Friday, May 26, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி-24

                 
 முடிவை மாற்று!!!

               காய்கறி விற்றுக் கபடமில்லாத   சிட்டாகத்  துள்ளித் திரிந்த  காவேரி, தன்னைக் கூட்டாக வன்புணர்வு செய்து தலைமறைவாய்ப் போன இரண்டு பேரைப் பழிவாங்க “கௌரி” என்ற பெயரில் செம்பறவையாய் ஊர்   ஊராய்த் 
தேடித் திரிகிறாள்.

                  அவர்களைக் கண்டுபிடித்து அவளது சபதத்தை நிறைவேற்று வதாகச் சொன்ன சமூக விரோதி செங்கோடனின் உறுதிமொழியை நம்பி  கூட்டு   வன்புணர்ச்சியால் கருவுற்றுத் தனக்குப் பிறந்த ஆறுமாதக் கைக்குழந்தையையும், தனது தம்பியையும்  செங்கோடனிடம் ஒப்படைக்கிறாள். அவன் அவர்களை    ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு கௌரியை ஆந்திராப் பகுதிக்கு  அழைத்துச் சென்று, அவளை  வைத்து   விபச்சாரத் தொழில் நடத்திப் பணம் ஈட்டுகிறான்.

                  பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு,  அவனது உதவியாள்  இராசாளி மூலம் அங்கிருந்து தப்பி,  தமிழ்நாடு வந்து  தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரது இருப்பிடங்களையும் கண்டு பிடிக்கிறாள்.

                தான் தேடிய இருவரில்  தியாகு என்ற  ஒருவன்   திருச்சியில் வழக்குரைஞராக  இருப்பதைத் தனது உதவியாள்  மூலம் அறிகிறாள்.  அவன் மனைவியை தனது உதவியாள் மூலம் கடத்திவந்து,  அவளை மீட்க , அந்த வழக்குரைஞரை வரவழைக்கிறாள்.

                தனது மனைவியை மீட்க வந்த வக்கீலிடம் , 
18 ஆண்டுகளுக்கு முன்   நடந்த  நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறாள். அவன் அதற்கு வருத்தம்  தெரிவித்து, தன் மனைவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறான்.  தான் பட்டபாட்டை அவனுக்கு உணர்த்த அவன் கண்முன்னே 
அவனது  மனைவியை இரண்டு முரடர்களைக் கொண்டு  
வன்புணர்ச்சி செய்யச் சொல்கிறாள்.  அந்தக் கொடுமையில் வழக்குரைஞர் மனைவி மூச்சுத் திணறி இறக்க, அதைப் பார்த்த வக்கீல் தியாகு பைத்தியக்காரனாகி அலைகிறான்.

                 இன்னொருவன்  ஜார்ஜ், கோவையில்  மருத்துவராக  பெரும் புகழோடும் செல்வச் செழிப்போடும் இருப்பதை அறிந்து அங்கே   செல்கிறாள். அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு முடித்து அப்போதுதான்  தந்தை வீடு வந்த டாக்டர் ஜார்ஜின் மகள் வித்யாவை    தனது கையாள்களை வைத்து  ஏமாற்றி அழைத்து வந்து  இரகசிய இடத்தில் அடை த்து வைக்கிறாள். 

                மகளைத் தேடிவந்த டாக்டர் ஜார்ஜிடம் தான் யாரென்பதை நினைவு படுத்துகிறாள் கௌரியாக இருக்கும் காவேரி. வாலிப வயதில் தான் செய்த  தவறுக்கு இழப்பீடாக இலட்சங்களை அள்ளித் தருவதாகக் கூறுகிறான் மருத்தவர்  ஜார்ஜ்.  அவனது வன்செயலால் திசைமாறி, விலைமாதாய் நிற்கும் தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சொல்கிறாள். சமுதாயத்தில் புகழோடு இருக்கும்  அவன் அவளின் கோரிக்கையை  ஏற்க மறுக்கிறான்.

               அப்படியானால்  அவன் மகளை  இரு முரடர்களை வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகக்  கூறுகிறாள். 

              அப்போது. தனது மனைவி முதல் பிரசவத்தின்போது இறந்து போனதையும்,  வித்யாவை “சுந்தரேசன் அனாதை இல்லத்திலிருந்து” தத்து எடுத்துத் தன் மகளாய் வளர்ப்பதையும் கூறுகிறான் ஜார்ஜ்.

             சுந்தரேசன் அனாதை இல்லத்தில் செங்கோடனால் ஒப்படைக்கப்பட்ட  தனது ஆறுமாதக் கைக்குழந்தைதான் டாக்டரின் மகளாக வளர்ந்துள்ள வித்யா என்பது  காவேரிக்குத் தெரிய வருகிறது. மனதில் இரக்கம் கசிகிறது.  

                  தன்மகளான       வி த்யாவைச் சீரளிக்க விரும்பாமல், டாக்டரிடம் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ள  மீண்டும் 
வற்புறுத்துகிறாள். இரண்டு நாள்களில் தன் முடிவைச் சொல்வதாக காவேரியிடம் சொல்லிவிட்டு  வித்யாவைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான் டாக்டர் ஜார்ஜ்.

                 புகழ்பெற்ற மருத்துவராய் விளங்கும் தான்,    ஊரறிந்த ஒரு விலைமாதை தன் மனைவியாய்  ஏற்றுக் கொள்ள முடியாமலும்,  காவேரிதான் தனது  தாய் என்பதை வித்யா அறியாமலிருக்கவும் , தனக்குத் தானே விச ஊசி போட்டுக் கொண்டு இறந்து விடுகிறான் அந்த டாக்டர்.

