Tuesday, June 11, 2013

தேசிய இளையோர் படைத் தொண்டர்களுடன்...

                    .11.06.2013 முற்பகல் புதுக்கோட்டையில், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.சதாசிவம் அவர்கள் தலைமையில் தேசிய இளையோர் படைத் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது.
                  
                     கணக்காயர் திருமதி இராசராசேசுவரி வரவேற்றார்.
                  
                     பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தேசிய இளையோர் படைத் தொண்டர் களுக்கு எழுச்சியுரையாற்றினார்.
                   
                   அவர் தனது உரையில் இன்றைய இளைஞர் போக்கும் நேற்றைய தொண்டர்கள் தியாகங்களும் பற்றிய ஒப்பீடுகளைச் சுட்டிக்காட்டினார். புகழுக்கும். பொருளுக்கும் மயங்காமல்  சமூக மேம்பாட்டிற்காகத் தன்னலம் கருதாமல்  உழைக்கும் இளைஞர்கள் இன்று ஏராளமாக இருந்தும் அவர்களை வழிநடத்தும் சரியான சமுதாயத் தலைவர்கள் இல்லாமையால்தான் வன்கொடுமைகளும் ஊழல்களும் பயங்கர வாதங்களும் தலைதூக்குகின்றன என்னும் கருத்தைப் பதிவு செய்தார்.
                  
                    தொண்டாற்றும் பாதைகளில் சந்திக்க வேண்டிய இடர்களை உறுதியோடு எதிர்கொண்டு , உணர்ச்சி வயப்படாமல் அறிவுப்புர்வமான செயல்களில் இளைஞர் ஈடுபட்டால் உலக நாடுகளில் நமதுநாடு உயர்ந்து நிற்கலாம் என்றார்.       

                   நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் இன்றும் நினைக்கப்படுவது அவர்களின் தன்னலம் கருதாப் பொதுநலத் தொண்டால்தான். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயலுங்கள், முனைந்து முன்னேறுங்கள்.. நாட்டை முன்னேற்றுங்கள் என எழுச்சி பொங்கக் கூறினார்.
                    நன்றியுரையாற்றிய விராலிமலை தேசிய இளையோர் படைத் தொண்டர் சதீஸ்குமார், இத்தகு உற்சாகமூட்டும் உரைகள் தங்கள் பணிசிறக்க பேருதவியாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment