Sunday, May 21, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-22

                  
மனைவி முன்னிலையில்   நடிப்பது தப்பா?

              கோதண்டராமபுரம் பஞ்சாயத்துத் தலைவரின்   அன்பான வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல், 1979 ல் நடத்தி பெயர்பெற்ற  சமூகவியல் நாடகமான “ அவளுக்கு ஒரு நீதி” நாடகத்தை  1985 ல் பழியஞ்சி ஊர்த் திருவிழாவில்   நடத்த ஒத்துக் கொண்டேன். 

                   முன்பு நடித்த கதாநாயகனோடு  புதிய நடிகையரை வைத்து பயிற்சியும் அளித்து நாடகத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது.  


                   பஞ்சாயத்தைச் சேர்ந்த 18 பட்டிகளிலும் நாடகம் பற்றிய துண்டறிக்கை விளம்பரங்கள் தடபுடல் செய்யப் பட்டிருந்தது. நாடகம் மூன்று நாள்கள் இருந்த வேளையில்  கதாநாயக நடிகருக்கு பணி பதவி உயர்வு வந்து, உடனடியாக  சென்னை அலுவலகத்தில் பணியில் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு நாள்களுக்குள் எப்படி ஒரு புதியவரை  மூன்றுமணிநேர நாடகத்திற்குத் தயாரிக்க முடியும்?


              வேறு வழியின்றி நானே அந்நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்குவது என  முடிவு செய்தேன்.   மேடை நாடக     இயக்குநராக,  அந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பாத்திரங்களுக்குமான வசனங்களைச் சொல்லிக் கொடுத்திருந்ததால்   கதா நாயகனின்  வசனங்கள்  

 மனப்பாடம் ஆகியிருந்தது.  அந்தத் துணிச்சலில் நானே கதாநாயக அவதாரம் எடுத்தேன்.

             இதில் மறக்க முடியாத பல புதிய அனுபவங்களைச் சந்திக்க வேண்டியதிருந்தது. 


              நாடகத்தன்று காலையே நடிகையரை எனது வீட்டிற்கு வரச் செய்து ஒரு இறுதி ஒத்திகை பார்த்துக் கொண்டு, மாலை 5.00 மணிக்கு அந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். 


              எங்களுடைய பொல்லாத நேரம் அன்று  அரசியல் காரணமாக பொது வேலை நிறுத்தம் .


              எல்லாப் போக்குவரத்துகளும் நின்று போயிருந்தன.  வேறு வழியின்றி  நாடகம்  நடக்கும் 5 கல் தொலைவிலிருந்த அந்த கிராமத்துக்கு  நடிகையரை மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு 
சென்றோம்.  (அப்போது எங்கள் குழுவில் யாரிடமும் உந்தூர்தி இல்லை.)  இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக் கருவிகளுடன் அவர்களுடைய மிதி வண்டியிலேயே  அந்தக் கிராமத்துக்கு வந்து  சேர்ந்தனர். அது ஒரு வித்தியாசமான அனுபவம்

               அந்தக் கிராமத்துக்குச் சென்று நாடகக் கொட்டகையைப் பார்த்ததும்  ஒரே   அதிர்ச்சி.  வழக்கமாக  அந்த ஊர்த்திரு விழாவில்    மண்மேடையின் மீது  ஒரு சரிவான கீற்றுக் கொட்டகை போட்டு,   கதம்ப நிகழ்ச்சிதான் கலைநிகழ்ச்சியாக நடத்துவார்களாம்.    முன்புறம் சற்று உயர்ந்தும் பின்புறம் சரிவாகவும் உள்ள கீற்று க் கொட்டகையில் எப்படித் திரைச் சீலைகள் கட்ட முடியும். செலவு சிக்கனம் என்பதால்  திரை அமைப்பாளரை அழைத்துச் செல்லாமல் நாங்களே மூன்று திரைச் சீலைகளை நடிகர் சங்கத்தில் வாடகைக்கு எடுத்துச் சென்றிருந்தோம். அதை எப்படி அந்த சரிவான கொட்டகையில் கட்டுவது?


                    அழைத்திருந்த  பஞ்சாயத்துத் தலைவரைத் தேடினேன். அவர் ஊருக்கு புறத்தே உள்ள கோயிலுக்கு கிடாவெட்டுப் பூசைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எங்களைக் கவனிக்க வைத்திருந்த ஆளிடம் இந்தக் கொட்டகையில் நாடகம் நடத்த முடியாது என்று சொன்னதும், அவர் அங்கிருந்த கொட்டகை வேலை தெரிந்த இரண்டு பேரை அழைத்து வந்து பின்புறம் சரிந்திருந்த கொட்டகையை ஒரேமட்டத்துக்கு உயர்த்திக் கட்டித் தந்தார். “மேடைக்கு ஏதாவது பெஞ்சுகள் கிடைக்குமா” எனக் கேட்டேன். அரை மணி நேரத்திற்குப் பின்   நான்கு பெஞ்சுகளைக் கொண்டு வந்தார்கள் . அதைவைத்து மேடை அமைக்க முடியுமா? பேசாம மண்மேடையிலேயே     நடிப்பது என்று முடிவுக்கு வந்தோம். நல்லவேளையாக நெல்களத்தை மூடும் தார்ப்பாய் ஒன்று கொண்டு வந்து  அந்த மண்மேடையில் விரித்துத் தந்தார்கள்.


