ஐயா

Kasthuri Rengan said...

எத்துனை சோதனைகள் ...
சுவாரசியம்தான்
தொடருங்கள்

Post a Comment