                 செங்கோடன், வெலிங்டன் இராணுவ முகாமிலிருந்து  இந்திய இராணுவ இரகசியங்களைத் திருடி பாகிஸ்தானுக்கு விற்க முயற்சிக்கையில்  பாதுகாப்புப் படை அதிகாரி மணிவண்ணனால்  சுடப்பட்டு, தப்பித்துக் கோவை வித்யா மருத்துவ மனைக்கு வருகிறான்.    இராசாளி மூலம் செங்கோடனின் தேசத் துரோகச் செயலை அறிகிறாள்  காவேரி.  

                  தன்னை விபச்சாரத் தொழிலில் தள்ளியதோடு, தாய் நாட்டுப் பாதுகாப்பையும் சீரழிக்கச்  சதி செய்த  செங்கோடனுக்குச்  சிகிச்சை அளிக்க விடாமல்  வித்யாவைத்   தடுத்து    விடுகிறாள் காவேரி.    மேலும் செங்கோடன் இருக்குமிடத்தையும் இராணுவ முகாமுக்குத் தெரிவிக்கிறாள்.

                 தப்பியோடியவ னைத் தேடி வந்த மணிவண்ணன்,  செங்கோடனிடமிருந்த இராணு இரகசியங்களைக் கைப் பற்றுகிறான்.     உரிய நேரத்தில்   சிகிச்சை  கிடைக்காமையால் செங்கோடனும் இறக்கிறான். 

                 கோவை வித்யா மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வந்திருந்த சுந்தரேசன் மூலம்,  இராணுவ அதிகாரியாய் இருக்கும் மணிவண்ணன்  18 ஆண்டுகளுக்கு முன் அனாதை இல்லத்தில் விடப்பட்ட   தனது தம்பிதான்  என்பதை  அறிந்து கொள்கிறாள்  காவேரி.

              மணிவண்ணன்  வித்யாவை விரும்புவதையறிந்த காவேரி, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க  அனாதை இல்ல  சுந்தரேசனிடம் வேண்டுகிறாள்.

              ஊரறிந்த  விலைமகளான ஒருத்தி,   மணிவண்ணனின் அக்கா என்பதோ, வித்யாவின் அம்மா என்பதோ வெளியுலகுக்குத் தெரிந்தால்   உயர்ந்த நிலையிலிருக்கும் அவர்களின் கவுரவம் கெட்டுவிடும் என்றெண்ணிய காவேரி . தான் தேடிய  பணம், பொருள் அனைத்தையும் சுந்தரேசனுடைய  அனாதை இல்லத்திற்கு எழுதி  சுந்தரேசனிடம்  ஒப்படைத்து விட்டு,    விசமருந்தித் தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

           ஒரு தேசத்துரோகியின் இருப்பிடத்தை அடையாளம்     காட்டியமைக்காக  காவேரியைப்   பாராட்ட அவளைத் தேடிவந்த மணிவண்ணனும் , அவளுக்கு வாழ்வழிக்க உடனிருந்து உதவிய இராசாளியும்   விசமருந்தி  மரணத்தின் விளிம்பிலிருக்கும்   காவேரியைக்  காப்பாற்ற  முயன்றும்  அந்த செம்பறவை தன் சிறகுகளைத் தானே உதிர்த்துக் கொண்டது.


             இந்த நாடகம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
21.03.1987ல்  மீண்டும் புதுக்கோட்டை லாரி உரிமையாளர், ஓட்டுநர், கிளீனர்கள் சங்க ஆண்டு விழாவில்  நகரின் முக்கிய இடத்தில்        ( அண்ணா சிலை அருகே)  நடத்தப்பட்டு செம்பறவையாக நடித்த நடிகைக்கு “குணச்சித்திர நடிகை” என்ற பட்டமும் சங்கத் தலைவரால்  வழங்கப்பட்டது. 

              மூன்று நாள்கள் கழித்து எனது முகவரிக்கு  ஒரு உள்நாட்டு அஞ்சல் வந்தது.  அதில்  “ கெடுக்கப்பட்டவள்  சாகத்தான் வேண்டுமா?  முடிவை மாற்றுங்கள்” என்று ஒரு பெண்ணிய வாதி சாட்டையைச் சுழற்றியிருந்தார். 


உங்கள் பார்வை என்ன? 

                --- அடுத்த தொடரில் “கரையேறிய அலைகள்” 






7 comments:

KILLERGEE Devakottai said...

மனம் கனக்க வைத்த கதை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வித்தியாசமான நிகழ்வுகளுக்கிடையே, அருமையான கதை.

Kasthuri Rengan said...

அனுபவங்கள் அருமை ...தொடார்கிறோம் அய்யா

Kasthuri Rengan said...

பெண்ணியவாதியின் கருத்து சரியே

கரந்தை ஜெயக்குமார் said...

பெண்ணியவாதியின் கருத்துச் சரியாகத்தான் தோன்றுகிறது ஐயா

இராய செல்லப்பா said...

இவ்வளவு சிறப்பான நாடகத்தை அப்போது தெரிந்து கொள்ளாமல் போனதற்கு வருந்துகிறேன். - இராய செல்லப்பா சென்னை.

இராய செல்லப்பா said...

இவ்வளவு சிறப்பான நாடகத்தை அப்போது தெரிந்து கொள்ளாமல் போனதற்கு வருந்துகிறேன். - இராய செல்லப்பா சென்னை.

Post a Comment