Wednesday, May 24, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி 23



செம்பறவையான  சிட்டு


                    பட்டி மன்றம் முடிந்தது வீட்டில் வழக்காடு மன்றம் என்ற அன்மைக் கால சொலவடை போல,  மேடை நாடகம்  சுந்தர காண்டமாக முடிந்து,  வீட்டில்  யுத்த காண்டம் தொடரப் போவதை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தார்கள்   என் மனைவியைப் பகடிபேசிய உறவுகள். 

               பழியஞ்சி கிராமத்தில்  நடந்த    “அவளுக்கு ஒரு நீதி”  நாடகத்தில்  கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவன்,  அவளை நாகரீகமாக  சேலை உடுத்தக் கற்றுக் கொடுக்கும் காட்சியில்  நடித்த நான்,   நாடக மனைவிக்கு இப்படித்தான்  சேலை கட்ட வேண்டும் என்று சேலையை பிளிட் வைத்து இடுப்பில் சொறுகி விட்டபோது,  மேடையின் முன் பார்வையாளர் பகுதியில் இருந்த என் மனைவியை ” ஏன்டி மரகதம், ஓம் புருசன் ஒருநாளாவது இப்டி ஒனக்குக் கட்டி விட்ருப்பானா?“ என நாடகம் பார்த்துக் கொண்டிருந்த உறவுகள்   சீண்டியதன் விளைவு  வீட்டில் ஒரு யுத்த காண்டம் நடக்கப் போகிறது என்றுதான்  எல்லோருக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு. 

                              நாடகம் முடிஞ்சதும்   ஒப்பனை களைச்சு,. கலைஞர்களுக்கு சம்பளமெல்லாம் கொடுத்துட்டு   என் மனைவியைச் சந்திக்க    அவளைத் தேடுனா ஆளைக் காணோம். 

“ அண்ணே, அக்கா அவங்க சித்திகூட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு   வீட்டுக்குப்  போயிட்டாங்க” ன்னு  ஒரு பையன் தகவல் சொன்னான்.  

இதையெல்லாம் பார்த்தவர்கள்   நா அப்படி நடிச்சது பிடிக்காமதான் என் மனைவி  கோவிச்சுக்கிட்டு போயிட்டான்னு நெனைச்சு,

 “ வீட்டுக்குப் போனதும் இருக்கு வாத்தியாருக்கு  செமத்தியா மொத்து” ன்னு முனுமுனுத்ததும்  என் காதுல விழுந்தது.

வீட்ல என்ன நடக்குமுன்னு அவங்களோட கற்பனை இது.

” ஏங்க, அத்தனை பேருக்கு முன்னால  அவளுக்கு சேலையைக் கட்டி விடுறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை?” ன்னு அவ கேப்பா


” வெறும் நடிப்புக்குத்தானே அப்டிச் செஞ்சேன்” ன்னு அவன் சொல்லுவான்


” பிளிட் மடிச்சு அவ கையில கொடுத்து சொறுகிக்கச் சொல்ல வேண்டியதுதானே, அதென்ன நீங்களே கொண்டுபோய் சொறுகிவிட்டு.... அதுவும் தொப்புள்க்குக் கீழே” ன்னு அவ  கொமுட்டுல   இடிப்பா


” அது லோகிப் சேலை அப்படித்தான்டி கட்டணும்”ன்னு அவன் வழிவான்


” ஓகோ, அப்படியே சன்னல் வச்ச ஜாக்கெட்  ஊக்கையும்  மாட்டிவிட வேண்டியதுதானே”ன்னு அவ மொகரையக் காட்டுவா


“  இல்லேப்பா, ஒரு பட்டிக்காட்டு வெகுளிப்பொண்ணுக்கு நாகரீகமா இருக்கது எப்படிங்கிறதுக்காக...” ன்னு அவன் இழுக்குறதுக்குள்ள 


“ நீங்க அந்த தளுக்குக் காரியோட வீட்டுல போயி வேணுன்னாலும் அதையெல்லாம் செய்யுங்க, நா எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்னுட்டு அவ ஓடப்போறாப் பாரு”


                    இப்படியெல்லாம் கற்பனை செஞ்சு பாத்தவங்களுக்குத் தெரியுமா    அன்னக்கிப் பகல் பயிற்சியின்போது  வீட்ல   அப்படி பிளிட் வச்சு சேலை கட்டிவிட எனக்குக் கத்துக் கொடுத்ததே என் மனைவிதான்னு.   

                 ஆமாம். 1964ல் இருந்து மேடை நாடகத்தில் ஈடுபட்டிருந்த எனது நடிவடிக்கைகள் பற்றி நன்றாக அறிந்து,  1971ல்என்னை விரும்பித் திருமணம் செய்து கொண்டவள் என் மனைவி. உள்ளுர்வாசி.

                   மேலும் எனது நாடகத்தில் நடிக்கவரும் நடிகையர் முதல்நாள் ஒத்திகைக்கு வரும்போதெல்லாம், எனது வீட்டில்தான் தங்குவார்கள். அவர்களிடம்  இணக்கமாக, நல்ல நட்புடன் பழகுவதுடன் அவர்கள் விரும்பும் சுவையான உணவைச் சமைத்து வழங்குவதும் எனது மனைவியே.

