Tuesday, April 4, 2017

எனது மேடை நாடக அனுபவங்கள் தொடர்ச்சி -8

 எழுதாத வசனமும் நகைச்சுவையான நடப்பும்.

                       அடுத்த அனுபவத்தைப் பகிர்வதற்கு முன் கடந்த இரண்டு நாடகங்களின் துண்டறிக்கைகளை நீங்கள் பார்க்க வேண்டாமா?
 இதோ அவை.
16.06.1966ல் மணிமன்றம் நடத்திய மேடை நாடகத்தின் துண்டறிக்கை.(1க்கு16 கையளவு - சிதைந்தது போக மீதி.
இது இரண்டாவது படைப்பின் துண்டறிக்கை. 1க்கு 8 அளவு சிதைவின் மீதி.


இனி தொடர்வோம்...

         நடனம், பெண்பாத்திரத்தோடு நடந்த  நகைச்சுவையான நாடகத்தைப் பார்த்த பல இளைஞர்கள் மன்றத்தில்  வந்து சேர்ந்தார்கள் 
( உறுப்பினர் ஆண்டு சந்தா எட்டணா கட்டித்தான் )

             நாடகத்தைப் பார்த்த  ஊர்ப்பெரியவர்கள் வெளிப்படையாகப் பாராட்டினாலும் , இளைஞர் கூட்டம் இணைவதில் அவர்களுக்கு உள்ளுக்குள் பதைப்பு இருக்கத்தான் செய்தது.  

                 அடுத்தடுத்த  மாதாந்திர மன்றக் கூட்டங்கள் கலைகட்டத் தொடங்கியது. மன்ற வளர்ச்சியில் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் இன்னொரு பக்கம் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியும் இருந்தது. நாடக ஒத்திகை பார்க்க இடம் கொடுக்க மறுப்பு, ஊர்ப்பொது இடத்தில் நாடகம் நடத்தவிடாமல்  நகராட்சி. காவல் நிலையத்துக்கு மொட்டை பெட்டிசன் என்றெல்லாம் மறைவான இடையூறுகள் வரத்தொடங்கின. ஆனாலும் எது வந்தாலும் தடைகளை உடைக்கும்  திறன்வாய்ந்த சில புதிய உறுப்பினர்களின் தைரியத்தில் அடுத்த ஆண்டு உரிய அனுமதி பெற்று தொடர்வண்டிநிலைய சாலை வலது ஓரத்தில் நாடகத்தை நடத்துவது என்று முடிவானது. 

             ஆனால் அடுத்த நாடகம் பெண் பங்கேற்று நடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் குரலெழுப்பினர். நடிகை அரிமளம் சுகாசினி  என்ற பெண் அமெச்சூர் நாடகத்தில் நடிக்கிறார் என்று அவரைக் குறைவான சம்பளத்தில்
 ( 30 ரூபாய்தான் ) நடிக்க ஒப்பந்தம் செய்து கொடுத்தார் ஒப்பனையாளர் சுகி.

                ஊர்வாய், பெற்றோர் கண்டிப்புகளுக்குப் பயந்து பெண்களோடு நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலை தளர்த்தப் பட்டு பெண்பாத்திரம் குறைவாகப் பங்கேற்கும் வகையில் “பாசத்தின் முடிவு“ என்னும் நாடகத்தினை எழுதி முடித்தேன். 

             இப்போது அந்தக் கதாநாயகிக்கு கதாநாயகனாக யார் நடிப்பது என்பதில் பலருக்குத் தயக்கம்.( மறுநாள் பெத்தவங்கக்கிட்ட மொத்து வாங்கணுமேன்னுதான்) . ஒருவழியா உள்ளுரில் அறிமுகமில்லாத  கண்ணன் என்ற புதிய உறுப்பினரைக் கதாநாயகனா நடிக்க வைப்பதென முடிவானது.

நாடகத் தேதி, இடமெல்லாம் முடிவுசெய்து நோட்டீசும் அச்சாகி வந்து விட்டது.


               அந்தச் சமயத்தில்   அந்தப் பகுதிக்கு குடிவந்திருந்த  மணிநாதன் என்பவர் தனது மூத்த மகள் பிரேமாவை        ( பன்னிரண்டு வயது சிறுமிதான்)  நாடக மேடையில் நடன அரங்கேற்றம் செய்து வைக்க  வேண்டினார்.  அதற்குச் சம்பளம் ஏதும் வேண்டாம். என்றும் கூறினார். காசில்லாமல் இன்னொரு பெண் பங்கேற்பு என்றால் கசக்கவா செய்யும்? உறுப்பினர்கள் ஒப்புதலோடு  நாடகத்திற்கிடை இடையே   அவர் நடனமாட ஒப்பந்தம் ஆனது .

              இந்த நாடகத்திற்கு நடிகை மற்றும் இசைக்குழுவோடு ஒரு முழு ஒத்திகை பார்க்கத் தனி இடம் வேண்டுமே எனத் திணறியபோது அந்தப் பகுதியில் காளீசுவரி எண்ணெய் மில் வைத்திருந்தவர் இரவு கடலை காயப்போடும் இடத்தில் ஒத்திகைக்கு அனுமதி தந்தார்.

