Thursday, May 30, 2013

கோடை அறிவியல் திருவிழா

              புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில் 2013 மே 28,29 ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழாவினை நடத்தியது.
                மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 குழந்தைகள் இத்திருவிழாவி்ல் கலந்து கொண்டனர்.
             முதல் நாள் அறிவியல் திருவிழா  தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டத் துணைத்தலைவர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தலைமையில் நடந்தது. டீம் ஸ்பெஷாலிடி மருத்துவமனை நிருவாக இயக்குநர் ரொட்டேரியன் மருத்துவர்  கே.ஹெச்.சலீம் அவர்கள் விழாவினைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை நகரத் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திரு ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். 
“எத்தனை எத்தனை ஆக்கத்திறமைகள் “ எனும் பாவலர் பொன்.க வின் பாடலோடு திருவிழா தொடங்கியது. மாணவிஜெ.சுபிக்ஷா தனது திருநெல்வேலி துளிர் இல்ல மாநில மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
             “ கற்பனையும் கைத்திறனும்“ எனும் தலைப்பில் மாநிலத் துணைத்தலைவர்                              திரு எஸ்.டி.பாலகிருஷ்ணன் முகமையர்களுக்கு பயிற்சியளித்தார்.அதனையடுத்து,   தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர் திரு பொன்.க.மதிவாணன் அவர்கள்                  “ மாயமில்லை மந்திரமில்லை“ என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி பங்கேற்பாளர் களை பிரமிக்க வைத்தார்.
               முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்குஇடைவேளையில் ரொட்டி,  மோரும், நண்பகல் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது. கவிஞர் ஆர்.நீலா அவர்கள் “ இயற்கையோடு வாழப்பழகு மனிதா” எனும் பாடல் பயிற்சியளித்தார்.

                பிற்பகல் அமர்வில் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் “ எளிய அறிவியல் ஆய்வுகளை“ செலவின்றி, குறைந்த செலவில் எப்படிச் செய்யலாம் என்பதைச் செயல்முறை விளக்கங்களோடு செய்துகாட்டி குழந்தைகளைச் செய்யப் பயிற்சியளித்தார். திரு பாலா அவர்கள் குழந்தைகளுக்கு“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்  “ எனும் தலைப்பில்பாடல்கள், விளையாட்டுகள்  நடத்தி உற்சாகப் படுத்தினார்.

               இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் பங்கேற்ற மாணவர்களின் பாடல்களோடு தொடங்கியது. மாணவி பா.அதிபா வரவேற்க, முதல்நாள் நிகழ்ச்சித் தொகுப்பினை மாணவர்கள் வழங்கினர்.
த.நா.அ.இயக்க நகரத் தலைவர் கவிஞர் ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் “கவிதை கற்போம் , கவிதை படைப்போம் ” எனும் தலைப்பில் மாணவர்களுக்குக் கவிதை எழுதப் பயிற்சியளித்தார். 

               அதனைத் தொடர்ந்து த.மு.எ.க.ச.மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் “கதைகேட்போம், கதை சொல்வோம் ” எனும் தலைப்பில் குட்டிக் கதைகள், விடுகதைகள், சொலவடைகள் முதலியவற்றைக் கூறி, மாணவர்களுக்குக் கதை எழுதும் பயிற்சியினை அளித்தார்.  ” வரைந்து பழகுவோமே” என்னும் தலைப்பில் ஓவியர் அண்ணாமலை அவர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஓவியம் வரையும் முறை, வண்ணம் தீட்டும் கலை ஆகியவற்றைக் கற்பித்தார். சிறந்த ஓவியங்களும், கவிதைகளும், கதைகளும் தேர்வு செய்யப்பட்டன. புதுக்கோட்டை நேரு இளையோர் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.சதாசிவம் அவர்கள் “ காகிதத்தில் கலை வடிப்போம் “ எனும் தலைப்பில், பல்வேறு தொப்பிகள் செய்யவும், பேசும் காகம் செய்யவும் பயிற்சியளித்தார். 
             
                 முகாம் குழந்தைகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டு, “ மரங்களோடு பேசுவோம் “ என்னும் கள ஆய்வுக்குச் சென்று பலவகை மரங்களை ஆய்வு செய்து  முகாமில் தொகுத்து அறிக்கை அளித்தது சிறப்பாக இருந்தது.

               நிறைவு விழாவிற்குத் தணிக்கையாளர் திரு எஸ்.தியாகராசன் அவர்கள் தலைமை யேற்றார். கவிஞர் நீலா வரவேற்க, மாநில செயற்குழு உறுப்பினர் சி.கோவிந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒவ்வொரு அமர்வுச் செயலிலும் சிறப்பான படைப்புகளை வழங்கிய மாணவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டப் பட்டனர்.  இரண்டுநாள் அறிவியல் திருவிழாவிலும் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வழங்கப் பட்டது.
               த.நா.அ.இயக்க மாவட்டப் பொருளாளர் திரு ம.வீரமுத்து அவர்கள் நன்றி கூற திருவிழா இனிதே நிறைவுற்றது.


No comments:

Post a Comment