                 இன்னும் ஒருபடிமேலே சொல்லணுமுன்ன,      நாடகத்தில் வரும் காதல்காட்சிகளை    எனது வீட்டில் வைத்துதான் நாயகன் நாயகிக்குப் பயிற்சி யளிப்பேன். அதனால் எள்ளளவும் எனது நடத்தை மீது சந்தேகப் படமாட்டாள் என் துணைவி.

             எனது மேடை நாடகத்திற்கான  பல கதைகளின் மையக் கருத்துகள் அவள் எனக்குத் தந்தவை என்பதைச் சொல்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.

             சுருங்கச் சொன்னால்  நான்  ஐம்பதாண்டுகளாய் சமூக மேம்பாட்டிற்கான   கலை இலக்கியத் துறையில் களமாட உற்ற துணையாய் இருந்தவள் என் இணையாள் என்பது மிகையில்லை. 


           மலரினும் மென்மையாக இருக்கும் மகளிர் எரிமலையாய் மாறுவதற்கும், எரிந்து சாம்பலாவதற்கும்  ஆணாதிக்க வன்மங்களே காரணம்  என்பதை  தடம் மாறிப்போன  அவள்  தோழியின்  வாழ்வியல் சம்பவத்தை அடிக்கடிச் சொல்லி ஆதங்கப்படுவாள் என் இணையாள்.


            அப்படி அவள் தந்த ஒரு கதைக்கருதான் “ செம்பறவை” என்னும் பெயரில்  மேடை நாடகமாக 1983ல் அரங்கேறியது.






                   காய்கறி விற்க  வந்த காவேரி என்ற பெண்ணை ஒரே அறையில் தங்கிப்படித்த இரு கல்லூரி மாணவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் .
அதன்விளைவாகக் கருவுற்ற அவள் அவர்களிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறாள். அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி  ஏமாற்றிவிட்டு தேர்வு முடிந்ததும்  வெவ்வேறு திசைகளுக்கு இடமாறிச் சென்று விடுகின்றனர்.

                       திருமணமாகாமல்     கர்ப்பிணியான அவளை ஊர் தூற்றுகிறது. அவளை அந்த நிலைக்கு ஆளாக்கிய இருவரில் ஒருவனாவது தன்னை  மனைவியாய் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில், தனது 4 வயதுத் தம்பியுடன்   ஊரைவிட்டு வெளியேறி  அவர்கள் தந்த முகவரிக்கு அவர்களைத் தேடிச் செல்கிறாள். முகவரி பொய்யென அறிந்து புலம்பிய அவளுக்கு ஒரு  மூதாட்டி  உதவிட அவளுக்கு ஒரு பெண்மகவு பிறக்கிறது.


                        நான்கு வயது   தம்பியுடனும் ஆறுமாதக்        கைக்குழந்தையுடனும் ஆதரவற்ற நிலையிலிருந்த அவளுக்கு வாழ்வளிக்க முன்வருகிறான் செங்கோடன் என்னும் அன்முறையாளன்.     


                     அவளின் தம்பியையும் கைக்குழந்தையையும்  சுந்தரேசன் என்பவர் நடத்தும் அனாதை இல்லத்தில் ஒப்படைத்து விட்டு  அவளை ஆந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கிறான் செங்கோடன் .      அங்கு   அவளை   விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துகிறான்.   


                   மென்மையான மலர் மனம் படைத்த அவள் தன்னை வஞ்சித்த இருவரையும் தேடிப் பழிவாங்க வன்மையான செம்பறவையாக மாறுகிறாள்.   அவளை ஏமாற்றிய இருவரையும் தேடிப் பழிவாங்க ஒவ்வொரு ஊராக  அவளை  அழைத்துச் சென்று  கேளிக்கை விடுதிகளில் விலைமாதாக ஆக்கிப் பணம் சம்பாதிக்கிறான். 


 18 ஆண்டுகளுக்குப் பின்    தன்னை  வன்புணர்ச்சி செய்தவர்களில் ஒருவன்     திருச்சியில்  வழக்குரைஞராகவும், இன்னொருவன் கோவையில் மருத்துவராகவும் இருப்பதை அறிந்து அவர்களைப் பழிவாங்க முனைகிறாள்.




                     அவளின் முயற்சியில் வெற்றி பெற்றாளா? 

                                                 ---அடுத்த தொடரில் 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தாங்கள் ஐம்பதாண்டுகளாய் சமூக மேம்பாட்டிற்கான கலை இலக்கியத் துறையில் களமாட உற்ற துணையாய் இருக்கும் தங்களின் துணைவியார் போற்றுதலுக்கு உரியவர் ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

"அப்படி பிளிட் வச்சு சேலை கட்டிவிட எனக்குக் கத்துக் கொடுத்ததே என் மனைவிதான்னு...." இப்போது எங்களுக்குத் தெளிவாகிவிட்டது.

Post a Comment