Sunday, April 9, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர் -10


 விறுவிறுப்பும் பரபரப்பும்!!

                 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல மும்முரமா ஈடுபட்டு பி.யு.சி.யோட கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டு,  நாடகம், விளையாட்டுன்னு சுத்திக்கிட்டிருந்த என்னை,  அவர் வேலைபார்த்த இரயில்வே தட ஆய்வாளர் அலுவலகத்துல  ஒரு தற்காலிக வேலையில சேர்த்துவிட்டார் என் அப்பா.

            அந்த தடஆய்வாளர்  ஒருநாள் “ஏன் தம்பி ஏதாவது ட்ரைனிங் கோர்ஸ்க்கு அப்ளை பண்ணி வையேன் ” ன்னாரு. அப்படி விண்ணப்பிச்சிருந்ததுலே புதுக்கோட்டை தொழில் பயிற்சிக் கூடத்துல இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுல சேர்ந்து படிக்கிற வாய்ப்பு கிடைச்சது.

          கெடச்ச நேரத்துல தட்டச்சு லோயர் முடிச்சு ஹையர் பயிற்சிக்குப் போயிக்கிட்டிருந்தேன். அந்த  வாசவி நிறுவனத்தை நடத்துன நன்றிக்குரிய ஆசிரியர் சுந்தரேசன் “ ஏப்பா, ஆதார ஆசிரியர் பயிற்சிக்கு அப்ளிகேசன் போட்டு வை ” ன்னாரு. அம்மாவும் நச்சரிக்க அதுக்கும் விண்ணப்பிச்சு வச்சேன்.
 எதிர்பார்க்காம  புதுக்கோட்டை ஆதார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பும் வந்தது..கலந்துக்கிட்டுத் தேர்வும் ஆனது.  இப்போ அப்பா விருப்பப்படி  தொழிற்பயிற்சியைத் தொடர்வதா? அம்மா விருப்பப்படி ஆசிரியர் பயிற்சியில சேர்வதான்னு ஒரு இக்கட்டான நிலை. இறுதியில் அம்மா விருப்பப்படி ஏழே மாதத்தில் தொழிற்பயிற்சியை இடைவிட்டுட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன்.

சரி நாடக அனுபவங்களைச் சொல்றப்ப இந்த சொந்தக் கதை எதுக்குன்னு உங்க மனக்குரல் கேக்குது. 1967,1968 ஆண்டுகளில் நான் புதுக்கோட்டை ஆதார ஆசிரியர் பயிற்சியை விடுதியில் தங்கிப்படிக்க வேண்டியிருந்ததாலே  மணிமன்றத்தின் இரண்டு ஆண்டு நாடகங்கள் நடத்த முடியாமப் போச்சு. அதுக்குத்தான் அந்த முன்னுரை.

                   புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பயிற்சிப் பள்ளி விடுதியில் தங்கியிருந்தாலும் வாரம் ஒருமுறை தெரிஞ்சும் தெரியாமலும் வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவோட கொஞ்சநேரமும், மன்ற உறுப்பினர்களோட அதிக நேரமும் கலந்து பேசிக்கிட்டுத்தான் இருந்தேன்.

                இந்த இரண்டு ஆண்டு  நாடக ஏக்கத்தையெல்லாம் கொட்டித்  தீர்க்க அருமையான வாய்ப்பாக அமைந்தது 1969 பொங்கல் நாள்  அன்று மணிமன்றம் சார்பாக  இயல், இசை, நாடகம் மூன்றையும் சேர்த்து முத்தமிழ் விழா நடத்துவோம் எனக் குழு முடிவுசெய்திருந்தது. அந்தச் சமயத்துல செயல்திறமும்  கலை ஆர்வமும் மிக்க நாக.செயராமன் ங்கிற நண்பர் ( ஆர்.எம்,எஸ் ஸில் பணிபுரிந்தவர் )  மன்றத்தில் சேர்ந்து முத்தமிழ்விழாவைச் சிறப்பாக நடத்த நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். அதன்படி புதுக்கோட்டையில் அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த தமிழறிஞர்களைக் கொண்டு 
 “ நாட்டைக்காப்பவன் உழவனா? வீரனா? “ என்ற தலைப்பில் பட்டிமன்றமும், திருச்சி மாலா -பிச்சை ஹென்றி குழுவினரின் இன்னிசை நிகழ்வும்,அதனைத் தொடர்ந்து  “அவனா செய்தான்?” என்னும் மர்ம நாடகமும் நடத்த முடிவானது.


             மணிமன்றத்தின்  குறிப்பிடத்தக்க நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. அளவில் பெரிய அரங்கம்,  முதன் முதலாக இரண்டு பெண்பாத்திரங்கள் பங்கேற்கும் நாடகம், நடிகையர் படங்கள் பதித்த 1க்கு 4 துண்டறிக்கை . அதில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக எனது ஒளிப்படமும். 
( நடுவில் இருப்பது நானென்று நீங்கள் நம்பத்தான் வேண்டும்.. அது ஒரு கனாக்காலம்)  திரையரங்குகளில் சிலைடு மூலம் விளம்பரம் . இப்படி ஏகப்பட்ட விரிவான ஏற்பாடுகளில்  மன்ற உறுப்பினர்களும் தேனீக்களாய் உழைத்தனர்.