              நீளமும்   அ கலமும் குறைவான அந்தக் கொட்டகையில் சுருக்கமும், இழுபடுவதுமாய் எங்கள் மன்ற நண்பர்கள் திரைகளைக் கட்டி முடித்தார்கள்.


                  500 ரூபாய்க்குள்  ஒரு அமெர்ச்சூர் நாடகத்தை நடத்த வேண்டிய நெருக்கடியால், ஒப்பனைக் கலைஞரை ஒப்பந்தம் செய்து அழைத்துச் செல்லாமல்  ஒப்பனைப் பொருள்களை வாங்கி நாமே  ஒப்பனை செய்து கொள்ளலாம் என  முடிவு செய்திருந்தேன்.  அங்கு ஒப்பனை செய்யத் தனியான இடம் கேட்டபோது     கதவு சன்னல்கள் பொருத்தப் படாது  ஒரு ஓட்டு வீட்டைக் காட்டினார்கள்.   அந்த வீட்டில், ஒரு போர்வையை திரைபோட்டு நடிகையரை ஒப்பனை செய்யச் சொல்லி, நடிகர்களுக்கு நான் ஒப்பனை செய்யத் தொடங்கினேன். 


                இரவு 8.00 மணிக்கு கிடாய் வெட்டு முடிந்து மக்கள் கூத்துப் பொட்டலில் கூடத் தொடங்கி விட்டனர்.   நடிகையர்  தேநீர் கேட்க, அன்று கடையடைப்பு என்பதால் ஒரு வீட்டில் வரக்காப்பி போட்டுக் கொடுத்து விட்டார்கள். வேறு வழியின்றி அதைக் குடித்தோம். 


           ஏற்பாடு செய்த தலைவர்   அப்போதுதான்  ஒப்பனை  செய்து கொண்டிருந்த என்னிடம்   வ ந்து ” என்னப்பா ஆரம்பிக்கலாமா?“ ன்னு கேட்டார். வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு ,   இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கலாம் என்றேன். 


              “ஒருவழியா சாப்பிட்டுட்டு   ஆரம்பி ங்களே” ன்னாரு.   பசியிலிருந்த   உறுப்பினர்களும் “சரி” ன்னு சொல்ல எல்லாருக்கு  தையிலையில் சாப்பாடு வந்தது . அவர்கள் சாப்பிடும் நேரத்தில்  நானும் கொஞ்சம் அரிதாரத்தைத் தடவிக் கொண்டேன்.


               மேடையில் இடமில்லாததால் இசைக்குழு ஹென்றி, ஜோசப் குழுவினர்  இரண்டு பெஞ்சுகளில் மேடையின் முன்னால்  அமர்ந்தனர்.


              நான் கதாநாயகனாய் நடிக்க வேண்டியிருந்ததால்  நாடக ஸ்கிரிப்ட் பார்க்க  அங்கு வந்திருந்த கோயில்பட்டி பாரதி மன்ற அன்பு சிதம்பரம் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.  அப்படி இப்படின்னு தட்டிக் கொட்டி நாடகத்தை  தொடங்கும்போது மணி பதினொன்னு.


              அரங்க அமைப்பு, ஒப்பனை. இசை எப்படி இருந்தாலும்  நடித்தவர்கள்  தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடித்தனர்.


              உறவு விட்டுப் போகாமல் இருக்க, அப்பாவின் கட்டாயத்தால்,  பட்டிக்காட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்ட பட்டணத்தில் பணிபுரியும்  நாயகன்,  தன் மனைவியை நவநாகரீக மங்கையாக மாற்ற முயலும் கதை  அது.  


                 அதில் ஒரு காட்சியில் பின் கொசுவம் வைத்து மட்டும்  சேலை கட்டத் தெரிந்த  கிராமத்து   மனைவிக்கு  கணவன்  வெளிநாட்டு சார்செட் புடவை வாங்கிக் கொடுத்து  நவ நாகரீகமாக   பிளிட்  ( முன் பிரில் ) வைத்துச் சேலைகட்டக் கற்றுக் கொடுக்கும் காட்சி. 


                 வழுவழுப்பாக நழுவி விழும்  அந்தப் புடவையைக் கட்டமுடியாமல் மனைவி தடுமாறும் போது கணவன்  தானே பிளிட் மடித்து அவள் இடுப்பில் சொறுகி விடுகிறான். கணவனாக நடிக்கும் நான் அப்படிச் செய்தபோது, எதிரே இருந்த பெண்கள் பக்கம் ஒரே சிரிப்பொலி. 


                கூடவே  ” ஏன்டி மரகதம் ஓன் புருசன் ஒரு நாளாவது ஒனக்கு இப்டி சேலை கட்டி விட்ருப்பானா?”  ங்கிற கமெண்ட் வந்தது.  


              விமர்சனம் வந்த பக்கம் அப்போதான் பார்த்தேன்  மேடைக்கு முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்க்க வந்த     என் மனைவியைச் சுற்றி இருந்த சொந்தங்கள் அவளை அவ்வாறு சொல்லிக் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள்.


              மேடை நாடகம் என்னவோ அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள். 


                மறுநாள் வீட்டில்...


                    --- என்ன நடந்ததுன்னு அப்புறம் சொல்றேன்.

3 comments:

KILLERGEE Devakottai said...

ஆஹா மறுநாள் வீட்டிலா ?
அனுபவம் ஒவ்வொன்றும் பாடமே...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
மாட்டிக்கொண்டீர்களா?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சேலையைக் கட்டிவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டீர்களோ?

Post a Comment