                       குறிப்பிட்டபடி நாடகத்திற்கு முதல்நாள் இரவு அந்த ஒத்திகையும் நடந்தது. ஆனால் நாயகன்-நாயகி காதல் நடனக் காட்சியைத் தனியாக மறுநாள் என் வீட்டில் வைத்துப் பயிற்சியளிக்கக் கதாநாயகன் கெஞ்சினான்       ( வெட்கமோ பயமோ )

       அதன்படி எனது வீட்டில் தனியிடத்தில் ( எனது தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு தென்னங்கீற்றுக் கொட்டகைதான்)  பாடல்களுக்கான ( திரையிசை மெட்டில் எழுதிய பாடல்கள் இரண்டு ) நடன அசைவுகளைப் பயிற்சி யளித்தேன். அந்த இடத்தில்  மின்வசதியில்லாததால் பேட்டரி போட்டு  ஒலிநாடாவில் பதிவு செய்த பாடலைத் திரும்பத் திரும்பப் போட்டதில் நாடா இடையில் சிக்கிக்கொண்டு சிக்கல் கொடுத்தது. 
அதை மன்றத் தலைவர் மின் நுட்பாளர் சுப்பிரமணியன் சரிசெய்து தந்தார்.

              ஒருவழியாய் 14.05.1966  அன்று  மேடையேறிய போது நான் சொல்லிக்கொடுத்த நடனங்களை மறந்து பாக்கியராஜ் பாணியில் உடற்பயிற்சி செய்து காதல் காட்சியை ஒருவழியாய் ஒப்பேத்தினான் கதாநாயகன்.

        இந்நாடகத்தில் நான் எழுதிய நகைச்சுவைக் காட்சிகளுக்கு நடித்த மாரிமுத்து மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தனர்.  

          எழுதாத நகைச்சுவை ஒன்றும் மேடையில் நடந்தது. காவல் உதவி ஆய்வாளராக நடித்த மாணிக்கம் என்பவர்  காவலர் சீருடையில் மேடைக்கு வந்து எதிரே இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் ( பல பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடித்ததால் அவ்வப்பகுதி மக்கள் பெருமளவு நாடகம் பார்க்க வந்திருந்தனர்)   பேச்சு வராமல் திகைத்துப் போய் அப்படியே நின்றுவிட, நான் பாடத்தை எடுத்துக்கொடுத்தும் பேசாமல் நிற்கவே பார்வையாளர்கள் பகுதியில் ஒரே சிரிப்பு விசில் சத்தம். நான் விசிலடித்து விளக்கணைத்து திரையை மூடி அவனைத் திட்ட அவன் எதிரே இருப்பவர்களைப் பார்த்துப் பயந்ததைக் கூறினான் . பயப்படாமலிருக்க வில்லனுடைய கூலிங்கிளாஸை ( கறுப்புக் கண்ணாடி) மாட்டிவிட்டு  அரங்கின் ஒளிர் விளக்கை அவன் முகத்தில் பாய்ச்ச ஒளியமைத்த  செல்வின் சாரிடம்  அறிவுறுத்தி, மீண்டும் அரங்கை உயிர்ப்பித்துத் தொடர்ந்தால் மீண்டும் வசனத்தை மறந்து கைகால்கள் உதற காவல் ஆய்வாளர் நின்ற கோலம் பெரிய நகைச்சுவையாய் ஆயிற்று. மீண்டும் அரங்கை மூடி அவனுக்குத் தெம்பளிக்க அவன் போட்டிருந்த  காக்கி ட்ரவுசர் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு பேசச் சொல்லி மேடையைத் திறந்தேன்.

இத்தனை சிகிச்சைக்குப்பிறகும் எழுதிப் பயிற்சி கொடுத்த வரிகளில் பாதியை விழுங்கி மீதியை மேடையில் துப்பி கூட நடித்தவர்களையும் குழப்பிய நிலையில் காட்சியை முடித்து வந்த அவனை  ஒப்பனை அறைக்குச் சென்று. கொடுத்தேன் ஒரு அறை.  பார்வையாளர்கள் சிரித்ததில் எனக்கு வந்த ஆத்திரம் அது. 

அதைவிட காவலராய் நடித்தவன் செய்த செயல் இன்னும் பெரிய நகைச்சுவையாய்ப் போயிற்று....

 ---- தொடர்கிறேன் அடுத்து    

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
காத்திருக்கிறேன் ஐயா

Mahasundar said...

மர்மக் கதை போல தொடர்கிறது ஐயா..தொடர்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

1966ஆம் ஆண்டின் அழைப்பிதழ்களைக் கண்டேன். காக்கி டவுசர் பாக்கெட்டுக்குள் கைவிடுவதற்குக் காரணம் தைரியத்தைக் காண்பிக்கவா? படபடப்பை மறைக்கவா?

Post a Comment