                  இந்த மேடை நாடகக் கதையிலும் காட்சிகளிலும் பல புதுமைகளைக் கையாளத் திட்டமிட்டிருந்தேன். .மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் பார்த்தது, இராஜேஸ்குமாரின் கிரைம் நாவல்கள் படித்தது இவற்றின் தாக்கத்தில்  ஒரு துப்பறியும் கதை உருவானது. இந்நாடகத்தில்  இரண்டு காதல் டூயட்கள், இரண்டு கேளிக்கை விடுதி நடனங்கள்,  சோகப்பாடல்,( முதன் முதலாகச் சொந்த மெட்டில் ) இரண்டு வீரம் காட்டும்  சண்டைக்காட்சிகள் , நகைச்சுவை, மலைக்குகை செட்டிங். நீதிமன்ற அமைப்பு, பாடல்கள் எனப் பல  அம்சங்கள் கலந்திருந்தன. 

               1968 ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடித்த கையோடு எழதத்தொடங்கி ஆறுமாதங்களாகக்  கதை, காட்சி அமைப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

                   பெண்பாத்திரங்களோடு மன்ற உறுப்பினர் நடிப்பதில முன்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் போக்க  திருச்சியிலிருந்து நடிகையரை இருமுறை பயிற்சிக்கு அழைத்து இணை நடிகர்களின் கூச்சம் படபடப்பு இவற்றை இலகுவாக்கினேன்.

                    செலவுகளைப் பற்றிக் கவலைப் படவேண்டாம் என நாக. செயராமன் தலைமையிலான் நிதிக்குழு தெம்பளித்ததால்   ( பொது நன்கொடையாளர்கள் மனமுவந்து அள்ளித் தந்தனர் ) அரங்க அமைப்பு  கூடுதலான இசைக்கருவிகளோடு  பாடல் பதிவு எல்லாம் சிறப்பானவையாகவே  அமைக்க முடிந்தது.

                வழக்கம்போல நாடகத்திற்கு முதல்நாள் இரவு இறுதி முழு ஒத்திகை  அந்தப் பகுதிப் பள்ளிக் கட்டடத்தில் ( அனுமதி பெற்றுதான் ) நடந்தது.  நடிகையர் இசைக்குழு. ஒளியமைப்பாளர் . ஒப்பனையாளர். அரங்கப் பொருள் கையாள்வோர் எல்லாம் கூட, இரவு 9.00 மணிக்கு ஒத்திகை தொடங்கியது 

                 27ஆவது காட்சியில்,  ஒரு மலைக் குகைப் பகுதியில் கடத்தி அடைத்து வைத்திருக்கும் கதைத் தலைவியை மீட்கச் சென்ற கதைத் தலைவனுக்கும் (கதாநாயகன்) , எதிர்த் தலைவனுக்கும்( வில்லன்)  சண்டை நடக்கும். அப்போது வில்லன் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழ, தன் இடுப்பிலிருந்த கத்தியால் கதாநாயகனை வில்லன் குத்த முயல்வான். கதாநாயகனைக் காப்பாற்ற கீழே கிடக்கும் துப்பாக்கியை கதைத்தலைவி  எடுத்து வில்லனைச் சுடுவதாகக் காட்சி.

               இதில் துப்பாக்கி வெடிச் சத்தம் இயல்பாக இருக்கவேண்டும் என்று எங்கள் குழுவில் சேர்ந்திருந்த வேட்டைக்காரர், தனது வேட்டைத் துப்பாக்கியில் வெறும் கருமருந்தை நிரப்பி வெடிக்கச் செய்வதாக  ஒத்துக்கொண்டிருந்தார்.( இதை யாருக்கும் சொல்லாமல் கமுக்கமாகவே வைத்திருந்தேன்)  சண்டைக்காட்சியைச்  சில திருத்தங்களோடு பயிற்சியளித்துக் கொண்டிருந்தேன். கதாநாயகி கையில்  துப்பாக்கியை எடுத்து வில்லனை நோக்கி நீட்ட, நான் கைதட்ட, வேட்டைத் துப்பாக்கியை  அவர்  வெளிப்பக்கமாக வெடிக்கச் செய்யவேண்டும். திட்டமிட்டபடி  குறித்த நேரத்தில் நான் கைதட்ட  துப்பாக்கி வேட்டுச் சத்தம் காதைப் பிளக்குமளவு கிளம்பியது. அவ்வளவுதான்  சுருண்டு விழவேண்டிய வில்லனுக்குப் பதிலாக கையில் துப்பாக்கியை வைத்திருந்த நடிகை அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு “அம்மா” வென அலறியபடி கீழே விழுந்தார். 

                 கூடியிருந்த அத்தனை பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லேர்ரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நடிகைக்கு என்ன ஆனது? 
                                                                                --- அடுத்த தொடரில் 

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சுட்டவரே சுருண்டு விழுந்துவிட்டாரா
வியப்பாக இருக்கிறதே ஐயா
காத்திருக்கிறேன்

Geetha said...

என்ன ஆச்சு?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரைப்படங்களை மீறும் அளவு விறுவிறுப்பு. துப்பாக்கிச் சத்தத்தின் முடிவினை எதிர்பார்க்கிறோம்.

Post a Comment